ஒரு சதாரண இந்தியக் குடும்பம் சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மருத்துவ செலவுக்கு ஒதுக்கி வைக்கும் நிலை இருக்கிறது. ஏனென்றால் மருத்துவரை ஒரு காய்சலுக்கு சென்று பார்த்து வந்தால் கூட மாத பட்ஜெட்டில் நெருக்கடி வரும் அளவு பில் வந்துவிடும்.
இந்த காலத்திலும் பாட்னாவில் ஒரு மருத்துவர்கள் குழு கிராமங்களுக்கு சென்று ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவர்கள் கிராமங்களுக்குச் சென்று முகாம்களை நடத்துகின்றனர். பாட்னா ஏய்ம்ஸ் மருத்துவரான டாக்டர் ராமன் கிஷோர் இந்த முகாம்களை ஒருங்கிணைக்கிறார்.
ராமன் கிஷோர் தலைமையில் இயங்கும் மருத்துவ குழுவில் உள்ள மற்ற மருத்துவர்களும் ஏய்ம்ஸில் பணியாற்றுகின்றனர். இதற்காக 4 ஆண்டுகள் ராமன் உழைத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளில் முகாம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையே இருந்ததில்லை என்கிறார் ராமன். இதுவரை பாட்னாவிலிருந்து 30 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் 89 இடங்களில் முகாம் அமைத்துள்ளனராம்.
இதுவரை 10,000க்கும் அதிகமான மக்களுக்கு இலவசமாக இவர்கள் மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளனர். இந்த செலவுகளுக்காக தனது சம்பளத்தில் இருந்து 70-80 விழுக்காடு செலவு செய்வதாக ராமன் கிஷோர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அதுவும் பீகார் போன்ற ஒரு வளர்ச்சியடையாத மாநிலத்தில் எல்லாருக்கும் மருத்துவ வசதிகள் சென்று சேர்வதில்லை. மக்களுக்கு தங்கள் நோய்களைப் பற்றி புரிதல் இல்லாமல் இருப்பதனால் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
ராமன் எம்.பி.பி.எஸ் முடித்த பின்னர் இண்டர்ன்ஷிப் செய்த கிராமங்களில் தங்களது நோய்குறித்த விழிப்புணர்வு இல்லாமல் முடக்குவாதத்துக்கு ஆளாவதைப் பார்த்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களே அவருக்கு இந்த முகாமைத் தொடங்க உந்துதலாக இருந்துள்ளது.
இப்போது முகாமிடும் அவர்களின் குழுவில் உள்ள மருத்துவர்கள் ஒவ்வொருமுறையும் சந்திக்கும் நோயாளிகளை சரியாக நினைவில் வைத்துக்கொள்கின்றனர். இதற்காக நோயாளிகளின் தகவல்களை சேமித்து வைக்கும் செயலியையும் உருவாக்கியுள்ளனர்.
தொடக்கத்தில் ராமன் கிஷோர் தனியாக கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்துள்ளார்; இப்போது அவருக்கு கீழ் ஒரு குழு செயல்படுகிறது.
அவசரமாக பணத்துக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில் திங்கள் முதல் சனி வரை வேலை செய்யும் எவரும் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் மக்களுக்கு சேவையாற்ற முன்வர மாட்டார்கள். அந்தவகையில் ராமன் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் ஆற்றும் சேவை மகத்தானது.