குழந்தைப்பருவத்து கடின சூழல்களை மீறி தனது ‘சங்கீதா மொபைல்ஸ்’ நிறுவனத்தை மாபெரும் உயரத்திற்கு இட்டுச்சென்ற ஒரு தொழில் முனைவரின் கதை இது…
பெங்களூருவை மையமாகக் கொண்ட தொழில் முனைவர் சுபாஷ் சந்திராவை நீங்கள் காணும் பொழுது, நன்கு படித்த ஒருவர், அற்புதமாக தனது எண்ணங்களை மற்றவர்களிடம் எடுத்துக்கூறும் ஒருவர் என்றே நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர் படித்தது வெறும் 10ஆம் வகுப்பு மட்டுமே. அவரது படிப்பு என்பது வணிகத்தில் அவர் கற்ற பாடங்கள் தான் என்றால் நம்பக்கூட முடியாது.
20 வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளின் தேதிகள், அன்று நிகழ்ந்த ஒப்பந்தங்களின் மதிப்புகள் ஆகியவற்றை எந்தவித சிரமும் இன்றி இவரால் நினைவில் இருந்து கூற முடிகின்றது. அவ்வாறு இவரது வணிகத்திறன் வளர்ந்துள்ளது. இவரது குழந்தைப்பருவம் அவ்வளவு எளிதாக இல்லை. இவரது 7வது வயதில் தனது அன்னையை இழந்துள்ளார். அதே சமயம் அவரது தந்தையின் தொழிலும் சிறப்பாக நடைபெறவில்லை. 10 ஆம் வகுப்போடு தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தனது தந்தையின் தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார்.
அந்த தொழில் தான் இன்று ‘சங்கீதா மொபைல்ஸ்’ ஆக வளர்ந்து நிற்கின்றது. தென்னிந்தியாவில் அலைபேசிகளை கடைக்குச் சென்று வாங்க வேண்டும் எனக் கூறும் அனைவருக்கும் மனதில் நிற்கும் ஒரு பெயர் ‘சங்கீதா மொபைல்ஸ்’.
நாடு முழுவதும் 650 கிளைகள், 2000 கோடி வணிகம் என வளர்ந்து நிற்கின்றது இந்நிறுவனம். ஆனால் அனைத்து பெரிய நிறுவனங்கள் போல இதன் துவக்கமும் மிகவும் சிறிய இடத்தில் இருந்துதான் துவங்குகிறது. பெங்களூரு ஜேசி சாலையில் இவரது தந்தை 600 சதுரடியில் வீட்டு உபயோகச் சாதனங்கள் மற்றும் வினைல் இசை ரெகார்டுகள் விற்பனை செய்யும் கடையைத் துவங்கினார்.
சிக்கலான துவக்கம் : சுபாஷ் சந்திராவின் தந்தை நாராயண் ரெட்டி முதலில் விவசாயம் செய்தவர். பின்னர் சென்னையில் விஜய் ஹோம் அப்பளையன்சஸ் என்ற நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். அதன் பின்னர் அவரை அந்த நிறுவனம் பெங்களூருவிற்கு இடமாற்றம் செய்தது. ஆனால் அங்கு சென்ற மூன்றாவது மாதத்தில் சுபாஷின் அம்மா இறந்துவிட்டார். முதலில் 7 வயதான சுபாஷையும் அவரது 5 வயது தங்கையையும் நெல்லூரில் உள்ள தனது பெற்றோரிடம் அனுப்பிவைத்தார் நாராயண். ஆனால் தனது 8 ஆம் வயதில் தந்தையிடமே வந்துவிட்டார் சுபாஷ்.
1973 இல் எனது தந்தை சொந்தமாக ஜேசி சாலையில் வீட்டு உபயோக சாதனங்கள் விற்கும் கடை ஒன்றை திறந்தார். அதன் பெயர் ‘தி மெர்சென்ட்’. ஆனால் வணிகம் அவ்வளவாக வளரவில்லை. எனவே அதனை மூடவேண்டிய சூழல் உருவாகியது. ஆனால் சுபாஷின் தந்தை முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. மீண்டும் வீட்டு உபயோக சாதனங்கள் விற்கும் கடை ஒன்றை திறந்தார். அதன் பெயர் ‘சங்கீதா’.
மேலும் அந்த கடையில் இருந்த ஒரு அறையை ஒலி புகா வண்ணம் மாற்றி அமைத்தார். அங்கு வினைல் ரெக்கார்டுகள் கேட்டு வாடிக்கையாளர் வாங்கிச் செல்வதற்காக இந்த ஏற்பாடு. “சங்கீதாவில் வீட்டு உபயோகச் சாதனங்கள் மற்றும் இசைத்தட்டுக்கள் இரண்டும் விற்பனையானது. கடையை மேலும் இருவரோடு இணைந்து எனது தந்தை துவக்கி இருந்தார். அதற்கு ரூபாய் 20,000 முதலீடும் செய்திருந்தார்,” என்கிறார் சுபாஷ்.
ஆனால் மீண்டும் அவரது தந்தைக்கு தோல்வியே மிஞ்சியது. கடையில் உட்புற அலங்காரத்தில் அதிகச் செலவுகள் செய்த காரணத்தால், பொருட்கள் வாங்க முதலீடு போதவில்லை. இதனால் விற்பனை குறைந்து மீண்டும் நாராயண் சிக்கலில் தவித்தார். ஒரு சமயம் கடையை விற்க நினைத்தாலும், யாரும் வாங்க முன்வரவில்லை. ஒருவர் பின் ஒருவராக இருந்த இரண்டு கூட்டாளிகளும் பிரிந்து சென்றனர். எனவே கடையின் மொத்த உரிமையும் நாராயண் பெற்றார்.
பல நாட்கள் சுபாஷும் நாராயனும் கடையிலேயே தங்கி, அருகில் இருந்த உணவகங்களில் உணவருந்தி வந்துள்ளனர். ஆனால் தந்தையின் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற வெறி சுபாஷிடம் இருந்தது. சில வருடங்கள் கடையில் உதவி செய்து வந்துள்ளார். இதனிடையே 1982ல் தனது 16ஆம் வயதில் படிப்பை விடுத்து, சங்கீதாவை நடத்தத் துவங்கினார் சுபாஷ்.
அலைபேசிகளின் அறிமுகம் : “என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என எனது தந்தை விரும்பினார். காரணம் நான் எனது வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன். ஆனாலும் நான் விடாப்பிடியாக படிப்பை விடுத்து சங்கீதாவை நடத்தத் துவங்கினேன்,” என்கிறார் சுபாஷ். இந்த நேரத்தில் தான் தொலைக்காட்சிகள் சந்தையில் அறிமுகம் ஆயின. சங்கீதா அவற்றை விற்கத் துவங்கியது. அதன் மூலம் கடனில் மூழ்கியிலிருந்த நிறுவனத்திற்கு ஒரு உதவிக்கரம் கிட்டியது. அத்தோடு நில்லாமல் கணினி மற்றும் பேஜர்களையும் விற்கத்துவங்கினார் சுபாஷ். இதன் மூலம் பல்வேறு மின்னணு சாதனங்கள் விற்கும் நிறுவனமாக மாறியது சங்கீதா.
1997ல் முதன் முதலாக இந்தியாவில் அலைபேசிகள் அறிமுகமானது. இந்த புதிய தொழில்நுட்பத்தை தவறவிட சுபாஷ் தயாராக இல்லை. “அவற்றை பார்த்தவுடன் நான் அவற்றை விற்க வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டேன். முதன் முதலாக நான் விற்ற அலைபேசி சோனி நிறுவனம் தயாரித்தது. அதன் விலை ரூபாய் 35,000. அன்றைய நிலையில் அது மிகவும் அதிகத் தொகையாகும்,” என்கிறார் சுபாஷ்.
ஸ்பைஸ் டெலிகாம் மற்றும் ஜேடீ மொபைல்ஸ் நிறுவனங்களோடு சுபாஷ் ஒப்பந்தம் செய்து கொண்டு சிம் கார்டுகள் விற்கத்துவங்கினார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் சங்கீதா நிறுவனம் அதிக வருமானம் பெறத்துவங்கியது. அந்த நாட்களில் ஒரு ப்ரீபெய்டு சிம் கார்ட் விலை ரூபாய் 4856. இந்த தொகையில் சங்கீதாவிற்கு ரூபாய் 3000 தரகாக கிடைத்தது.
“தரகு அதிகமாக இருந்ததன் காரணம், அந்நாட்களில் சிம்கார்ட் விலை அதிகமாக இருந்தது, எனவே புதிய வாடிக்கையாளர்கள் பெறுவது மிகவும் சிரமாக இருந்தது. ஒரு நிமிடம் பேசுவதற்கு கைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.16.80 வசூலித்தனர். எனவே வாடிக்கையாளர்கள் பெறுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்றார்.
சங்கீதாவில் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி அல்லது மற்றப் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் சுபாஷ் கைபேசிகள் பற்றியும், சிம் கார்டுகள் பற்றியும் கூறினார். அவரது முயற்சி மூலம், ஒரு மாதத்தில், 30 சிம்கார்டுகள் விற்பனையில் இருந்து சங்கீதா 1900 சிம் கார்டுகள் வரை விற்கத் துவங்கியது. இவை நிகழ்ந்தது அனைத்தும் அதே ஜேசி சாலை கடையில் தான்.
“எப்பொழுதும் நான் வெற்றிகளை மட்டுமே சுவைத்து வந்தேன் எனக் கூறுவது தவறு. பல பொருட்களை முயற்சித்து பார்த்தேன். அன்று எது புதிதாக உள்ளதோ அதனை விற்பனை செய்ய முயன்றேன். தொலைபேசிகள் வந்தபொழுது நம்பிக்கை வைத்து இறங்கினேன். அதில் வெற்றியும் பெற்றேன். எனது குழந்தைப்பருவம் என்னை வலுவாக்கியது. எனது மொத்தத்தையும் சங்கீதா மொபைல்ஸுக்கு கொடுத்தேன்,” என முடித்துக்கொண்டார் சுபாஷ்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1