மௌன கீதங்கள் வெளியாகி இன்றுடன் 43 வருடம் கடந்த நிலையில், இப்படம் குறித்த விமர்சனத்தை இந்த பதிவில் காண்போம்.
தமிழ் சினிமாவை பற்றிய தொகுப்பு என்றால் அதில் ஒருவர் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. அவர் பெயரைத் தவிர்த்தாலும் அது சரியாக இருக்காது. அவர் வேறு யாருமே இல்லை இயக்குநர் பாக்யராஜ் தான். இவரின் திறமையைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் தான் அவரை திரைக்கதை மேதை என அழைக்கின்றனர். இப்போது வரை அவர் திரைக்கதை சொல்வது போல் ஒருவரும் சொல்லவில்லை.
நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசை என அனைத்திலும் பூந்து விளையாடும் ஜாம்பவான் இவர். இவர் மேல் இருந்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிய காலம். அப்போது தான் 1981 ஆம் ஆண்டு மெளன கீதங்கள் என்ற அர்ப்புதமான படத்தை கொண்டு வந்தார். அவரின் முந்தைய படங்கள் கிராமத்து சார்ந்து இருக்கும். ஆனால் மெளன கீதங்கள் மட்டும் தான் அலுவலகம் சார்ந்த வந்த படம்.
இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் டைட்டில் கார்டில் இருந்தே சொல்லாம். மாறுபட்ட கோணமாக கார்ட்டுன் கொண்டு படக்குழுவினரை அறிமுக செய்து வைத்து இருப்பார்கள். பெண் கூந்தலை வெட்டுவதிலிருந்து எடிட்டிங் என்ற வசனம் போட்டது ஆச்சரியமாக இருந்தது. இப்படி படம் தொடங்குவது முன்பே அதைப்பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சரி வாங்க அடுத்து படத்திற்குள் பாக்யராஜ் ஆடிய ஆட்டங்களைப் பார்க்கலாம்….
ஒரு சூழ்நிலையில் கணவன் தவறு செய்கிறார். குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல், மனைவியிடம் உண்மையைச் சொல்கிறார். இதனால் அவர் மனைவி பிரிக்கிறார். பிரியும் மனைவிக்கு தன் அன்பு புரியும் வரை காத்திருந்து அவருடன் எப்படி சேர்ந்து வாழ்கிறார் என்பது தான் மெளன கீதங்கள். இது எல்லா இடங்களிலும், ஏன் நாம் தினமும் கேட்கும் ஒன்று தான். அதை எப்படி அழக்காக இயக்கி வெற்றிக் கண்டார் பாக்யராஜ் என்பதே சிறப்பானது.
பாக்யராஜ் இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களில், முதல் ஒன்றில் அவர் சொந்த குரல் இருக்காது. இரண்டாவது படத்தில் ஹீரோவாக இருப்பார், ஆனால் வாய் பேச மாட்டார். அதனால் அவர் முழு திறமையும் தெரியவில்லை.
முழுக்க முழுக்க அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்றால் அது மெளன கீதங்கள் படமே.
ஓப்பன் பண்ண… ஹீரோவிற்கு முதல் ஷாட் கிடையாது. ஹீரோயின் சுகுனாவிற்கு (சரிதா) தான் முதல் முக்கியத்துவம். பேருந்தில் பையனுடன் சரிதா ஏற. ஏறும் போதே தகராறு. என்னயா இது நம்ம ஹீரோவை காணும், ஹீரோயின் சுகுனா வராங்க, அதுவும் குழந்தையோடு என நினைப்போம். அப்போது தான் ஹீரோ ரகுநாதன் (பாக்யராஜ்) என்ட்ரி.
வேலைக்கான நேர்காணல், பாக்யராஜ், சரிதா இருவருமே எழுத்தர் வேலைக்காகச் செல்கின்றனர். அந்த வேலை வேண்டும் என்பதால் சரிதா நாடகமாடி வேலை வாங்கி கொள்கிறார். சரிதா சொல்வது எல்லாம் உண்மை என அவர் நம்பிய பிறகு வரும் காட்சி எல்லாம் வேடிக்கை தான். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர சரிதாவை மீரட்டி, ‘எனக்கு ஒரு முத்தம் கொடு’ என பாக்யராஜ் கேட்டது அனைவரையும் வாய்பிளக்க வைத்தது.
முத்தமே கேட்டாச்சு அப்புறம் என்ன எல்லா படங்களிலும் வருவது போன்று உடனே கல்யாணம் தான். இங்கிருந்து தான் படத்தின் தொடக்கமே, வழக்கம் போல் கணவன், மனைவி முட்டிக் கொள்வதும் என அனைத்து வீடுகளில் நடக்கும் அதே பஞ்சாயத்து தான். மனைவி அழுவதும், கணவர் மன்னிப்பு கேட்பது என எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவத்தை திரையில் அப்படியே பிரதிபலித்து காட்டியிருப்பார்.
சரிதாவின் தோழிக்கு வரவேண்டிய பணத்தை தன் கணவன் பாக்யராஜிடம் உதவியாகக் கேட்டு பெற்றுக் கொள்ள அனுப்புவார். ஒருகட்டத்தில் இருவருமே சந்தர்ப்பத்தால் தவறு செய்வார்கள். ஆனால் பாக்யராஜ் மனைவிக்கு தெரியாமல் துரோகம் செய்துவிட்டோம் என்று குற்ற உணர்ச்சியில் சரிதாவிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்க, அங்கே வெடிக்கிறது பூகம்பம். அத்தனை நாள் பாசமாக இருந்த மனைவி, சட்டெனக் கணவரை தூக்கி எறிந்துவிட்டுச் செல்வார். அப்படிப் பிரிந்தவர்கள் தான் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் பேருந்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
மறுபடியும் ஒரு சின்ன பிளாஷ் பேக், மனைவி சரிதா கணவர் மடியில் படுத்துக்கொண்டு, ”ஒரு சின்னத்தப்பு பண்ணினீங்க என்றால் கூட நான் தாங்க மாட்டேன். நீங்க முழுவதுமே எனக்கு மட்டும் தான்” என பேசி இருப்பார். அந்த வசனம் சரிதா சொல்வது இல்லை. ஒவ்வொரு பெண்ணும் தன் கணவருக்கு சொல்வது.
வேலை காரணமாக ஒரு தவறான ஹோட்டலில் தங்கிவிடுகிறார் ஹீரோ. அந்த நேரம் காவலர்கள் ரெய்டு வர, அவர் மனைவியுடன் தொலைப்பேசியில், ரிசப்ஷனில் பேச அவர் தப்பித்து கொள்வார். ‘நீங்க தப்பித்த விஷயமே பெரியது. எல்லாம் உங்கள் மனைவியின் மாங்கல்ய பலன்” என ஒரு ஆண் பேசியது, பெண்ணைப் பெருமைப்படுத்தும் விதமாக இருந்தது. இதனால் தான் ஆண்களை விட பெண்கள், பாக்யராஜை அதிகமாக நேசிக்கின்றனர்.
அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுகுனாவை தப்பாக அனைவரின் முன்பும் சித்தரித்துவிடுவார். அப்போது ரகுநாதன், ‘கரப்பான் அடிச்சிருச்சு’னு சொன்ன நம்புவியா? அதே போல தான் சுகுனாவும், அவள ஒருத்தன் தொட்டு இருந்தால் அவங்களையும் எரிச்சிடுவா, அவளும் எரிஞ்சி இருப்பா” என வசனம் பேசியிருப்பார். இந்த காட்சிக்குத் திரையரங்கமே விசில் அடித்து வரவேற்றனர்.
என்ன தான் நம் மனைவி நம்முடன் இல்லை, அவர் என்ன வேண்டுமானாலும் செய்து இருக்கலாம் என பாக்யராஜ் ( ரகுநாதன்) நினைக்கவில்லை. எத்தனை வருடமானாலும் என் சுகுனா மாறவே மாட்டாள், யார் என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி பற்றி எனக்குத் தெரியும், நீங்க போங்க டா என நெற்றியடி கொடுத்தது சிறப்பான ஒன்று.
கிளைமாக்ஸ் காட்சி என்றாலே வசனம் இருக்கும். ஆனால் இந்த படத்திலோ கடைசி நிமிடங்களுக்கு வசனமே கிடையாது. தன் கணவர் மற்றோறு பெண்ணுடன் தவறாக இருந்த காரணத்தினால் சுகுனா, கணவரை பிரிவார். மீண்டும் ஒரு பெண் கணவர் வாழ்க்கையில் வரப்போகிறார் என்பதை தாங்கமுடியாமல் அது என்னுடைய இடம் என சொல்லி சேர்ந்துவிடுவார். பாக்யராஜ் ( ரகுநாதன்) கடைசியில் அந்த பெண்ணுக்கு தாலிக்கட்டிவிடுவாரோ என பார்வையாளர்கள் சீட் நுணியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்குச் சுவாரஸ்யம் ஏற்பட்டது. வசனம் இல்லாமல் இந்த அனுபவத்தை பாக்யராஜ் என்ற ஜாம்பவனால் மட்டுமே கொடுக்க முடியும்.
சத்தம் இல்லாத கீதத்தை ஒலிக்க வைத்த பாக்யராஜ் படங்களில் என்றுமே மெளன கீதங்கள் படத்திற்கு தனி இடம் உண்டு.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
+1
+1