“இன்னு முலு” என்ற மலையாள படத்தின் தமிழ் ரீ மேக்காக உருவாகியுள்ள திரைப்படம் “யானை முகத்தான்” ஆகும். மலையாளத்தில் லால் பகதூர் சாஸ்திரி, வரிகுழியிலே கொல பாதகம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜேஷ் மிதிலா, தமிழில் முதன்முறையாக நடிகர் யோகி பாபுவுடன் கைகோர்த்துள்ளார்.
இதில் ஊர்வசி, கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமான பிரச்சனையை நகைச்சுவைக் கதையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். முயற்சி வெற்றி பெற்றதா? என்று விமர்சனத்தை பார்ப்போம்.
கதை சுருக்கம்:-
சென்னை முழுவதும் ஆட்டோ ஓட்டி கடன் வாங்கி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞர் தான் கணேசன் (ரமேஷ் திலக்). விநாயகரின் பக்தரான இவர் தனது எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்குமாறு கடவுளிடம் தினமும் வேண்டுவார். ஒரு நாள் விநாயகரின் சிலை மற்றும் புகைப்படம் எதுவும் கணேசனின் கண்களுக்கு தெரியவில்லை. துடிதுடித்து போன கணேசனுக்கு யோகி பாபு வடிவில் விநாயகர் நேரில் காட்சியளிக்கிறார். அடுத்து என்ன நடந்தது? கணேசன் திருந்தி வாழ்ந்தாரா? கணேசனை தரிசிக்க விநாயகர் நேரில் வந்தது ஏன்? போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதில் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
யோகி பாபுதான் அந்த விநாயகர் என்று தெரிந்த பிறகு கொஞ்சமாவது சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை மொத்தமாக நாமம் சாத்தியுள்ளனர்.எந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்தாலும் தனது இயல்பான உடல் மொழியினாலும் அவ்வப்போது கொடுக்கும் காமெடி கவுண்டர் வசனத்தினாலும் ரசிகர்களை ஈர்ப்பவர், ரமேஷ் திலக். அவரிடத்திலேயே இந்த மொத்த படத்தையும் தோளிள் தூக்கி சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர்.