gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 27 பிரயாகை திரிவேணி

அம்மனின் சக்தி பீட வரிசையில் பிரயாகை (அலகாபாத்) என்று அழைக்கப்படும் திரிவேணி சங்கமம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பார்வதி தேவியின் கை விரல்கள் இப்பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமமே பிரயாகையின் சிறப்பாகும். இதிகாச, புராணங்களில் தீர்த்த ராஜா ஸ்தானம் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுவதால், யாத்ரீகர்கள், ‘புனித தீர்த்த ராஜா பிரயாகைக்கு ஜெயம் உண்டாகட்டும்’ என்று கொண்டாடுவது வழக்கம்.

தேவி திரிவேணி

நதிகளின் தோற்றங்களைப் பார்க்கும்போது, அன்னை பார்வதி தேவியின் கைவிரல்களில் இருந்தே நதிகள் உற்பத்தி ஆவதை அறியலாம். அதே அன்னையின் கைவிரல்கள் இப்பகுதியில் விழுந்திருப்பதால், இத்தலம் கூடுதல் சிறப்பு பெறுகிறது. மூன்று நதிகளின் சங்கமத்துடன், ‘திரிவேணி’ என்ற நீர் வடிவ பெயரைப் பெற்று அன்னை இங்கு அருள்பாலிக்கிறார். கங்கை நதி நீர் வெண்மையாகவும், யமுனை நதி நீர் கருமையாகவும், சரஸ்வதி நதி அந்தர்வாகினியாகவும் (கண்ணுக்குத் தெரியாமல் கீழே) கலப்பதாக ஐதீகம்.




கங்காஷ்டகம்

வற்றாத ஜீவநதியாக விளங்கும் கங்கையின் பெருமைகளை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற நோக்கில் ஆதிசங்கரர் கங்காஷ்டகத்தை அருளியுள்ளார்.

தன்னில் நீராடுபவர் மட்டுமல்லாமல், தன்னை நினைத்து பூஜிப்பவர்களையும் அனைத்து பாவங்களில் இருந்து விடுவிக்கிறாள் கங்கா தேவி. எவர் ஒருவர் மரணத் தருவாயில் கங்கை நீரை ஒரு துளியேனும் அருந்தி உயிர்விடுகிறாரோ அவர், மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறார்.

கார்த்திகை அமாவாசை தினத்தில், கங்காஷ்டகத்தை பாராயணம் செய்வதால், கங்கா தேவியின் அனுக்கிரகம் கிடைத்து, வேண்டுவன அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

சிவபெருமானின் ஜடாமுடியில் சலசலத்துக் கொண்டும், பேரண்டத்தை உடைத்துக் கொண்டும், சுவர்க்கத்தில் இருந்து கீழே வந்து, மானிடர்களின் பாவத்தை விரட்டி அடிக்கும் கங்கா மாதாவே. அனைவரையும் புனிதமாக்க வேண்டும். உங்கள் அணுவளவு நீரை யார் பருகுகிறாரோ, அவர் சுவர்க்க லோக வாசம் பெறுவர்.

யானைகளின் துதிக்கைகளும், முதலைகளும் கங்கா மாதாவின் வேகத்தை தடை செய்கின்றன. மாதர்கள் நீராடுவதால், அவர்களின் குங்குமம் கரைந்து, கங்கை நதி மஞ்சள் நிறத்தை அடைகிறது. அதிகாலை, மாலை வேளைகளில் முனிவர்கள் பூஜை செய்வதால், தர்ப்பை, பூக்கள் நிறைந்து காணப்படுகிறது.




பிரம்ம தேவரின் நித்ய கர்மானுஷ்டங்களுக்கான பாத்திரத்தில் இருக்கும் நீராகவும், ஆதிசேஷனின் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் வசிப்பவராகவும், சிவபெருமானின் ஜடாமுடி பூஷணமாகத் திகழும் ஜக்னு மகரிஷியின் புதல்வியாகவும் கங்கா மாதா விளங்குகிறார்.

இமயமலையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் கங்கா மாதா, மக்களின் சம்சார பயத்தை நீக்கி சமுத்திரத்தில் இணைகிறார். ஆதிசேஷன் போலவும், சிவபெருமானின் சிரசில் வில்வதளம் போலவும், கங்கா மாதா விளங்குகிறார். கங்கா மாதாவின் தீர்த்தத்தை ஒரு துளி பருகினால் நன்மைகள் பல கிட்டும். ஓடும் பிரவாகத்தில் நீராடினால் தேவேந்திரப் பதவி கூட எளிதாகக் கிட்டும்.

பகவதி தேவியான கங்கா மாதாவை வணங்கினால், எளிதில் ஐஸ்வர்யம் கிடைக்கும். மேலும், ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற எண்ணமும் பிறக்கும். தூய்மையான மனதுடனும் பக்தியுடனும் கங்காஷ்டகத்தை பாராயணம் செய்தால், அனைத்து பாவங்களும் நீங்கப் பெற்று, திருமால் மற்றும் சிவபெருமானின் அருள் கிடைப்பது நிச்சயம். மறுபிறப்பில்லா முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.




கோவில் சிறப்பு

திரிவேணி சங்கம கரையில் தென்னிந்திய முறையில், காஞ்சி காமகோடி பீடத்தால் கட்டப்பட்ட கோயில் இதுவாகும் . நான்கு மாடியுடன், 131 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிடப் பணிகள், 16 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்தன. நுழைவாயில் ஆதிசங்கரர், மந்தன் மிஸ்ரா விக்கிரகங்கள் காணப்படுகின்றன. சுவர்களில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஓவியங்களைக் காணலாம். அமர்ந்த கோலத்தில் காமாட்சி தேவி விக்கிரகம், வெளிப்புறச் சுவரில் மூகாம்பிகை, துர்கை, விந்தியவாசினி சிற்பங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது தளத்தில் பாலாஜி வடிவத்தில் மகாவிஷ்ணு, எதிரே வேணி மாதவர் அருள்பாலிக்கின்றனர். மூன்றாவது தளத்தில் ருத்ராட்ச மண்டபம் உள்ளது. இங்கு யோக சஹஸ்ரலிங்கத்துடன் 1,008 சிறிய சிவலிங்கங்களைக் காணலாம்.

திருவிழாக்கள்

பிரயாகையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்த கும்பமேளா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் வந்திருந்து புனித நீராடி, தங்கள் முன்னோரை வணங்குவது உண்டு. பித்ரு காரியங்கள் செய்ய பக்தர்கள் வருவதால், பிரயாகை எப்போதும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!