முதல்மரியாதை (1985) ..
முதல் மரியாதை படம் ரிலீஸ் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள்,இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி!
அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு.
திருப்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடையும், ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது.
காதல் தோல்வியடைந்த இளசுகள் மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் பூங்காற்று திரும்புமா ஏம் பாட்ட விரும்புமா கெஞ்சிக் கூத்தாடி ரிபீட் கேட்டார்கள். ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவை அண்ணாந்து பார்த்தது.
முதல்மரியாதையில் ‘எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகணும் சாமீ’என்று சிவாஜியிடம் வேலுச்சாமி கேட்கும் வசனத்தையும் ‘அதோ தூரத் தெரியுதே ரெண்டு பனைமரம் அதுக்கு பின்னால என்னய்யா இருக்கு?’ என்ற வசனத்தையும் ‘ அந்த நிலாவத்தானா நான் கையில புடிச்சேன்’என்ற பாடலையும் ‘இந்த சிறுக்கி அறியாத வயசுல ஒரு தப்பை பண்ணிட்டேன்.திருவிழாவுக்கு போன இடத்துல வயித்துல ஏத்திக்கிடு வந்து நின்னேதான்.இல்லன்னு சொல்லல.அதுகாக நாலு வெள்ளாடும் துருப்பிடிச்ச தொறட்டிக் கம்புமா வந்த வெறும் பைய கையில புடிச்சிக்கொடுத்துட்டு செத்தானே என் அப்பன் அவன சொல்லணும்’என்று வடிவுக்கரசி வைக்கும் ஒப்பாரியையும் வைத்து, விபரம் அறிந்த பிறகு என் பழைய நினைவுகளை மீட்டேன். சிவாஜி ராதாவோடு சேர்ந்து ஆற்றில் மீன் பிடிப்பதும் அதைக் கொண்டு வந்து சமைத்து ராதா சிவாஜியை சாப்பிட அழைப்பதும் வேண்டாம் வேண்டாம் என்று பிகு பண்ணிக்கொண்டே பின்னால் நடிகர் திலகம் மீனை உருஞ்சி உருஞ்சி ருசிப்பதும் அபாரமானக் காட்சிகள்.
‘பூங்காற்று திரும்புமா ஏம் பாட்ட விரும்புமா… பாராட்ட… மடியில் வசுத்தாலாட்ட எனக்கொரு தாய்மடி கிடைக்குமா…’
என்ற பாடல் வரிகள் இன்றும் ஏதோ ஒரு பயணத்தில் பின்னிரவு வானொலியில் என காதுகளில் தாலாட்டாய் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1