Serial Stories sirukathai

தினம் தினம் தீபாவளி

சிறுகதை

 

“கண்ணா நாளை காலை மதியும் , மாப்பிள்ளையும் வந்திடுவாங்க . உன் பொண்டாட்டியை தயார் செய்ய வேண்டியது உன் வேலை ” வாசுகி மகன் கமலக்கண்ணனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட , அவன் போகும் அன்னையின் முதுகை முறைத்தான் .

பொண்டாட்டியை தயார் பண்றதாவது ? முதலில் அவள் பொண்டாட்டிதானா ? கல்யாணமாகி மூன்று மாதங்கள் முடிந்து விட்டன.இன்னமும் தானும் , அவளும் கணவன் மனைவிதானா ? என்ற சந்தேகம்தான் அவனுக்கு .




இதோ அவர்களுடனேயே திருமணம் ஆனவர்கள்தான் அவனது தங்கை வெண்மதியும் , கார்த்திகேயனும் .ஆனந்தமாக அவர்களது தலை தீபாவளியை கொண்டாட இங்கே வருகிறார்கள் .

 கமலக்கண்ணனுக்கும் இதுதான் தலைதீபாவளி .அவனுக்கும் மாமியார் வீட்டிலிருந்து அழைப்பு வந்ததுதான் .ஆனால் அவன்தான் வேலை இருப்பதாக மறுத்து விட்டான் . அவர்களும் சரியென்று போய்விட்டார்கள் .கொஞ்சம் கூட வருத்தமில்லையே என்று வருத்தப்பட்டது கமலக்கண்ணனும் , வாசுகியும்தான் .

மகளை தீபாவளிக்கு அழைத்துப் போனால் திரும்பவும் இந்த வீட்டிற்குள் நுழைய விடுவார்களோ என்னவோ …என்ற பயமாயிருக்கும் , தன் மனைவி வீட்டினரைப் பற்றி உதடு இகழ நினைத்துக் கொண்டான் .

மூன்று மணி் பின் மதிய வெயிலில் திடுமென சாமர தென்றல் போலொரு குளிர்ச்சி தோன்ற நிமிர்ந்து பார்த்தவன் , அணிந்திருந்த புடவை தலைப்பு பூவிதழ் அவிழ்வது போன்ற மென்மையுடன் அசைய , இவனைக் கடந்து போனவளை பார்த்தான் .

சித்தாரா…அவனது மனைவி .மூன்று மாதங்களுக்கு முன்பு திடீர் விபத்தாக இவன் வாழ்க்கைக்குள் நுழைந்தவள் .இகழ்ந்து வளைந்த தன் இதழ்களை கவனித்தபடி கடந்தவளைக் கண்டதும் கோணிய இதழ்களை சரிப்படுத்திக் கொண்டான் .அவள் வீட்டின் பின்புற தோட்டத்திற்கு செல்ல , அவனும் பின் தொடர்ந்தான் .

சின்ன தொட்டியில் குபீரென பூத்திருந்த செவ்வந்திப் பூக்களை சிறு கத்திரி வைத்து கவனமாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தாள் .இவன் பின்னாலிருப்பது தெரியாமல் இருக்காது .ஆனாலும் கவனிக்காதது போல் பாவனை .கமலக்கண்ணன் பற்களை சத்தமில்லாமல் நறநறத்துக் கொண்டான் .

சித்தாரா இப்படித்தான் இருந்தாள் .எங்கேயோ யாருடைய வீட்டிலோ இருப்பது போன்ற உரிமையற்ற விலகலுடனேயே வலம் வந்து கொண்டிருந்தாள் .லேசாக தொண்டையை செருமி பார்த்தான் .ம்ஹூம் பலனில்லை .

அம்மா …மனதிற்குள் அம்மாவை திட்டினான் .திடீரென்று நீங்கள் கூட்டி வந்து மணவறையில் உட்கார வைத்தவள்தானேம்மா இவள் ? இவளை சமாதானப்படுத்துவதை நீங்களே செய்ய வேண்டியதுதானே ? எதற்கு என்னை இழுக்குறீர்கள் ? 

சித்தாரா கூடை நிறைய பூக்களுடன் திடுமென திரும்பி விட , கமலக்கண்ணன் உரசலை தவிர்க்க வேகமாக பின்வாங்கினான் .

” என்ன ? ” 




” வ…வந்து …உன்னிடம்…உ…உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் ” 

” பேசலாமே ! மாடிக்கு போய்விடலாம் ” 

அதுதான் பிரச்சனையே ! 

அவள் மாடியேறத் தொடங்கி விட , கமலக்கண்ணனும் பின் தொடர்ந்தான் .முன்னால் சிறு சிட் அவுட் ,அடுத்து பெரிய அறை , அறையை ஒட்டிய நீள பால்கனி என சகல வசதி கொண்டது அவனது படுக்கையறை.இப்போது தலை தீபாவளிக்கு கணவனோடு வரும் வெண்மதி தாங்கள் ஒரு வாரம் தங்குவதற்கு இந்த அறையே வேண்டுமென்கிறாள் .

உடனே சரியென்க இது இப்போது கமலக்கண்ணன் அறை மட்டுமில்லையே ! அவளிடம் ஒரு வார்த்தை கேட்டுச் சொல்கிறேனேம்மா …போனில் தங்கையிடம் இவன் பேச , என்னண்ணா பேச்சு ஒரு மாதிரி மாறியிருக்கிறது ? என்றவளின் குரல் தொனி மாறியிருந்தது.

பொண்டாட்டி பக்கம் போய்விட்டாயா ? அதுவும் அவள் பக்கமா ? என்றவளின் கேள்விக்கு கமலக்கண்ணனுக்கு எரிச்சல் வந்தது .இவனது இந்த திடீர் திருமணத்தில் தங்கையின் பங்கும் இருக்கிறதே ! அதனை இவள் உணரவில்லையே ! வாயை இறுக்கிக் கொண்டான் .

” மாப்பிள்ளையுடன் வரும் போது உனக்கு நீ கேட்ட ரூம் தயாராக இருக்கும் ” போனை கட் செய்தான் .

” நாளை மதியும் , மாப்பிள்ளையும் தலை தீபாவளிக்கு வருகின்றனர் ” பால்கனி வாசலில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்தாராவிடம் சொன்னவனுக்கு உள்ளே திக்…திக்தான் .

உன் தங்கைக்கு மட்டும்தான் தலை  தீபாவளியா  ? எனக்கில்லையா …எனக் கேட்டுவிட்டால் ? 

” ம் …சரி ” என வெளியே கவனம் காட்டி நின்றவளின் காது ஜிமிக்கியை பார்த்தபடி ” வீட்டு மாப்பிள்ளை ,நம் வீட்டில்  முதல் பண்டிகை .தேவையான வசதிகள் செய்து கொடுப்பது நம் கடமை ” 

காற்றிலசையும் கொடியாய் தலை திருப்பினாள் . ” ஒன்றும் புரியவில்லை .ஏன் துண்டு துண்டாக பேசுகிறீர்கள் ? என்ன விசயமென்று கரெக்டாக சொல்லுங்கள் ” காது ஜிமிக்கிகள் அவளுக்கு தலையாட்டின.

” நம் வீட்டில் இந்த அறைதான்  கொஞ்சம் வசதியாக இருக்கும் .வெண்மதி இந்த அறை வேண்டுமென்கிறாள் .ஒரு வாரம்தான் …” நாவல்பழமென உருண்டு இவனை பார்த்த விழிகளில் பேச்சை பாதியில் நிறுத்தினான் .இப்போது எதற்கு இப்படி பார்க்கிறாளாம் ? 

” அப்போ  இது உங்கள் அறை இல்லையா ? ” 

ஏதேதோ ஆட்சேப பேச்சுக்களை எதிர்பார்த்தவன் இந்தக் கேள்வியில் அயர்ந்தான் .உன் தங்கைக்கு இருக்கும் உரிமை உனக்கு இந்த வீட்டில் இல்லையா ? என்ற பொருள் தரும் கேள்விதானே இது ? மிக நாசூக்காக அவனது உரிமையை சுட்டுகிறாள் .இவள் …இவ்வளவு புத்திசாலியா ? 




அவளைத் திரும்பிப் பார்க்க , அவள் பீரோ திறந்து தனது உடைகளை பெட்டியில் அடைத்துக் கொண்டிருந்தாள் .உடனே தயாராகி விட்டாள் .மிக லேசாக அவள் மேலொரு வாஞ்சை வந்தது .தனது உடைகளையும்  பேக்கில் அடைத்தவன் …

” கீழே கடைசி அறை நமக்கு .ஒரு வாரம் மட்டும்தான் …” கொஞ்சம் பயத்துடன்தான் சொன்னான் .ஏனெனில் அது மிக சிறிய அறை .

” ம் ” என்ற ஒற்றையெழுத்தை தவிர வேறு பதிலில்லை அவளிடம் .

ஒற்றைக் கட்டில் கிடந்த குறுகலான அறையின் தரையில் சலனமின்றி ஒடுங்கி படுத்திருந்தவளை பார்த்திருந்தவனுக்குள் சலனம் .

ர்ப்பாட்டமாய் வந்திறங்கிய கார்த்திகேயனிடம் தலை தீபாவளி மாப்பிள்ளை என்ற மமதை சற்று அதிகமாகவே இருந்தாற் போலிருந்தது .

” காலையில் எட்டு மணிக்கு எனக்கு காலை டிபன் தயாராக இருக்க வேண்டும் அத்தை .பதினோரு மணிக்கு காபி .மதிய சாப்பாடு ஒரு மணிக்கு .நைட் எட்டு மணிக்கு டின்னர் . ஏதாவது அவுட்டிங் ஏற்பாடு செய்தீர்களானால் முதலிலேயே சொல்லி விட வேண்டும் ” 

 தொடர்ந்த அவன் அலப்பறைகள் கமலக்கண்ணனுக்கு எரிச்சலை கொடுக்க , வாசுகி முகத்தின் இதழ்கள் மட்டும் இளித்தபடியே இருந்தன. வீட்டு மாப்பிள்ளையாம் .சகித்துக் கொள்ளத்தான் வேணுமாம் .

கார்த்திகேயனின் உபச்சார எதிர்பார்ப்பை கூட கமலக்கண்ணன்  சகித்துக் கொள்வான் .ஆனால் சித்தாராவிடம் அவன் காட்டிய அலட்சியத்தை …இத்தனைக்கும் இந்த நிலைமைக்கு காரணமே கார்த்திகேயனும் , அவன் குடும்பமும்தான் .

பெண் கொடுத்து பெண் எடுப்பதாக சம்பந்தம் பேசி திருமணம் முடிவானது அவர்கள் இரு குடும்பத்திற்குள்ளும் .கார்த்திகேயனின் தங்கை சரிதா கமலக்கண்ணனுக்கென மணம் பேசப் பட்டவள் , திருமணநாள் காலை அவள் காதலனுடன் ஓடிப் போக , இரண்டாக பேசப்பட்ட திருமணத்தை என்ன செய்வதென தவித்திருந்தனர் இரு வீட்டினரும் .மகன் திருமணம் மட்டுமாவது நடக்கட்டுமென கார்த்திகேயனின் அப்பா கேட்க , தன் மகன் வாழ்க்கை என்னாவதென  திகைத்து நின்ற வாசுகியின் முன் தன் மகளை கொணர்ந்து நிறுத்தினாள் நர்மதா .

அவள் வாசுகியின் பள்ளிக்கால தோழி .திருமணத்திற்கென வந்திருந்தவள் .அன்றைய சூழ்நிலையில் எதையும் யோசிக்கும் நேரமின்றி , தானே சித்தாராவின் கை பிடித்து அழைத்துப் போய் மகனருகில் அமர்த்தினாள் வாசுகி .

” ஆயிரம் இருந்தாலும் என் தங்கை சரிதா போல் வராது .ஆனாலும் நீங்க பாவம்தான் ” மனைவி மடித்துக் கொடுக்க வாய்க்குள் வெற்றிலையை அமுக்கியபடி பேசுபவனை அறையும் ஆவல் வந்தாலும் தங்கைக்காக கட்டுப்படுத்தினான் கமலக்கண்ணன்.

” உங்கள் தங்கைக்கும் இது தலை தீபாவளியா மச்சான் ? ” 

” ஆமாம் , நாங்க அவுங்களை அழைத்து …” தனது உளறலை உணர்ந்து நாக்கை கடித்தான்.

” ஆக மூன்றே மாதங்களில் உங்கள் தங்கையை மன்னித்து ஏற்றுக் கொண்டீர்கள் ? ” 

திருமணத்திற்கு முதல் மாதம் தனது காதலை சரிதா சொல்ல , உன்னால் எனது திருமணமும் நிற்க வேண்டுமா என கார்த்திகேயன் கோபப்பட , இறுதியில் அனைவருமாக மணமேடை வரை கொண்டு வந்து ஒரு திருமணத்தை மட்டும் முடித்து விடுவோமென முடிவெடுத்து செயல்படுத்த… நிர்பந்த கைதியாக்கப்பட்ட தனது பிறந்த வீட்டு நிலைமையை உணர்ந்து கணவனை வெறித்தாள் வெண்மதி. அதன் பிறகு கார்த்திகேயனிடம் மயான அமைதி .




தீபாவளி முடிந்த மறுநாளே தலை தீபாவளி தம்பதியர் கிளம்பி விட , அவர்கள் அறை அலமாரியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த கணவனை விழி விரித்து பார்த்து நின்றாள் சித்தாரா .அவளுடைய புடவை , ஜாக்கெட்டுகளையும் சேர்த்து அழகாக அடுக்கிக் கொண்டிருந்தான் .

” நேற்று காலை கேசரி கிண்டி முடித்ததும் வாயில் வைத்து ருசி பார்த்தாயே , அப்போதே தோன்றியது .அது அடுப்படி .பக்கத்தில் அம்மா வேறு .முடியவில்லை . இப்போது …” மனைவியை நெருங்கி அவள் முகம் பற்றி இழுத்து இதழணைத்தான் .

கணவனின் முதல் முத்தத்தில் திணறி சிவந்து முகம் மூடியவளின் கைகளை விலக்கி கண்களோடு கலந்து ” இனி நமக்கு தினம் தினம் தீபாவளிதான் ” என்றான் .

What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!