கோயம்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.
கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார்.
தனிப்பெரும் அரசியாக விளங்கும் கோனியம்மன் தன்னை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு தனது திருவருளை வாரி வழங்கி வருகின்றாள். கோனியம்மன்” என்றால் “தெய்வங்களுக் கெல்லாம் அரசி” எனவும் பொருள்படும் மகிஷாசுரமர்த்தனி நமது கோவை மாநகரில் “கோனியம்மன்” என்று பெயர் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறாள். மூலஸ்தானத்தில் வடக்குப் பார்த்துக் கோவில் கொண்டு உள்ள அம்மனின் சிலை உருவம் சுமார் 3½ அடி அகலமும் 2½ அடி உயரமும் உடையது.
தல வரலாறு:
கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.
ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக்காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் கட்டி காப்புத் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.
ஆலயத் தோற்றம்:
கோயம்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும் – வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1