gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 29 அஸ்தினாபுரம் ஜெயந்தி மாதா

அம்மனின் சக்தி பீட வரிசையில் அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ள முக்தி நாயகி ஜெயந்தி பீடமும் பிரதான இடம் பெறுகிறது. இத்தலத்தில் லட்சுமி தேவியாகவும், ஜெயந்தி மாதாவாகவும் பெயர் தாங்கி, தேவி அருள்பாலிக்கிறார்.

இந்த பூமியில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அவை அனைத்துக்கும் ஈடுகொடுத்து இந்த பூமியானது தலைதூக்கி நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் அல்லது இறைவி எழுந்தருளி, உலகைக் காக்கும் பொருட்டு, பல அவதாரங்களை எடுத்து, உலகை நல்வழிப்படுத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக காலங்காலமாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.




முக்தி நாயகி

பண்டைய இதிகாசத்தில் மிகவும் பெருமைக்குரிய இடமாக டெல்லி திகழ்ந்திருக்கிறது. அஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கௌரவர்களும், அதை ஒட்டிய இந்திரபிரஸ்தத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டவர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். டெல்லி மாநகர்தான் பண்டைய காலத்தில் அஸ்தினாபுரமாக அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேவியின் உடற்கூறு விழுந்துள்ளதாகக் கருதப்படுவதால், அஸ்தினாபுரம் சக்தி பீட வரிசையில் இடம்பெற்றுள்ளது.




பஞ்ச பாண்டவர்கள், அஸ்தினாபுரத்தை ஒட்டி ஒரு புதிய நகரை உருவாக்கினர். அதற்கு ‘இந்திரபிரஸ்தம்’ என்று பெயர் சூட்டி, அரசாட்சி புரிந்து வந்தனர். ஒருமுறை, அங்கு வந்திருந்த கௌரவர்களுக்கு அவமானம் ஏற்பட்டதால், இரு அணிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

சூதாட்டத்தில் தோல்வியுற்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டைவிட்டு காட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்கள் உருவாக்கிய இந்திரப்பிரஸ்தம்தான் தற்போது டெல்லி என்று அழைக்கப்படுகிறது. பழைய டெல்லி, புது டெல்லி ஆகிய பகுதிகளுள்தான் தற்போது கூறப்படும் அஸ்தினாபுரம் அடங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘புராணகிலா’ என்று அழைக்கப்படும் பழைய கோட்டை உள்ளது.

டெல்லி மாநகரைச் சுற்றி பல கோயில்கள் இருந்தாலும், லட்சுமி நாராயணன் (பிர்லா மந்திர்) கோயிலே பிரதானமாகக் கருதப்படுகிறது. சுகல் கிஷோர் பிர்லா என்பவர் இக்கோயிலைக் கட்டிய காரணத்தால் பிர்லா மந்திர் என்றே இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் தேவி, ஜெயந்தி என்றும் லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறார். எத்தனையோ எதிர்ப்புகளையும் போர்களையும் சந்தித்த இடத்தில் எழுந்தருளிய தேவி, அனைவரையும் அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பார் என்பது நம்பிக்கை.




ஒடிசா என்னும் கலிங்கப்பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலைப் போன்று இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மூன்று சிகரங்களைக் கொண்ட இக்கோயில் தமிழக கோயில்களில் காணப்படும் மாடத்தின் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இக்கோயில் முழுவதும் சிவந்த கற்களாலும், வெண்சலவைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. சுவர்களில் பகவத் கீதை, உபநிஷத்களில் இருக்கும் வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.

இங்கு மூலவராக லட்சுமியுடன் நாராயணன் அருள்பாலிக்கிறார். வீரிய லட்சுமியாக, கெஜலட்சுமியாக, ஆதிலட்சுமியாக, சந்தான லட்சுமியாக, விஜயலட்சுமியாக, ஜெயலட்சுமியாக பல பெயர்களைத் தாங்கி தேவி அருள்பாலிக்கிறார். அனைவருக்கும் ஜெயத்தை அருள்பவராக இருப்பதால், ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறார். வெற்றித் தெய்வமாக அனைவராலும் போற்றப்படுகிறார்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இத்தலத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். துர்கா பூஜை விசேஷமான முறையில் கொண்டாடப்படும். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்வதுண்டு. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள், கோயிலில் அமர்ந்து மகாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் கூறுவது வழக்கம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!