இயற்கையில் கிடைக்கும் பல பொருட்கள் நமக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது. அதில் ஒன்று தான் தேங்காய். தொடர்ந்து தேங்காயை சாப்பிட்டு வந்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தேங்காயை பயன்படுத்திய பிறகு, அதன் சிரட்டையை பலரும் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், இந்த சிரட்டையை தூக்கி எறியாமல் எப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களை, அதன் பயன்பாடு முடிந்ததும் தூக்கி எறிவது வழக்கம். அப்படி தூக்கி எறியும் சில பொருட்களை கொண்டு, அழகு பொருட்களைப் உருவாக்கலாம். அவ்வகையில், தேங்காயை பயன்படுத்திய பிறகு, மீதமிருக்கும் தேங்காய் சிரட்டையை தூக்கி எறிந்து விடாமல் ஆரோக்கியம் நிறைந்த கீரை வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம். வீட்டிலேயே கீரை வளர்ப்பதால், அதற்காக நாம் செலவிடும் நேரமும் குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும், வீட்டுத் தோட்டத்தில் நம் நேரத்தை செலவிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
-
முதலில் தேங்காய் சிரட்டையை நன்றாக கழுவ வேண்டும். பிறகு, அதில் இருக்கும் தேங்காய் மஞ்சையை வெட்டி அதனுள் செம்மண் கலந்து சிரட்டைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர், தேங்காய் சிரட்டைக்குள் கீரை விதைகளைத் தூவி விட்டு தண்ணீரைத் தெளித்து விடுங்கள்.
-
ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் இடைவெளி விட்டு கீரை விதைகள் முளைவிடத் தொடங்கி விடும். இவ்வாறு விதை முளைக்கத் தொடங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
-
தேங்காய் சிரட்டையில் உள்ள செம்மண்ணில், தேவையான அளவு தேங்காய் நார்த் துண்டுகளை போட்டு வைத்தால், அதற்குத் தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். மேலும், முட்டை ஓடுகள் மற்றும் காய்கறிகளை கழிவுகளை இந்த மண்ணுடன் சேர்த்துப் போட்டால் அது உரமாக மாறி கீரை வளர்வதற்கு துணையாக இருக்கும்.
இது சில தினங்களில் நன்றாக வளர்ந்து, நஞ்சில்லாத ஆரோக்கியமான உணவாக உங்கள் கைகளுக்கு கிடைக்கும். இந்த கீரையை கிள்ளி எடுத்து சமைத்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி தான். வீட்டில் இருக்கும் குழந்தைக்கு இதுபோன்று ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அளிப்பது, பிற்காலத்தில் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1