கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற உரையாடல்.
ஒரு சமயம், இருவரும் தோட்டத்தில், ஒரு அழகான பாதையில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை ஒன்றை அவர்கள் பார்த்தனர்.
கிருஷ்ணர் அதை சுட்டிக் காட்டியபடி, “அர்ஜுனா, அந்தப் பறவையைப் பார் – அது புறாதானே?” என்று கேட்டார்.
“ஆம் பிரபு! அது கண்டிப்பாகப் புறா தான்” என்று அர்ஜுனன் கூற முற்பட்டதும் கிருஷ்ணர், “சற்றுப் பொறு! கழுகு போல எனக்குத் தோன்றுகிறதே. அது ஒரு சமயம் கழுகோ?” என்று தொடர்ந்தார்.
“ஆமாம்! அது நிச்சயமாகக் கழுகு தான்” என்று அர்ஜுனனிடமிருந்து பதில் வந்தது.
“இல்லை, இல்லை! அது கழுகு மாதிரி இல்லை” என்று கிருஷ்ணர் கூறி, “கண்டிப்பாக அது காகம் தான்” என்றார்.
“சந்தேகமே இல்லை கிருஷ்ணா, அது காகமே தான்”, என்றவாறு அர்ஜுனன் பதிலளித்தான்.
இந்தத் தருணத்தில், கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அர்ஜுனனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு, “நண்பா, நீ என்ன குருடா? உனக்கு சொந்தமாகக் கண்கள் இல்லையா! நான் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறாயே?” என்று கேட்டார்.
அதற்கு அர்ஜூனன், “கிருஷ்ணா, நான் என் கண்களால் காணும் ஆதாரங்களை விட உங்கள் சொற்களின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் எது சொன்னாலும், அதை உருவாக்குவதற்கான சக்தி உங்களுக்கு இருக்கிறது. அதை ஒரு காகமாகவோ, புறாவாகவோ அல்லது கழுகாகவோ, நீங்கள் நினைத்தால் மாற்றலாம். ஆகையால், நீங்கள் ஒன்றினைக் காகம் என்று சொன்னால், அது காகமாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினான்.
நீதி:
பக்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கதையே சான்று. ஆசிரியர் மற்றும் கடவுளின் மீதும் இப்படிப்பட்ட நம்பிக்கையைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்மை தீமைக்கு இடையில் உள்ள போரை வெல்ல, கிருஷ்ணரின் மீது அர்ஜுனன் வைத்த இந்த பக்தியே காரணமாகும்.
ஆன்மீக வெற்றிக்கு மனப்பூர்வமான நம்பிக்கை அவசியம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் – கடவுள் பக்தனை விட பக்தியை மட்டுமே விரும்புவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1