gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 19 கோலாப்பூர் மகாலட்சுமி

அம்மனின் சக்தி பீட வரிசையில், கரவீரத்தலம் என்று அழைக்கப்படும் கோலாப்பூர் தலத்தில் தேவியின் கண்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மகாலட்சுமி என்ற திருநாமத்துடன் தேவி அருள்பாலிக்கிறார். தேவியுடன் திருமாலும் இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.

காந்தம் இரும்புத் துகள்களை தன் வசம் ஈர்ப்பது போல, அன்னை மகாலட்சுமி, வானவர்கள், முனிவர்கள், மண்ணகத்தார் அனைவரையும் இத்தலத்தை நோக்கி வரச் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.




தல வரலாறு

 

முன்பொரு காலத்தில் மார்க்கண்டேய மகரிஷி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் நான்கு வேதங்கள், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம், ஆயுர்வேதம், ஜோதிடம், தர்ம அர்த்த மந்திரங்களை கற்றுணர்ந்தவராக விளங்கினார். ஒருநாள் அவர், தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து முக்தி அடைய எண்ணினார். இதுகுறித்து நாரத மகரிஷியின் ஆலோசனையை வேண்டினார். முக்தி அடைய தவம் மேற்கொள்ள தகுந்த இடத்தையும் குறிப்பிடுமாறு, நாரத மகரிஷியை கேட்டுக் கொண்டார்.

அப்போது நாரத மகரிஷி, அவரிடம் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது: ஒருசமயம் சிவபெருமானுக்கும் மகாலட்சுமிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆதிகாலத்தில் தான் வசித்து வந்த கரவீரத்தலமே சிறந்தது என்று மகாலட்சுமியும், தான் உறையும் காசித் தலமே சிறந்தது என்று சிவபெருமானும் வாதிட்டனர். அப்போது திருமால் ஒரு தராசைக் கொண்டு வந்து, ஒரு தட்டில் காசித் தலத்தையும், மற்றொரு தட்டில் கரவீரத் தலத்தையும் வைத்தார். கரவீரத்தலம் இருந்த தட்டு தாழ்ந்தது. காசித் தலம் இருந்த தட்டு உயர்ந்தது. இதனால் கரவீரத்தலமே உயர்ந்தது என்று திருமால் கூறினார்.




இதற்கான காரணத்தை சிவபெருமான் வினவினார். அதற்கு திருமால், “காசித் தலம் முக்தியை மட்டுமே அருளும். கரவீரத்தலம் புத்தி, முக்தி இரண்டையும் அருளும் என்பதால் கரவீரத்தலம் காசியை விட உயர்ந்தது” என்றார்.

இதைக் கேட்ட சிவபெருமான், உடனடியாக தனது கணங்களுடன் கரவீரபுரத்தை அடைந்தார். ஈசனைத் தொடர்ந்து, மணிகர்ணிகை, பிரயாகை, கங்கை முதலான தீர்த்தங்களும் கரவீரத்தலத்தை அடைந்தன. பஞ்சகங்கா என்ற திருநாமத்துடன், கரவீரத்தலம் அருகே (10 கிமீ தொலைவில்) கங்கை வசிக்கத் தொடங்கினார்.




பாண்டுரங்கர் முதலான தேவர்களும் துர்வாசர், நாரத மகரிஷி போன்றவர்களும் கரவீரத்தலம் வந்தடைந்தனர். ஜெயந்தி நதி, கோமதி நதி இணையும் இடத்தில் துவாரகாபுரி நிர்மாணம் ஆனது.

இத்தகவல்களை நாரத மகரிஷி மார்க்கண்டேய மகரிஷிக்கு கூறியதால், மார்க்கண்டேய மகரிஷிக்குள் ஒரு தெளிவு பிறந்தது. உடனே, அன்னை மகாலட்சுமி அருள்பாலிக்கும் கரவீரத்தலத்துக்கு (கோலாப்பூர்) விரைந்து, அங்கு கடும் தவம் புரிந்தார்.




அன்னை பவானி

கோலாப்பூர் தலத்தில் நாரத மகரிஷி வசிக்கிறார். தட்சணத்தில் துர்வாசர், அகத்தியர், வாயு திக்கில் பராசரர், விசால தீர்த்தத்தின் அருகில் வேதவியாசர் வசிக்கின்றனர். மேலும், தலத்தைச் சுற்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிஷ்டாதி நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகளும் வசிப்பதாக கூறப்படுகிறது. அன்னை மகாலட்சுமி, பக்தர்களின் பாவங்களை தன் கடைக்கண் பார்வையால் சுட்டெரிப்பவராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பாவங்கள், துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக இத்தலத்துக்கு வந்து அன்னை மகாலட்சுமியை வேண்டும் பக்தர்கள், அன்னையை அவர்கள் தாயாகக் கருதி ‘அன்னை பவானி’ என்று அழைத்துப் போற்றுகிறார்கள்.




பிரளய காலத்தில் கடல் பொங்கியதால், அனைத்து இடங்களும் மூழ்கின. இப்பகுதியை மட்டும் அன்னை மகாலட்சுமி, தன் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தினார். அதனால் இத்தலம் கரவீரத்தலம் என்று போற்றப்படுகிறது.

கோலாப்பூர் தலத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமி விக்கிரகம், 40 கிலோ எடை கொண்ட மணிக்கற்களால் அமைந்துள்ளது. அன்னை மகாலட்சுமி 3 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மேற்கு திசை நோக்கியபடி அருள்பாலிக்கிறார். இவரது வாகனமான சிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அன்னையின் மகுடத்தில் திருமாலின் நாகம் செதுக்கப்பட்டுள்ளது.




திருவிழாக்கள்

கோயிலில் தினமும் ஐந்து சேவைகள் நடைபெறும். விடியற்காலை (துயிலும் தேவியை எழுப்புவது), காலை (சோடச உபசாரங்கள்), மதிய, மாலை, இரவு (ஷேஜாரதி பூஜை) நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் அன்னை மகாலட்சுமி பிரகாரத்தில் பவனி வருவார். கிரண் உற்சவ தினங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னை மகாலட்சுமியை தரிசனம் செய்வது வழக்கம். நவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!