`பான்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இரண்டாவது சீசனின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இம்மாத இறுதியிலிருந்து ஒளிபரப்பு தொடங்கலாமென்கிறார்கள்.
இந்தச் சூழலில் முதல் சீசனில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் நடித்த நடிகர் நடிகைகளில் ஸ்டாலின், ஹேமா தவிர மற்ற நடிகர்கள் பார்ட் 2 வில் இல்லை. இது இந்த சீரியலைத் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
முதல் சீசனில் நடித்தவர்கள் ஏன் இரண்டாவது சீசனில் இல்லை, முதல் பகுதி ஒரு பிராண்டாக உருவான பின் அதில் நடித்தவர்கள் இல்லாமல் பார்ட் 2 ஹிட் ஆகுமா, சேனல் இதை யோசிக்கவில்லையா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலவ சீரியல் தொடர்புடைய சிலர் சொன்ன தகவல் இதோ:
”இந்த சீரியல் ஹிட் ஆனது முழுக்க முழுக்க ஒரு டீம் ஒர்க். நடிச்ச ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டுக்கும் வெற்றியில் பங்கிருக்கு. சில சமயங்கள்ல சில ஆர்ட்டிஸ்டுகளுக்குக் கூடுதலா புகழ் கிடைச்சு, அவங்களுடைய பங்களிப்பும் அதிகமா இருந்திருக்கலாம். மறைந்த சித்ராவை இந்த நேரத்துல குறிப்பிட மறக்கக் கூடாது. அவங்களால் சீரியலுக்கும் சீரியலால் அவங்களுக்குமே பேர் கிடைச்சது. இப்படியிருக்கிறப்போ, அடுத்த சீரியலைத் தொடங்க நினைச்சது சேனல். ஆனா சீரியல் தங்களாலேயே ஓடினதா நினைத்துக்கொண்ட சில ஆர்ட்டிஸ்டுகளாலதான் பிரச்னை தொடங்கிச்சு.
தங்களுக்கு சினிமா, வெப்சீரிஸ் வாய்ப்புகள் வர்றதாச் சொல்லி, அதனால தங்களால் நடிக்க முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. எங்களுக்குத் தெரிய, உண்மையிலேயே அப்படியெல்லாம் யாரும் பிஸியா இல்லை. சம்பளத்தைக் கூட்ட இப்படிச் சொல்லியிருக்காங்க. நேரடியா அதைச் சொல்லிக் கேட்டிருந்தாக் கூட பரவால்ல. இந்த மாதிரி பண்ணினதுல சேனல் கடுப்பாகிடுச்சு.
அந்தக் கடுப்புலதான் ஒருகட்டத்துல ‘வர்ற ஆர்ட்டிஸ்டுகளை வச்சு தொடங்கிடலாம், வரலைங்கிறவங்களை விட்டுடுங்க’னு சொல்லிட்டாங்க. பார்ட் 2 வில் நடிக்க மறுத்த ஆர்ட்டிஸ்டுகள் மேல சேனலுக்குமே ரொம்பவே வருத்தம்தான். அவங்கள்ல சிலர் கொஞ்ச நாளைக்காவது சேனல் பக்கம் தலைகாட்ட மாட்டாங்கன்னுதான் தோணுது ” என்கிறார்கள் இவர்கள்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற பெயருக்குப் பதில் ‘பாண்டியன் இல்லம்’ சீரியலின் பெயரைக் கூட மாற்றி விடலாமென ஆரம்பத்தில் யோசித்தார்களாம். ஆனால் சேனலின் ஒரு பிராண்டாக நினைத்ததாலேயே பிறகு பழைய டைட்டிலே இருக்கட்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.
பாண்டியன் குடும்பத்தில் இருந்தவர்களில் வெங்கட் விஜய் டிவியில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கிழக்கு வாசல்’ தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசித் தம்பியாக வந்த சரவண விக்ரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருக்கிறார். ஹேமாவும் அவரது அப்பாவாக நடித்த ரவியும் இரண்டாவது சீசனில் இருக்கிறார்கள்.
ஆக, ஸ்டாலின் மனைவியாக நடித்த சுஜிதா மற்றும் கதிராக நடித்த குமரன் இருவரையும்தான் இரண்டாம் சீசனுக்கு வர மறுத்து முரண்டு பிடித்தவர்களாகக் கை காட்டுகிறார்கள் சீரியல் யூனிட்டுக்கு நெருக்கமானவர்கள்.
இவர்கள் இருவரின் மீதுதான் சேனல் கடும் அதிருப்தியிலிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் இரண்டாவது சீசனில் நடிகர் அஜய் ரத்னம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்டாலின் குடும்பத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் இவரது குடும்பத்துக்கும் இருப்பது போலவே கதை நகருமாம்.
முதல் பார்ட் ஹிட் ஆனது போல் இரண்டாவது சீசனும் ஹிட் அடிக்குமா என்பது சீரியல் ஒளிபரப்பான பிறகே தெரியவரும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1