அம்மனின் சக்தி பீட வரிசையில் சிம்லா சியாமளா தேவி கோயிலும் ஒன்று. பிரம்மாண்ட வடிவில் காளியாக, பத்ரகாளியாக வடிவம் கொண்டு பல கோயில்களில் அருள்பாலிக்கும் அன்னை, இத்தலத்தில் சித்துவடிவமாக சியாமளா தேவி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அன்னையின் பெயரே பிற்காலத்தில் மருவி, இத்தலம் ‘சிம்லா’ என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
இந்தியத் தலைநகரமா புது தில்லியிலிருந்து சுமார் 365 கி.மீட்டர் (226.8 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து கடவுள் காளியின் மறு அவதாரமாகக் கருதப்படும் சியாமளா தேவி அன்னையை போற்றும் வகையில், இந்நகருக்கு ஷிம்லா என்று பெயர் வந்தது.
மதங்க முனிவரின் மகள்
மதங்க முனிவர், அன்னை பராசக்தி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்றும், சிவபெருமான் தனது மருமகன் ஆகவேண்டும் என்றும் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். சிவபெருமானும் அவ்வரத்தை அருளினார். அதன்படி அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. தமிழகத்தில் திருவெண்காட்டு தலத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில், ஆடிமாத வெள்ளிக்கிழமையில் நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தார். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. தக்க பருவத்தில் சிவபெருமானும், சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில் மதங்கேஸ்வரராகத் தோன்றி ராஜ மாதங்கியை மணந்தார் என்று திருவெண்காட்டு தலபுராணம் கூறுகிறது.
மாதங்கி தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகு சியாமளா என 6 தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதியாகத் திகழ்ந்தனர். லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ சாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற நூல்கள் ராஜ மாதங்கியின் சிறப்புகளைப் போற்றுகின்றன.
ராஜ மாதங்கியின் மரகதப் பச்சை வண்ணம் ஞானத்தையும், கைகளில் உள்ள வீணை சங்கீத ஞானத்தையும், கிளி பேச்சுத் திறமை பெற அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் உணர்த்துகின்றன,. மேலும், மலர் அம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு சக்தியையும், கரும்பு உலகியல் ஞானத்தையும், அங்குசம் அடக்கி ஆளும் திறனையும் குறிக்கின்றன.
சிறிய மூர்த்தி
சிம்லா கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள பிரதேசமாகும். சியாமளா தேவி கோயில் சிம்லாவுக்கு தெற்கே உள்ள தாரா தேவி மலைச் சிகரத்தில், சிறிய அளவில் சதுரமான இடத்தில் அமைந்துள்ளது. ஓட்டுக் கூரை வேய்ந்து இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 1845-ல் கட்டப்பட்டுள்ள இதுவே அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
‘மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது’ என்ற கூற்றுக்கு ஏற்ப, இத்தலத்தில் தேவி, சிறிய வடிவம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். ஒரே அறையில் அனைத்து சந்நிதிகளும் அடங்கியுள்ளன.
பிற கோயில்கள்
தாரா தேவி கோயில் தவிர அதே பகுதியில் ‘காளி பாலி’ என்ற சிறிய காளி கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டிடம் முழுவதும் சலவைக் கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. எந்த நேரமும் பஜனையும், பூஜையும் நடந்து கொண்டிருப்பது தனிச் சிறப்பு. கடின பயணம் மேற்கொண்டு காளியைத் தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. டாமி என்ற பகுதியில் உள்ள காளி கோயிலில், காளி மீது கற்களை வீசி, பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
ஜக்கோ மலைப் பகுதியில் சிம்லாவை விட ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது அனுமார் கோயில். இங்கு பிரதான தெய்வமாக 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் திகழ்கிறார். சிறிய வடிவத்தில் ராமபிரான் அருள்பாலிக்கிறார். நுண்ணிய பொருட்களில் இருந்தே பிரம்மாண்ட சக்திகள் பிறக்கின்றன என்பதை உணர்த்தும் விதத்தில் சியாமளா தேவி கோயிலும், அனுமார் கோயிலும் அமைந்துள்ளன.
திருவிழாக்கள்
நவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், சிறப்பு விருந்து நடைபெறும். துர்கா பூஜை தினத்தில் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். தீபாவளி பண்டிகையின்போது, முப்பெரும் தேவியரின் அம்சமாக இருக்கும் சியாமளா தேவியைக் குடும்பத்துடன் வழிபடுவர். செவ்வாய்க் கிழமையில் வரும் அமாவாசை தினங்களிலும், வியாழக் கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும். மாசி மாத நவராத்திரி சியாமளா நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1