கர்ணன் போரில் அருச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது கிருஷ்ணர் கர்ணனின் கொடை தன்மையைச் சோதிக்க ஏழை அந்தணராக கர்ணனிடம் வந்தார். கர்ணா! கர்ணா! என்று அழைத்துக் கொண்டே வந்தார் அப்போது கர்ணன் ஐயா நீங்கள் யார்? என்று வினவினார். அதற்கு ஏழை அந்தணராக வந்த கிருஷ்ணர், கர்ணா உனது கொடையைப் பற்றி அனைவரும் கூறியதைக் கேட்டு வந்தேன். தற்போது உன்னிடம் ஒரு யாசகம் வேண்டும் என்றார். அதற்கு கர்ணன் ஐயா! என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் தருகிறேன் என்று வாக்களித்தார்.
கிருஷ்ணர் தங்கம் கேட்டார்
“எனக்கு கொஞ்சம் தங்கம் வேண்டும் ஐயா!”, என்றார் கிருஷ்ணர். அதற்கு கர்ணன் தன் வாயைத் திறந்து பற்களுக்காக அணியும் தங்க கவசத்தைக் காட்டி, “இதை நான் உங்களுக்குத் தருகிறேன், இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றார். விரக்தியின் தொனியில் கிருஷ்ணர், “நான் உங்களின் பற்களை உடைத்து எடுத்துக் கொள்வேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? நான் அவ்வளவு கொடுமையானவனா என்று வினவினார். எனவே கர்ணன் ஒரு கல்லை எடுத்து தன் பற்களைத் தட்டி அந்த தங்கத்தை எடுத்து அந்த அந்தணருக்குத் தானமாக வழங்கினார்.
அந்தணர் போர்வையில் இருந்த கிருஷ்ணர் கர்ணனை மேலும் சோதிக்க “என்ன இந்த இரத்தம் சொட்டும் பொருளை எனக்குத் தானமாக கொடுக்கிறீர்களா? இதனை என்னால் ஏற்க முடியாது” என்றார். உடனே கர்ணனால் அந்த அசைய முடியாத நிலையிலும் சுவாமி நில்லுங்கள் என்று தன்னுடைய அம்புகளை எடுத்து வானத்தை நோக்கி எய்தினார். அதனால் மழை பொழிந்தது அந்த மழை நீரில் தன்னுடைய பற்கவசத்தைக் கழுவி தன் கைகளால் அவருக்கு வழங்கினார்.
கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துதல்
கர்ணன், ஐயா நீங்கள் யார் என்று அந்த அந்தணரிடம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் தன்னுடைய உருவத்தைக் காட்டி கர்ணனிடம் “உன்னுடைய தான உணர்வைச் சோதிக்கவே நான் அந்தணராக வந்தேன். உன்னுடைய உயிர் போகும் நிலையிலும் தானம் செய்யும் உணர்வைக் கண்டு மெச்சினேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார். அதற்கு கர்ணன் கைகூப்பி கிருஷ்ணா ஒரு உயிர் போவதற்குள் இறைவனைக் காண வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோளாக இருக்கும். எனக்கு அந்த அருள் கிடைத்தது இதுவே எனக்கு போதும் என்று வணங்கினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1