மகாபாரதத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவன் பீமன். பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்த பீமன் பலத்தின் மொத்த உருவமாக விளங்கினான். பீமன் இவ்வளவு பலசாலியாக இருக்க காரணம் அவன் வாயுபகவானின் அருளால் குந்திக்கு மகனாக கிடைக்க பெற்றவன்.
★துரியோதனனுக்கும், பீமனுக்கும் இருந்த பகை மகாபாரத போருக்கான முக்கிய காரணமாக அமைந்தது. பீமன் துரியோதனனை விட ஒருநாள் மூத்தவன் ஆவான்.
★அர்ஜுனனுக்கு பிறகு குருஷேத்திர போரில் கௌரவ சேனையில் அதிக நாசத்தை ஏற்படுத்தியது பீமன்தான். பாண்டவர்களின் புதல்வர்களை பொறுத்த வரையில் அபிமன்யு மிகவும் புகழ் பெற்றவனாய் விளங்கினான்.
★அதனை அடுத்து பீமனின் புதல்வன் கடோத்கஜன் அதிக புகழ்பெற்றான். ஆனால் உண்மையில் பீமனுக்கு மொத்தம் மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். மேலும் துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் சகோதர உறவையும் தாண்டி வேறொரு உறவும் இருந்தது.
★இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். பீமனுக்கு விருகோத்திரன், பீமசேனன் என்ற பெயர்களும் இருந்தது. பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்த பீமன் பாண்டவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தான்.
★பெரும் வலிமையின் அடையாளமாக பீமன் இருந்தான். பீமனின் பலம் பீமனின் பராக்கிரமங்களை விவரிக்கும் பல நிகழ்வுகள் மகாபாரதத்தில் உள்ளது. இடும்ப வதம், ஜராசந்த வதம், கீசக வதம், பகாசுர வதம் என பல தருணங்களில் பீமன் தன் பலத்தை நிரூபித்து இருக்கிறான்.
★துரியோதனனுக்கு பீமன் மேல் பகை வளர காரணமே பீமனின் பலம்தான். கௌரவர்கள் அனைவரும் சேர்ந்தால் கூட பீமனின் பலத்திற்கு இணையாக முடியாது. அதுவே அவர்களுக்கு பீமன் மீது தீர்ப்பகையை உண்டுபண்ணியது.
★குருஷேத்திர போரில் கௌரவர்கள் நூறு பேரையும் ஒற்றை ஆளாக வதைத்தது பீமனே. பீமனின் மகன்கள் கடோத்கஜன் தவிர்த்து பீமனின் புதல்வர்கள் யாரும் புகழடையவில்லை. பல குறிப்புகளின் படி பீமனுக்கு மூன்று மனைவிகள் மூலம் மொத்தம் மூன்று மகன்கள் பிறந்தனர்.
★ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மூவருமே போரில் கொல்லப்பட்டனர். கடோத்கஜன் பாண்டவர்களின் அனைத்து புதல்வர்களை விடவும் மூத்தவன் கடோத்கஜன்தான். ஏனெனில் பாண்டவர்களில் முதலில் திருமணம் செய்து கொண்டது பீமன்தான். பீமனுக்கும், ராக்ஷர்களின் தலைவி இடும்பிக்கும் பிறந்தவன்தான் கடோத்கஜன்.
★கடோத்கஜன் இயற்கையாகவே பல மாயசக்திகளை கொண்டிருந்தான். அதனால் கிருஷ்ணரின் அறிவுரைப்படி பீமன் போரில் பங்கு கொள்ள கடோத்கஜனை அழைத்தான். மாயசக்திகள் கொண்ட கடோத்கஜன் கௌரவ சேனைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினான்.
★இறுதியில் அர்ஜுனனை கொல்வதற்கு கர்ணன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தால் கடோத்கஜனை கொல்லும்படி துரியோதனன் கர்ணனை நிர்பந்தித்தான். கர்ணனும் தன் நண்பனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தம்பியின் மகனை தன் கரங்களாலயே கொன்றான்.
★கடோத்கஜனின் மரணத்திற்கு பின் கிருஷ்ணரின் திட்டமும் இருந்ததது. ஏனெனில் சக்தி ஆயுதத்தை கர்ணன் அர்ஜுனனை கொல்வதற்காகத்தான் வைத்திருந்தான். அதனால்தான் அந்த ஆயுதத்தை கர்ணன் பயன்படுத்த கடோத்கஜனை போருக்கு அழைக்கும்படி கிருஷ்ணர் பீமனிடம் கூறினார்.
★குருஷேத்திர போரின் மாவீரர்களில் ஒருவனாக கடோத்கஜன் இருந்தான். சுதஸோமன் பீமனின் இரண்டாவது மகனாவான். இவன் பீமனுக்கும், திரௌபதிக்கும் பிறந்த மகன். தந்தையை போலவே கதாயுத்தத்தில் சிறந்து விளங்கினான்.
★சுதஸோமன் போரில் தன் திறமையை நன்கு வெளிப்படுத்தினான். சகுனியை கொள்வதில் இவனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. போர் முடிந்த இரவு இளம் பஞ்சபாண்டவர்கள் அனைவரும் உறங்கும்போது அஸ்வத்தாமனால் கொடூரமாக கொல்லப்பட்டு இறந்தனர்.
★பீமன் மூன்றாவதாக காசியின் இளவரசி ஜலந்தரை என்பவரையும் திருமணம் செய்து கொண்டான். இவர் வேறு யாருமல்ல. துரியோதனனின் மனைவி பானுமதியின் இளைய சகோதரிதான். இந்த பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் பீமனும், துரியோதனனும் சகலையாக மாறினார்கள்.
★இவர் மூலம் பிறந்த மகனுக்கு சார்வகன் என்னும் பெயர் வைத்தார்கள். போரில் இவனும் கொல்லப்பட்டான். பாண்டவர்கள் அனைவருமே தங்களின் வாரிசுகளை போரில் இழந்தார்கள்.
★நமது பாரதத்தில் சில இடங்களில் பீமனுக்கு கோவில்கள் உண்டு. மேலும் தற்போதைய கர்னாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பீமசேனா, பீமராவ் போன்ற பெயர்கள் பிரசித்தி பெற்றவை.
★கர்னாடகா மாநிலத்தில் மத்வ சம்ப்ரதாயத்தில் ஹனும பீம மத்வர் மூவருமே ஶ்ரீவாயு பகவானின் அம்சமாக கருதுகின்றனர்.
அத்வைத சித்தாந்தத்தை உபதேசித்த மகான் ஶ்ரீஆதிசங்கரருக்குப் பின் மகான் ஶ்ரீமத்வாச்சாரியாரின் துவைத சித்தாந்தங்களையும் அவரது உபதேசங்களையும் தழுவியோர் மாத்வர்கள் என்றழைக்கப் படுகிறார்கள்.
★இதில் ஹனுமனுக்கும் பீமனுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்டுள்ளது. ஶ்ரீ கிருஷ்ணரும் ஶ்ரீராமரும் பிரதான தெய்வங்களாக வணங்கப் படுகின்றார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1