“வலு” ராஜா பார்த்திபன் இயக்கத்தில் சுகுமாரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாய். இந்த படத்தில் வைகுண்ட செல்வன், சிவ சந்தியா, இசை லதா, சிவச்சந்திரன், ஜெயதேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரபல விஞ்ஞானி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்தை கண்டுபிடிப்பதற்காக காட்டில் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். தனது ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், எப்படிப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடலில் அதிகரிக்க கூடிய மருந்தை உருவாக்குவதற்கான மூலிகை மற்றும் சூத்திரத்தை கண்டுபிடித்து விடுகிறார். இந்த தகவலை தனது மகளுக்கு தெரியப்படுத்தும் விஞ்ஞானி விரைவில் தான் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்றும் சொல்கிறார்.
ஆனால், பல நாட்கள் ஆகியும் விஞ்ஞானி வராததால் சந்தேகமடையும் அவருடைய மகள், தனது தோழியுடன் சேர்ந்து தனது தந்தையை தேடி காட்டுக்குள் பயணிக்கிறார். அவர்களுக்கு உதவியாக வனப்பகுதி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பயணிக்க, தந்தையை தேடி சென்ற மகளின் காட்டுப் பயணம் எப்படி இருந்தது? அவருடைய தந்தையை அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விகுண்ட செல்வன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு குறையில்லாமல் நடித்திருக்கிறார்.கதாநாயகியாக நடித்திருக்கும் சிவ சந்தியா, தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். திடிரேன்று அவருடைய கதாபாத்திரத்தின் மற்றொரு வடிவம் வெளிப்படுவது எதிர்பார்க்காத சஸ்பென்ஸாக இருக்கிறது.
சிவசந்திரன், ஜெயதேவ், இசை லதா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.ரஹிம் பாபுவின் ஒளிப்பதிவு அடர்ந்த காட்டின் அபாயத்தையும், அழகையும் ஒருசேர காட்டியிருக்கிறது.சாயின் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.காட்டுக்குள் பயணிக்கும் கதையை கச்சிதமாக தொகுத்து வேகமாக நகர்த்தி செல்கிறார் படத்தொகுப்பாளர் செல்வராஜ்.
எழுதி இயக்கியிருக்கும் ராஜா பார்திபன், மூலிகை மருத்துவத்தின் அவசியத்தையும், ஆற்றலையும் மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் நேர்த்தியான திரைக்கதையோடு விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.நடிகர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் அவர்களிடம் கச்சிதமாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் முழு படத்தையும் காட்டுக்குள் முடித்து, நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
கதையின் நோக்கம் வலுவாக இருந்தாலும், கதை செல்லும் விதத்தில் சரியான வலு இல்லாததால் ஆங்காங்கே சிறு சறுக்கல்கள் போல கதையும் தொங்கிக் கொண்டே செல்கிறது.குறைகள் சில இருந்தாலும், சிறிய முதலீட்டில் இப்படிப்பட்ட சுவாரஸ்யமான படங்களையும் எடுக்கலாம் என்பதை மிக எளிமையாக சொல்லியிருக்கும் ‘வலு’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1