gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 46 வைத்தியநாத் ஆரோக்யை

அம்மனின் சக்தி பீட வரிசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்கு உட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் தேவ்கர் நகரத்தில் அமைந்துள்ள வைத்தியநாத் கோயில் ஹர்த பீடமாக போற்றப்படுகிறது.

இத்தலத்தில் தேவி ஜெய் துர்கா என்றும் ஆரோக்யை என்றும் அழைக்கப்படுகிறார். சக்தி தேவியின் இதயப் பகுதி இங்கு விழுந்ததால் இந்த இடம் ஹர்த பீடமாக அழைக்கப்படுகிறது. பைரவர் வைத்தியநாதர் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒருவராக வணங்கப்படுகிறார்.




தல வரலாறு

இராவணன், இலங்கையைத் தவிர மூன்று உலகங்களையும் ஆட்சிபுரியும் சக்தியை கொண்டிருந்தான். தான் பெற்ற பல வரங்களின் உதவியால், யக்‌ஷர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், சிறு தெய்வங்கள் ஆகியோரை சிறைபிடித்து இலங்கையில் வைத்திருந்தான். மேலும், சிவபெருமான் கைலாயத்தைவிட்டு இலங்கையில் தங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான்.

ஒருசமயம் ராவணன், இமயமலை சென்று, சாமகானம் பாடி, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டான். அப்போது தனது தலைகளை ஒவ்வொன்றாக வெட்டி சிவலிங்கத்துக்கு சமர்ப்பித்தான். 9 தலைகளை கொடுத்த பிறகு, 10-வது தலையை வெட்ட முயற்சிக்கும்போது, சிவபெருமான் தோன்றி, ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். உடனே ராவணன், அங்குள்ள காம்ன லிங்கத்தை, இலங்கைக்கு கொண்டு செல்ல வரம் அருளுமாறு சிவபெருமானிடம் கேட்டான்.

சிவபெருமானும் ஒரு நிபந்தனையைக் கூறி அதற்கு உடன்பட்டார். வழியில் எங்காவது சிவலிங்கத்தை வைத்துவிட்டால், தான் அங்கேயே தங்கிவிடுவதாக சிவபெருமான் கூறினார். சிவபெருமானின் அந்த நிபந்தனையை ஏற்று, ராவணன், காம்ன லிங்கத்தைத் தூக்கிக்கொண்டு, கைலாயத்தில் இருந்து புறப்பட்டான். சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வெளியேறியதைக் கேட்ட தேவர்கள் கவலை கொண்டனர். இது குறித்து அனைவரும் திருமாலிடம் கூறினர்.




தக்க நேரத்தில் செயல்படுவதாகக் கூறிய திருமால், வாயு தேவனை அழைத்து ராவணனின் வயிற்றுக்குள் புகுந்து உபாதைகள் அளிக்கப் பணித்தார். ராவணன் சிவலிங்கத்துடன் இலங்கையை நோக்கிப் பயணிக்கும்போது, தேவ்கர் பகுதியில் சற்று இளைப்பாற எண்ணினான். அப்போது அங்கிருந்த அஹிர் பைஜு என்ற வேடுவச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் கீழே வைக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டிருக்குமாறு கூறிவிட்டு, சற்று ஓய்வெடுத்தான்.

நேரம் செல்லச் செல்ல சிவலிங்கத்தின் எடை அதிகரித்தது. சுமை தாங்காமல் அஹிர் பைஜு சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டார். ராவணன் திரும்பி வந்தபோது சிவலிங்கம் கீழே வைக்கப்பட்டிருப்பதை அறிந்து வருந்தினான். தனது பலம் முழுவதையும் பயன்படுத்தி சிவலிங்கத்தைப் பெயர்க்க முயற்சித்தான். ஆனால், சிவலிங்கத்தை எடுக்க இயலவில்லை.

இது அனைத்தும் இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராவணன், அந்த இடத்திலேயே சிவகங்கை என்ற தீர்த்தக் குளம் அமைத்து சிவனை வழிபட்டான். (அருகே சந்திர கூப (கிணறு) தீர்த்தமும் உள்ளது). பின்னர் அந்த இடத்தைவிட்டு அகன்றான். (அஹிர் பைஜு என்பவர் திருமாலின் ரூபம் என்று கூறப்படுகிறது). ராவணனின் செயல்பாட்டை ஓரமாக இருந்து அஹிர் பைஜு கவனித்துக் கொண்டிருந்தார்.




ராவணன் அந்த இடத்தை விட்டுச் சென்றதும், தினமும் அஹிர் பைஜு சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார். ஒருநாள் இல்லத்தில் அவருக்கு பசி எடுத்தபோது, உணவு உண்ண அமர்ந்தார். அப்போதுதான் அன்று சிவபெருமானை (போலே பாபா) தரிசிக்கவில்லை என்ற நினைவு வந்தது. உடனே உணவு உண்ணாது, அவரை தரிசித்துவிட்டு வந்தார். மற்றொரு சமயம் சிவலிங்கத்தை ஒரு சிலர் தாக்க வந்தபோது, அஹிர் பைஜு அவர்களுடன் சண்டையிட்டு போலே பாபாவைக் காத்தார்.

அஹிர் பைஜுவின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சி அளித்தார். மகாதேவனைக் கண்ட அஹிர் பைஜு, “ராவணன் தங்களை இலங்கை அழைத்துச் சென்றிருந்தால், உங்களைப் போற்றி கொண்டாடியிருப்பார்” என்றார். மனதால் தன்னை வழிபட்ட அஹிர் பைஜுவைப் பாராட்டிய சிவபெருமான், “இனி உன் பெயருடன் சேர்ந்து எனது பெயர் இருக்கும். இந்த இடம் ‘பாபா பைஜுநாத் தாம்’ என்று அழைக்கப்படும்” என்று கூறினார்.




அதன்பிறகு பிரம்மதேவர், திருமால், தேவர்கள் வந்திருந்து சிவபெருமானை வழிபட்டனர். அப்போது முதல் தேவ்கரில் காம்ன லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். விரும்பிய பலனைத் தருவார் வைத்தியநாதர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராவணன் காயப்பட்டபோது, வைத்தியராக வந்து அவனைக் காத்ததால் சிவபெருமான் ‘வைத்யா’ என்று அழைக்கப்படு வதாகவும் கூறப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கோயில் வளாகத்துக்குள் வைத்தியநாதரின் பிரதான கோயிலுக்கு நேர் எதிரில் ஜெயதுர்கா சக்தி பீடம் அமைந்துள்ளது. இரண்டு கோயில்களும் அவற்றின் உச்சியில் சிவப்பு நிற பட்டு நூல்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரு உச்சிகளையும் பட்டுடன் கட்டும் தம்பதிகள், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவர் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

சிவராத்திரி, நவராத்திரி, ஹோலி, தீபாவளி, கார்த்திகை, ஜனவரி பஞ்சமி மேளா, மாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திர விழா, பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!