மகாபாரதம் நடந்து முடிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அதில் உள்ள கதாபாத்திரங்கள் கால வெள்ளத்தில் அழியாமல் உயிர்ச்சித்திரங்களாக இன்றும் இருக்கின்றன. பெயர்கள்தான் வேறாக இருக்கும் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக அப்போது நடந்த நிகழ்வுகள், இப்போதும் பொருந்துகின்றன. அன்று நடந்த அப்படி ஒரு கதையை தெரிந்து கொள்ளுவோம் !
கிருஷ்ணன் தனது தங்கை சுபத்திரையை பாண்டவர்களில் பராக்கிரமியான அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். பலராமன் சுபத்திரையை கௌரவர்களில் மூத்தவன் துரியோதனுக்கு மணமுடிக்க விரும்பினார். கிருஷ்ணனின் விருப்பமா, பலராமனின் தேர்வா என்று சகோதரர்களுக்குள் பெரும் போராட்டம் நிலவியது. சில பல சூழ்ச்சிகளுக்குப் பிறகு கிருஷ்ணனின் விருப்பமே நிறைவேறியது. சுபத்திரை அர்ஜுனனை மணந்தாள்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த நேரம். சுபத்ரையின் வளைகாப்பு பாண்டவர்கள் தங்கியிருந்த கானகத்தில் நடந்துகொண்டிருந்தது.
அரண்மனையில் என்றால், ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். இதுவோ கானகம். பெரிதாக எவரும் இல்லை. அத்தனை தடபுடலாகவும் இல்லை. கண்ணீருடன் சிவ வழிபாட்டில் இருந்த சுபத்ரைக்கு குந்திதேவி ஆறுதல் சொன்னார்.
”எனது பிள்ளைகளை மிஞ்சும் பராக்கிரமசாலிகள் இந்த உலகில் இல்லை. ஆனாலும், அவர்கள் விதியின் சூழ்ச்சியால் மரவுரி தரித்து பரதேசிகளைப்போல் இந்த வனத்தில் சுற்றித் திரிகிறார்கள். திறமை வாய்ந்த பிள்ளைகள் வேண்டுமென கேட்டேனே ஒழிய யோகமான பிள்ளைகள் வேண்டுமென நான் கேட்க மறந்துவிட்டேன். நான் வாங்கிய வரம் அப்படி. அதனால் கால் காசு யோகமுள்ள பிள்ளைகள் வேண்டுமெனக் கேள்!” என்று கூறினார். அதுபோல் ஒருவருக்கு எத்தனை திறமைகள் இருந்தாலும், அவருக்கு யோகம் இருந்தால்தான் அது வெற்றியாக மாறும்.
What’s your Reaction?
+1
+1
3
+1
+1
+1
+1
1
+1