மிகவும் மோசமான ஒரு கிராமம் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் மாறுகிறது என்பது குறித்த கதை.
கருவறை என்னும் கிராமத்தில் இருக்கும் மக்கள் மிகவும் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகிறார்கள். வெளியூர் ஆட்கள் அனுமதி இல்லாமல் அந்த ஊருக்குள் செல்லவும் முடியாது. உள்ளூர் ஆட்கள் அனுமதி இல்லாமல் ஊரை விட்டு வெளியே செல்லவும் முடியாது. இப்படி ஒழுக்கமாகவும் கட்டுப்பாடுடன் வாழும் இந்த ஊருக்கு சிறந்த கிராமம் என்று பட்டம் வழங்க கவர்னர் முடிவு செய்கிறார். ஆனால், அந்த பட்டத்தை ஊர் மக்கள் வாங்க மறுக்கிறார்கள்.
இறுதியில் கருவறை கிராம மக்கள் பட்டத்தை வாங்க மறுக்க காரணம் என்ன? ஊர் மக்கள் கட்டுப்பாடுடன் வாழ காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஹரிகுமார் வெள்ளை வேட்டி, சட்டை மட்டும் இன்றி உள்ளத்திலும் வெண்மையோடு வலம் வரும் வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில், தனது கிராம மக்களின் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகளில் தடுமாறுகிறார்., இவர் இரண்டாம் பாதியில் தான் வருகிறார். இவரது நடிப்பு ரோபோ போல் இருக்கிறது. இவரது மனைவியாக வரும் ஆஷிகா கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். திருப்பம் தரும் இவரது காட்சி அதிகம் எடுபடவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுசல்யா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கும் இன்னும் அதிக காட்சிகள் கொடுத்து இருக்கலாம். முதல் பாதியில் ரோஷன் பசீர் நாயகனாக வலம் வந்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
ராதாரவி, ரவி மரியா, மனோபாலா, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மிகவும் மோசமான ஒரு கிராமம் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் மாறுகிறது என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயசந்திரன். நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. முதல் பாதி ஒருபடமும், இரண்டாம் பாதி ஒரு படமும் பார்த்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
கேமராமேன் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன், பருந்து கோணத்தில் முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் பரவாயில்லை என்று ஸ்டேஜில் உள்ளது.
சில பல இலட்சங்கள் செலவில் உருவான ஒரு சினிமா மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியம் என்றும், அப்படி இருந்தால் ஒட்டு மொத்த ஊரே கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கும், என்ற அரிய கருத்தை கொஞ்சூண்டு குறைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘சான்றிதழ்’ – திருத்தம் செய்திருக்கலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1