Entertainment lifestyles News

லட்டு விற்பனையில் ரூ.2 கோடி சம்பாதிக்கும் இஞ்சினியர்கள் தம்பதி..

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாந்தீப் ஜோகிபர்த்தி. இவரது மனைவி கவிதா கோபு. இருவரும் பொறியியல் பட்டம் படித்துவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வேலை பார்த்து வந்தனர்.

இருந்தாலும் சாந்தீப் ஜோகிபர்த்திக்கு சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு திரும்பி சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இதே ஐடியா கவிதா கோபுவுக்கும் இருந்தது. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்த பின்னர் தங்களது கனவை நனவாக்குவதற்காக ராஜிநாமா செய்துவிட்டு ஹைதராபாத்துக்கு 2019 ஆம் ஆண்டு திரும்பினர்.




அதன்பின்னர் சுமார் 6 மாதங்களுக்கு சாந்தீப் நாடு முழுவதும் பயணம் செய்து தொழில்வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் மக்களுக்கு என்னத் தேவைப்படுகிறது, டிமாண்டுக்கும் சப்ளைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து டீடெய்லாக அறிந்து கொண்டு அதில் தேர்வு செய்த தொழில்களை ஷார்ட் லிஸ்ட் செய்தார். இதில் ஃபுட், ஹெல்த் செக்மெண்ட் ஆகிய இரண்டுதான் பிரதானமாக சாந்தீப்புக்கு தெரிந்தது. இது பற்றி அவர் கூறுகையில் ‘கல்லூரிக் காலத்தில் எனக்கு சொத்தைப் பல் இருந்தது.

அது மனசுக்குள் குறுகுறுத்ததால் இனிப்பு தவிர வேறு ஆரோக்கியமான விஷயம் இருக்கிறதா என்று யோசித்தேன். மார்க்கெட்டில் பலவிதமான எனர்ஜி பார், புரொட்டீன் பார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பேரே தெரியாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட ஐட்டங்கள் இருந்தன. அதிக புரொட்டீன் நிறைந்த பார்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. இந்த பார்களை சாப்பிட்டால் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற கோளாறுகள் ஏற்படலாம். இந்திய மக்களிடையே எனர்ஜி பார் அவ்வளவு பாப்புலராக இல்லை. சில ஃபிட்னஸ் விரும்பிகள் மட்டுமே அதை ரெகுலராக சாப்பிடுகின்றனர். இதனால் இனிப்பு வேண்டுபவர்களை திருப்திப்படுத்தும் அதேவேளையில் அந்த தயாரிப்பு ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்’ என்றார்.




நம் நாட்டில் ரசகுல்லா, குலாப்ஜாமூன், பர்ஃபி, சோன் பப்டி, பேடா, லட்டு போன்ற இனிப்புகள் விற்பனை 2023ல் மட்டும் ரூ.6229.7 கோடி என்று மார்க்கெட்டிங் அண்டு ரிசர்ச் நிறுவனமான IMARC குரூப் ஆய்வறிக்கை கூறுகிறது. பேக்கேஜ்டு ஸ்வீட் ஐட்டங்களின் விற்பனை 2032 ஆம் ஆண்டுக்குள் ரூ.25,970.8 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ரெடி-டூ-சர்வ் உணவுகளை நாடத் தொடங்கும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ஈஸியாக கிடைக்கும் பேக்கேஜ்டு ஸ்வீட்கள் போன்ற விஷயங்கள் நாட்டின் பேக்கேஜ்டு ஸ்வீட் டிமாண்டுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே இந்த டிமாண்டில் ஒரு கொசுறு அளவையாவது நாம கைப்பற்ற வேண்டும் என சாந்தீப்பும் கவிதாவும் முடிவு எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பொதுவாக வீடுகளில் பயன்படுத்தும் பாரம்பரியமான லட்டு பற்றி ஆராயத் தொடங்கினர். சர்க்கரையில் இருக்கும் பிரயோஜனப்படாத கலோரிக்கு மாற்றாக ஆரோக்கியமான ஒரு பொருள் வேண்டும் என்பதுதான் அவர்களது ஐடியாவே. இதனால் அவர்கள் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தைத் தேர்வு செய்தனர்.




ஏனென்றால் இந்த வெல்லம் சுத்திகரிக்கப்படாத இயற்கையான இனிப்பு வகையாகும். இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள் அடங்கியுள்ளன. அதேவேளையில் சர்க்கரையில் எந்த ஊட்டச்சத்துகளும் கிடையாது. எனவே அவர்களது சாய்ஸ் வெல்லம். இதைத் தொடர்ந்து 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்து கையால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை பல்வேறு கண்காட்சிகள், ஐடி கம்பெனிகளில் ஸ்டால் போட்டு மார்க்கெட்டிங் செய்தோம். இந்நிலையில் தங்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஃபாலோ அப் கால்களும், பல்க் ஆர்டர்களும் வரத் தொடங்கின என்று சாந்தீப் கூறினார்.

2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் லட்டு பாக்ஸ் (Laddu Box) என்ற நிறுவனத்தை சாந்தீப்பும் கவிதாவும் தொடங்கிய சில நாட்களிலேயே கோவிட் தொற்றுநோய் தாக்குதல் வந்து விட்டது. இந்த நிலைமையில் தங்கள் ஸ்டார்ட்அப்பை நடத்துவதற்கு ரெகுலரான வருமானம் இல்லாமல் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். ஆனாலும் வியாபாரத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் சகஜம் என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கோவிட் தற்காப்புக்காக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரவியிருந்தது, லட்டு பாக்ஸ்க்கு பெரிய சாதகமாக அமைந்தது. தொடக்கத்தில் நான்கு ஐட்டங்களுடன் தயாரித்து விற்ற லட்டு பாக்ஸ் இப்போது மல்டிகிரெய்ன் லட்டு, சிறுதானிய லட்டுகள், பாசிப்பருப்பு லட்டு, ஆளி விதை லட்டு, உலர் பழங்கள் லட்டு, நிலக்கடலை லட்டு உள்பட 15 வகையான ஆப்ஷன்களைத் தருகிறது. கையால் தயாரிக்கப்படும் லட்டு பாக்ஸின் இனிப்பு வகைகளில் சர்க்கரை, செயற்கை நிறங்கள், மணமூட்டிகள், பதப்படுத்தல் ரசாயனங்கள் போன்ற எதுவும் சேர்க்கப்பட்டிருக்காது என்கிறார் சந்தீப்.




சந்தீப்பும் அவரது மனைவியும் வியாபார செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கின்றனர். இவர்கள் தவிர முழுநேரப் பணியாளர்கள் மூன்று பேர் உள்ளனர். லட்டு பாக்ஸின் 2023 ஆம் ஆண்டின் வருடாந்திர டர்ன்ஓவர் ரூ.2 கோடி ஆகும். 2025 ஆம் ஆண்டுக்குள் பெங்களூரு, ஹைதராபாத், புணே, மும்பை, தில்லி என்சிஆர் பகுதிகளில் 100 கடைகளை திறக்க லட்டு பாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லட்டு பாக்ஸின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் தாங்கள் ஆரோக்கியத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதுதான். செயற்கை சர்க்கரையில் அபாயகரமான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இதனால் அதை சேர்ப்பதில்லை.

அதேவேளையில் வெல்லத்தில் கலப்படம் நடப்பதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதால் அதன் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளிடமிருந்து நேரடியாக வெல்லத்தை கொள்முதல் செய்கிறோம். சிறுதானியங்கள் குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதால் கம்பு, கேப்பை, திணை போன்றவற்றைப் பயன்படுத்தி லட்டுகளை தயாரிக்கின்றோம் என்று சந்தீப் பெருமையுடன் கூறுகிறார். சிறுதானியங்களில் இயற்கையாகவே உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய புரதங்கள், நார்ச்சத்து, முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதனிடையே சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை மத்திய அரசு விளம்பரப்படுத்தி வருவதும் லட்டு பாக்ஸுக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது.

சிறுதானிய லட்டுகள் மட்டுமல்லாமல் தேங்காய் லட்டு, ரெய்சின், முந்திரி, கிரான்பெர்ரி கலந்த டிரை ஃபுரூட் லட்டு, வீகான் லட்டும் அந்த நிறுவனத்தின் பிரபல ஐட்டங்கள் ஆகும். இத்துடன் ஸ்டீவியா ரெபாவுடியானா என்ற செடியை இயற்கையான இனிப்புச் சுவைக்காக லட்டு பாக்ஸ் பயன்படுத்துகிறது. இந்தச் செடியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியா சாறானது, ரெகுலர் சர்க்கரையைக் காட்டிலும் 250 மடங்கு இனிப்புச்சுவை கொண்டதாகும்.




ஸ்டீவியாவினால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. உடல் பருமன் ஏற்படாது. அதில் மிகக் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் சத்து உள்ளது. கலோரி சுத்தமாகக் கிடையாது. லட்டு பாக்ஸின் ஸ்வீட் பாக்ஸ்கள் ரூ.99 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கிப்ட் ஹேம்பர் வடிவிலும் தரப்படுகிறது. லட்டு பாக்ஸின் ஒரு லட்டின் எடை 28 கிராம். பொதுவாக விற்கப்படும் லட்டுகள் 40 கிராமாவது இருக்கும். லட்டு பாக்ஸ் லட்டு சிறிய அளவில் இருப்பதால் வேஸ்ட் ஆகாது. அத்தோடு அளவோடு சாப்பிடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

லட்டு பாக்ஸ் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் நாடுமுழுவதுமாக, B2B சேனல்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டோர் ஆகிய மூன்று வழிகளில் சப்ளை செய்கிறது. ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சோமாட்டோ மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசின் ‘Feeding India’ என்ற ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் நலிவடைந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிறுதானிய லட்டுகளை வழங்குவதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை லட்டு பாக்ஸ் செய்து கொண்டுள்ளது.




What’s your Reaction?
+1
1
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!