பஞ்சபூத தலங்களுள் (நீர் – அப்பு) ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயில், சக்தி பீட வரிசையில் வாராகி பீடத் தலமாக விளங்குகிறது. அகில அண்டங்களுக்கும் முதல்வியாகத் திகழக்கூடிய அன்னை ஆதிசக்தி, அகிலாண்டேஸ்வரி என்ற திருப்பெயரைத் தாங்கி இத்தலத்தில் அருளாட்சி புரிகிறார்.
ஈசன், சுயம்பு லிங்கமாக விளங்கும் இத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது. ஈசனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60-வது திருத்தலமாக விளங்குகிறது. அம்மனின் ஞானசக்தி பீடமாக விளங்கும் இத்தலத்தில், சரஸ்வதி தேவி நின்ற நிலையில் வீணையில்லாமல் அருள்பாலிக்கிறார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கத்துக்கு அருகே, காவிரி நதிக்கரையில் திருவானைக்காவல் அமைந்துள்ளது. ‘ஆனைக்கா’ என்பது யானைகள் நிறைந்த சோலையைக் குறிக்கும். ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் ‘திருவானைக்கா’ என்று இத்தலம் பெயர் பெற்றது. சோலைகளும் காடுகளுமே இறைவன் உறையும் இடங்களாக மாறியுள்ளன. அந்த வகையில் இத்தலம் ‘கஜாரண்ய க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
தல வரலாறு
ஜம்பு என்ற முனிவர் சிவபெருமானை நோக்கி இவ்விடத்தில் தவம் இருந்தார். முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு நாவல் பழத்தை (ஜம்பு பழம்) அளித்து அருள்பாலித்தார். நாவல் பழத்தை விதையுடன் உண்டதால், முனிவரின் வயிற்றில் அது மரமாக வளர்ந்தது. இதனால் முனிவர் இவ்விடத்தில் முக்தி அடைந்தார்.
அதே சமயம் சிவபெருமானின் ஆணைக்கு இணங்க, பார்வதிதேவி பூவுலகில் மானிடப் பெண்ணாகத் தோன்றினார். இந்த நாவல் மரத்தடியில் காவிரி நீரில் லிங்கம் பிடித்து சிவபெருமானை வழிபட்டதால், அம்பிகைக்கு அருள்பாலித்தார் ஈசன். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ‘நீர்’ தலமாக விளங்குகிறது. மேலும், ஜம்பு என்ற முனிவருக்கு முக்தி அளித்ததால், சிவபெருமான் ‘ஜம்புகேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அகிலாண்டேஸ்வரி அம்பாள் இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை மதிய வேளையில் (உச்சிக்காலம்) பூஜிப்பதால், இத்தலத்தில் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து சுவாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேகம் செய்துவிட்டு, கோமாதா பூஜையும் செய்து அம்பாள் சந்நிதிக்கு திரும்புவர். இந்த பூஜையை அம்பாளே நேரில் செய்வதாக ஐதீகம்.
அம்பாள் சிவபெருமானை இத்தலத்தில் ஆடி வெள்ளிக் கிழமையில் பூஜித்ததால், ஆடி வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். அம்பாள் காலையில் திருமகளாகவும், உச்சிக் காலத்தில் பார்வதிதேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் குருவாக இருந்து, மாணவியான பார்வதிதேவிக்கு உபதேசம் செய்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1