பிரம்மாவின் புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் ‘பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்’ வரமாகப் பெற்றான். மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான். இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான்.
தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான். ஹரித்வாரில் அமைந்துள்ள ‘கனகல்’ என்னும் தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது. அன்னை சக்தி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான்.
தட்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி கோபத்துடன் அவரின் தந்தை தக்சனிடம் சண்டையிட்டாள்.
சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதாக சிவபுராணம் தெரிவிக்கின்றது.
சிவபெருமான், சக்தி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.
51 சக்தி பீடங்கள் எங்கு அமைந்துள்ள என்று பார்க்கலாம். இந்த சக்தி பீடங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் மனதார நினைத்து வணங்கலாம். அவரவர்கள் வசிக்கும் ஊருக்கு அருகில் உள்ள சக்தி பீடங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று வரலாம்.
இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எந்த ஊரில் என்ன பெயரில் அமைந்துள்ளது என்பதை நாளைய பதிவில் பார்க்கலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1