மீன் அமிலம்
இந்த சீசனில் முதன் முதலாய் மீன் அமிலம் முயற்சித்தேன். இதுவும் பஞ்சகாவ்யா மாதிரி ஒரு வளர்ச்சி ஊக்கி தான். பஞ்சகாவ்யா நாமே தயாரிக்க கொஞ்சம் கடினம் (நாட்டு மாட்டின் சாணம், கோமியம் என்று இங்கே நகரத்தில் எங்கே தேடுவது). நாமே தயாரிக்க கூடியது மாதிரி ஓன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று தேடி கிடைத்த தகவல்களை பட்டியலிட்ட போது மீன் அமிலம் எளிதாக இருந்தது.
செய்முறை மிக எளிது தான். மீன் கடைகளில் கிடைக்கும் மீன் கழிவுகள் தேவையான அளவு (அரை கிலோ என்று வைத்துக் கொள்வோம்) வாங்கி அதன் கூட அதே அளவு (அரை கிலோ) பொடித்த நாட்டு வெல்லம் கலந்து ஒரு காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்து நல்ல நிழலில் வைத்து விடவேண்டும் (சமையல் அறையில் பயன்படுத்தும் air tight container ஏதும் எடுத்துக் கொள்ளலாம்). வெறும் மீன் கழிவு, வெல்லம் மட்டும் தான். நீர் சேர்க்கக் கூடாது. இடையில் கலக்கி விட வேண்டிய அவசியம் இல்லை.
மூன்று வாரங்கள் (21 – 25 Days) கழித்து வெல்லமும் மீனும் கலந்து தேன் போல மாறி இருக்கும். இது செடிகளுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி. லிட்டருக்கு பத்து மி.லி அளவில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். மீன் வாடை போய் கொஞ்சம் பழ வாடை இருக்கும் என்கிறார்கள். ஆனால் கொஞ்சம் மீன் வாடை இருக்கத் தான் செய்கிறது. மீன் அமிலத்தை ஒரு காற்றுப் போகாத பாட்டிலில் அடைத்து வைத்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.
இந்த சீசனில் பஞ்சகாவ்யா பயன்படுத்தவே இல்லை. மீன் அமிலம் தான் படுத்தினேன். அதனால் தான் விளைச்சல் கிடைத்ததா என்று முடிவு செய்ய முடியாது. விளைச்சலுக்கு பல காரணிகள் இருக்கிறது. வளர்ச்சி ஊக்கி என்பது நாம் செடிகளுக்கு ஒரு கூடுதல் பலமாக எல்லா சீசனிலும் தெளிக்கும் ஓன்று. அவ்வளவே.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1