நாட்டின் பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பே கல்லூரியில் இருந்து அப்படியொரு அழைப்பு தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கு வரும் என்று முகேஷ் அம்பானி சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை.
இரும்புக் கொல்லன் பட்டறையில் ஈ-க்கு என்ன வேலை? இதுபோலத் தான் நினைத்துவிட்டார் முகேஷ் அம்பானி. டெக்னாலஜி கல்வி நிறுவனமான ஐஐடி பாம்பேயில் சிறப்பு உரையாற்ற வருமாறு ஆகாஷ் அம்பானியை அழைத்திருப்பதன் காரணம் என்ன. அவருக்கும் டெக்னாலஜி படிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையே. இப்படியெல்லாம் வியப்போடும் குழப்பத்தோடும் யோசித்தார் முகேஷ் அம்பானி.
அவரது மகனான ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக பதவி வகித்து வருகிறார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஐஐடி பாம்பேயில் நடைபெற்ற டெக்ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் ஒரு கலந்துரையாடலுடன் சிறப்புரையாற்றுவதற்காக ஆகாஷ் அம்பானி அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவில் ஆகாஷ் பேசுகையில், ஐஐடி பாம்பேயில் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பப்பட்டியலில் ஒன்றாக இருந்தது. எனது வாழ்க்கையில் எப்போதும் எனது இன்ஸ்பிரேஷனாக உள்ள தந்தை முகேஷ் என்னை எப்போதும் ஒரு இஞ்சினியராக்க வேண்டும் என்றே விரும்பியிருந்தார். உண்மையைப் போட்டு உடைக்க வேண்டுமென்றால் நான் ஒரு இஞ்சினியரே இல்லை என்று கூறியபோது அரங்கமே சிரிப்பலையாலும் கைத்தட்டல்களாலும் அதிர்ந்து குலுங்கியது.
தொடர்ந்து அவர் பேசுகையில், இப்படிப்பட்ட என்னை இந்த பெருமைக்குரிய இஞ்சினியரிங் கல்லூரிக்கு உரையாற்ற அழைத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் உண்மையிலேயே இங்கு உரையாற்றுவதற்கு வந்திருக்கேனா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு சாட்சியாக எனது மனைவி ஷ்லோகாவை உடன் அனுப்பி வைத்துள்ளார் எனது தந்தை முகேஷ் என்று நகைச்சுவையுடன் கூறினார்.
ஆகாஷ் அம்பானியின் தனது உரையில், டெக்னாலஜி, இன்னொவேஷன், எதிர்வரும் முன்னேற்றங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார். டெக்னாலஜி என்பது சமஉரிமைக்கான ஒரு சக்திவாய்ந்த உந்துதல் என்றும், பிரிவுபட்டுள்ள தேசங்களையும் மக்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழ்கிறது என்றும் ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸில் நிகழ்ந்து வரும் அசுர வளர்ச்சி பற்றியும் விளக்கமாகப் பேசினார். பிரெய்ன் கம்ப்யூட்டிங், குவான்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவர ரிலையன்ஸ் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு பற்றியும் எடுத்துச் சொன்னார்.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த உலகில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள வைக்கச் செய்யலாம் என்றார். இறுதியாக, எதிர்காலத்தில் ஐஐடி பாம்பேயுடன் ரிலையன்ஸ் இணைந்து BharatGPT என்ற திட்டத்தின் மூலம் புதுமைகளின் எல்லை வரம்புகளை விரிவுபடுத்துவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளை செயல்படுத்தும் நோக்கமுள்ளது என்றார். இதனிடையே இடம் பெற்ற கேள்வி பதில்கள் செஷனில் மாணவர்கள் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் திறம்பட பதில் தந்து அயரவைத்தார்.
சமூக நலனுக்காக மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்றும் அதேசமயத்தில் தங்களது சுயவிருப்பங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தோல்விகளை ஏற்றுக் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து நேர்மையுடன் உழைக்க வேண்டுமென்றும் ஆகாஷ் அம்பானி அறிவுறுத்தினார்.
எதிர்வரும் காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் டெக்னாலஜி துறை மிகப் பெரிய உச்சத்தைத் தொடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவரது இந்த சிறப்பான பேச்சால் ஐஐடி பாம்பே மாணவர்கள் தங்களுக்குள் ஒரு புதிய எழுச்சியை உணர்ந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1