gowri panchangam Sprituality Uncategorized

காக்க காக்க கனகவேல் காக்க-9 (திருச்செங்கோடு வேலவர் கோயில்)

சைவம் போற்றும் 63 அடியார்களுள் ஒருவரான விறன்மிண்ட நாயனாரின் அவதாரத் தலமாகப் போற்றப்படும் திருச்செங்கோடு, பல சிறப்புகளைக் கொண்டது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்தலம் கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. 274 சிவாலயங்கள் வரிசையில் இத்தலம் 208-வது தேவாரத் தலமாகும்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர், அம்பாள் பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் (முருகப் பெருமான்) ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயில் அமைந்துள்ள மலை, ஒருபுறம் பார்க்கும்போது ஆணாகவும், வேறு இடத்தில் இருந்து பார்க்குபோது பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது.




தல வரலாறு

பிருங்கி முனிவர், சிவபெருமானை தரிசிக்க அவ்வப்போது கையிலை மலைக்கு வருவது வழக்கம். அச்சமயங்களில், சிவபெருமானை மட்டுமே வழிபடுவார். அவர் அருகில் இருக்கும் பார்வதி தேவியை வழிபடுவதை தவிர்த்து விடுவார். சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே அமர்ந்திருந்தாலும், பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை மட்டும் வலம் வருவார். பிருங்கி முனிவரின் இச்செயல் பார்வத் தேவிக்கு கோபத்தை வரவழைத்தது.




கோபத்துடன் பிருங்கி முனிவரை நோக்கிய பார்வதி தேவி, “முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து காணப்படுவீர்” என்று சாபமிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான், “நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லாமல் சிவம் இல்லை” என்று கூறி பார்வதிதேவிக்கு தன் இடப்பாகத்தில் இடம் அளித்தார். அம்மையும் அப்பனும் இணைந்த உருவம் ‘அர்த்தநாரீ’ என்று அழைக்கப்பட்டது. இதே வடிவத்தில் பூவுலகில் பல இடங்களில் சிவபெருமான் கோயில்கொண்டார். திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ஒருவரது இடது பாகத்தில் இதயம் உள்ளது. மனைவி என்பவர் இதயத்தில் இருக்க வேண்டியவர் என்பதை உணர்த்துவதற்காகவே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.




திருச்செங்கோடு

அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலையாகவும், செங்குத்தான மலையாகவும் இருப்பதால் இம்மலை திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகிறது. மேலும், மலையின் பெயரே ஊருக்கும் நிலைத்துவிட்டது.

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது தங்களில் யார் பெரியவர் என்ற விவாதமும் எழுந்தது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர், பலம் பொருந்தியவர் என்று அறிவிக்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.




வாயு பகவான் தன் பலத்தைப் பயன்படுத்தி காற்றை வேகமாக வீச, மலையின் சில பகுதிகள் பறந்து, பூமியின் பல இடங்களில் விழுந்தன. அதில் ஒன்று திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷன் மலையைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து குருதி வழிந்து, மலை செந்நிறமானதாக கூறப்படுகிறது. செங்கோடு, உரசகிரி, தெய்வத் திருமலை, நாகமலை, நாககிரி, வாயுமலை என்றும் திருச்செங்கோட்டு மலை அழைக்கப்படுகிறது.

கோயில் சிறப்பு

திருச்செங்கோடு மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டு வேலவர் எழுந்தருளியுள்ளனர்.

பௌர்ணமி தினத்தில் இம்மலையை வலம் வந்தால் கயிலாயம் மற்றும் வைகுண்டத்தை வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தம்பதிகள் ஒற்றுமைக்காக இத்தலத்தில் கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் தொடங்கி 21 நாட்களுக்கு இந்த விரதம் மேற்கொள்ளப்படும். கேதார கௌரி, இங்குள்ள மரகத லிங்கத்தை வழிபட்டு, சிவபெருமானின் இடது பாகத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திர தினங்களை ஒட்டி இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தி, அர்த்தநாரீஸ்வரரையும், செங்கோட்டு வேலவரையும் தரிசனம் செய்வதுண்டு. தம்பதி ஒற்றுமை ஓங்கவும், நாக தோஷம், ராகு தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷங்கள் நீங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!