செல்ல பிராணிகள் சுதந்திரமாக சுற்றி தெரியும் போதும், விளையாடிக் கொண்டிருக்கும் போதும் சில நேரங்களில் கவனமின்மையால் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கும் செல்லப் பிராணிகளினால் ஏற்படும் சில சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? மற்றும் செய்யக்கூடாது விஷயங்கள் என்ன? என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்குகிறார்கள் அரசு கால்நடைதுறை மருத்துவர்கள் .
நம்மில் பலரின் வீடுகளில் நாய், பூனை போன்று செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இருக்கலாம்.வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தாலே அது மகிழ்ச்சியான ஒன்றாகவும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகவும் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் நாய் மற்றும் பூனை ஆகியவை தான் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது.
பொதுவாகவே நாய் மற்றும் பூனை வளர்ப்பில்,முதலாவதாக stray dog மற்றும் stray cat என சொல்லப்படும் தெரு நாய் மற்றும் பூனை ஈன்றும் குட்டிகள் பிறந்தவுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்ற காரணத்தினால் அதை பெரும்பாலான மக்கள் தங்களது செல்லப் பிராணிகளாக வளர்க்க வேண்டும் என்று அதனை தாயிடமிருந்து பிரித்தெடுத்து வந்து தங்களுடைய செல்லப் பிராணிகளாக வளர்ப்பார்கள்.
ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது ஏனென்றால் எப்படி ஒரு பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் முக்கியமானதோ அதே போல செல்லப் பிராணிகளுக்கும் பிறந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது. ஆதலால் அவற்றை இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் நம்முடைய செல்லப் பிராணிகளாக தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் செல்லப் பிராணிகளுக்கு முறையாக வேண்டிய தடுப்பூசிகளை செலுத்தி விட வேண்டும். அப்போதுதான் அதன் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது உங்களையோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களையோ கடித்தால் கூட பெரிய அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.
மேலும் அவற்றுக்கு முறையான உணவு முறைகளை பின்பற்றி முறையான உணவுகளை வழங்க வேண்டும். செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பெரும் பிரச்சனையாக இருப்பது இதுதான். பொதுவாக அவை நமது குடும்ப உறுப்பினர் போல வளர்வதால் நாம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் அதுவும் படுத்து உருள்கிறது. இதனால் அதன் முடி நமது வீடு முழுவதும் கொட்டி கிடக்கும் சில நேரங்களில் உணவு பொருட்களில் கூட இருக்க வாய்ப்புள்ளது. எனவே தினமும் உங்கள் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துங்கள். டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை vacuum மூலம் சுத்தப்படுத்துங்கள். குறிப்பாக சமயலறைக்குள் உங்கள் செல்லப்பிராணியை நுழைய விடாதீர்கள்.
வீடுகளை சுத்தப்படுத்துவதை போல் செல்லப்பிராணிகளையும் முறையாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சுத்தப்படுத்த வேண்டும். இதனால் அவையும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நமக்கு பரவும் நோய்களிலிருந்து நம்மையும் பாதுகாக்கும். அவற்றை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இயற்கை உபாதைகளை கழிக்க கற்று தர வேண்டும். கண்ணுக்கு தெரியாத இடத்தில் அவை மலம் கழித்து வைத்திருந்தால் அது உங்களுக்கு தேவையற்ற தொற்று நோய்களை பரப்ப வாய்ப்புள்ளது.
நீங்கள் உணவு உண்ணும்போது உங்கள் செல்லப்பிராணி அருகில் இருந்தால் அவற்றிற்கும் அதே கையில் ஊட்டி விடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், உண்மையில் அது உங்களுக்கும், உங்கள் பிராணிக்கும் நல்லதல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் பயன்படுத்துவதற்கு துணிகளை தேர்வு செய்யும் போது செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு மைக்ரோ பைபர், வினைல், நைலான், கான்வாஸ் போன்ற துணி வகைகள் செல்லப்பிராணிகள் கடித்தாலும் கீறினாலும் அதிக அளவு சேதம் அடையாமல் இருக்கும். மேலும் துர்நாற்றம் வராமல் பாதுகாப்பதோடு தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.இந்த துணிகளை மரச்சாமான்கள், மெத்தை விரிப்புகள், மேசைகள் ஆகியவற்றிற்கு நாம் பயன்படுத்தலாம்.
செல்லப் பிராணிகளுக்கு சரியான பயிற்சிகளை அளித்து வளர்ப்பது மிகவும் முக்கியம். அது ஒவ்வொரு முறை ஏதேனும் சரியான செயலை செய்யும்போது அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி கொடுக்க வேண்டும். இதனால் மீண்டும் மீண்டும் அந்த செயலை செய்து உங்களிடம் வெகுமதி பெற அவர்கள் முயற்சி செய்வார்கள். உதாரணத்திற்கு உங்கள் செல்லப் பிராணி மாரச்சாமான்களை கடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அவற்றை அங்கிருந்து இழுத்து ஏதேனும் விளையாட்டு சாமானை அதற்கு கொடுக்கலாம்.
இதை செய்யும் போது கூடவே வெகுமதி அளிப்பதன் மூலம் அடுத்த முறை அதை மரச்சாமான்களை கடித்து குதறுவதை மறந்துவிடும். ஆனால் சில செல்லப்பிராணிகளுக்கு இதனை பழகுவதற்கு சிறிது கால தாமதம் ஆகலாம். இவை தவிர்த்து மேஜை மீது மிளகாய் தூள், மிளகு தூள் அல்லது வினிகர் ஆகியவற்றை போட்டு வைப்பதன் மூலம் அந்த நெடியினால் செல்லப் பிராணிகள் மரச்சாமான்களை நெருங்குவதை தவிர்த்து விடும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1