22
இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு , வாயை பொத்தி என்றால் அப்படியே வாயை பொத்திக் கொண்டு திருதிருவென கண்களை உருட்டிக் கொண்டு தனது எம்டி சேரை விட்டு ஓரமாக கிடந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்திருந்தான் விஸ்வேஸ்வரன் .கமலினி கைகளை பிசைந்தபடி அவன் முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் .
” கமலி நான் மேக்சிமம் டிரை பண்ணேன்பா .ஆனால் …”
” வாயை மூடுங்க .ஒரே முத்தத்தில் என் காலடியில் கிடப்பாள்னு எக்களிப்பு வேறு உங்களுக்கு “
” கடைசி ஸ்டெப் வரை போயிட்டேன் . திடீர்னுதான் …”
” பேசாதீங்கன்னு சொன்னேன்ல .இந்த உருப்படாத ஐடியா எப்படித்தான் தோணுச்சோ ? “
” அது …ஒரு சினிமா படத்தில் பார்த்தேன் கமலி . ஹீரோ ஹீரோயின் பின்னால் சுற்றிக் கொண்டே இருக்கிறான் . அவள் கண்டுக்கவே மாட்டேன்கிறாள் .திடீரென்று ஒரு நாள் ஹீரோ அவளை இழுத்து பிடித்து கிஸ் பண்ணி விடுகிறான் .அவ்வளவுதான் ஹீரோயினும் அவனை லவ் பண்ண ஆரம்பித்து விடுகிறாள்.அட பொண்ணுங்களை லவ் பண்ண வைக்க இவ்வளவு ஈசி மெதட் இருக்குதான்னு நினைச்சுட்டு , அதையே டிரை பண்ணலாம்னு நினைச்சேன் …”
” ஐய்யோ வாயை மூடுங்கன்னு சொல்றேன்ல .பொண்ணுங்கன்னா அவ்வளவு ஈசியா போச்சா உங்களுக்கெல்லாம் ? “
” ஏய் …அந்த படத்தில் அப்படி காட்டினாங்கப்பா”
” அதையேதானே நீங்களும் செய்து பார்க்க நினைச்சீங்க ? சரி நினைச்சீங்களே …அதையாவது உருப்படியாக செய்தீர்களா ? ” கேட்டுக் கொண்டிருக்கும் போதே கமலினியினுள் சற்று முன் நடந்த சம்பவங்கள் டிஜிட்டல் ஸ்கிரீனை போல் தெளிவாக ஓடத் துவங்கின .
எப்போதும் விஸ்வேஸ்வரன் எம்டி நாற்காலியிலும் , நிகிதா எதிரிலிருக்கும் சேரிலுமாகத்தான் உட்கார்ந்து பேசுவார்கள் . இன்றோ விஸ்வேஸ்வரன் தனது இருக்கையிலிருந்து எழுந்து நிகிதாவின் சேர் அருகே பேசியபடியே வந்து நின்றான் .அவளது தோள் தொட்டு எழுப்பினான். இரு கைகளையும் அவள் தோள்களில் வைத்து அவள் முகம் பார்த்தான் .உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த கமலினி பார்க்க சகிக்காது கண்களை இறுக மூடிக் கொண்டாள் .
ச்சென்றோ…ப்ச்சென்றோ கேட்க போகும் சத்தத்திற்கு பயந்து காதுகளையும் மூடிக் கொண்டாள் . மூடப்பட்ட காதுகளுக்குள் அடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் பேரிரைச்சல் .எத்தனையோ மணி நேரங்கள் கடந்து விட்டது போல் தோன்ற திடுமென கண்களை திறந்து பார்த்தாள்
.விஸ்வேஸ்வரன் நிகிதாவின் கன்னம் பற்றியபடி அவள் முகம் நோக்கி குனிந்து பார்த்தபடி இருந்தான் .என்ன நடக்கிறது …? கமலினி புரியாமல் அவர்களை பார்த்தபடி இருந்த போதே நிகிதாவை விடுவித்தான் .சட்டென அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டான் .
” சாரி …சாரி …சாரி …” அவன் நிகிதாவிடம் உரைத்த மன்னிப்புகள் இங்கே வரை மிதந்து வந்தன .நிகிதா கைகளை கட்டிக் கொண்டு அவனை தீர்க்கமாக பார்த்தபடி நின்றாள். பிறகு அலட்சிய இதழசைவு ஒன்றுடன் ” பை ” எனக் கையசைத்து விட்டு போய்விட்டாள்.
” ரொம்ப பெர்பெக்டாக பொசிசன் எல்லாம் வரைந்து பார்த்து முன்பே தயாராகத்தான் இருந்தேன் கமலினி .ஆனாலும் எங்கே மிஸ்டேக் வந்த்துன்னு தெரியலை . அவள் முகத்தை அவ்வளவு பக்கத்தில் பார்த்ததும் கிஸ் பண்ணனும்னு தோணவே இல்லை …சீச்சின்னு மனதுக்குள் பட்டது .இதற்கெல்லாம் என ன காரணம்னுதான் தெரியவில்லை “
” உங்க மூஞ்சி …மட்டகரமாக ஏதோ ஒரு படத்தை பார்த்தேன்னு சொன்னீங்களே …அதுதான் பிரச்சனை “
” இல்லை கமலி .ஐடியால்லாம் கரெக்ட்தான் .எனக்குத்தான் கிஸ் பண்ணை தெரியலையோ …? “
அவனது சந்தேகத்திற்கு கமலினிக்கு தலை தலையாக அடித்துக் கொள்ள தோன்றியது .முகம் சிவந்து இதழ் துடித்து கன்னங்கள் சூடேறியது .தொப்பென சேரில் அமர்ந்து கொண்டு தன்னை அவன் கவனிக்கிறானா என ஓரக்கண்ணால் பார்த்தாள் .கன்னங்களின் சூடு குறைய பரபரவென தேய்த்து விட்டுக் கொண டாள்.
விஸ்வேஸ்வரன் இரு விரல்களை அசைத்து காற்றில் ஏதோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தான் .இப்போ என்ன உருப்படாத யோசனைன்னு தெரியலையே .கமலினிக்கு வயிறு கலங்கியது . தத்தி… பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி காட்டினாலே பேப்பர் மேலேயே விழுந்து புரண்டு கசக்கிப் போடுகிற ஆம்பளைங்க இருக்கிற சமுதாயத்தில் இப்படி ஒருத்தன் .
விஸ்வேஸ்வரன் ஸ்டூலை விட்டு எழுந்து எம்.டி சேரில் அமர்ந்தான் .பின் அங்கிருந்து அவளை நோக்கி வரத் தொடங்கினான் .நிதான எட்டுக்கள் எடுத்து வைத்து வந்தான் . ” இதோ பார் கமலி. நான் ஸ்டெப்ஸ் கூட எண்ணி வைத்திருந்தேன் .ஒன்று , இரண்டு …எட்டாவது எட்டில் நிகிதாவை அடைந்து விடலாம் .பிறகு அவள் சேரை இப்படி மெல்ல திருப்பி ….” சொன்னபடி தற்போது கமலினி அமர்ந்திருந்த சேரை திருப்பினான் .
” இப்படி கணக்கு போட்டு வரைந்து வருவதா காதல் விஸ்வா …? ” கமலினி பெரும் சலிப்போடு கேட்டாள் .
” ப்ச் .எல்லாம் சரிதான் கமலி . இதோ இப்படி அவள் தோள் தொட்டு எழுப்பி அவள் முகம் பார்க்கிறேன. ” கமலினியின் தோள் தொட்டு எழுப்பி தனக்கு நேராக நிற்க வைத்து அவள் முகம் பார்த்தான் .
” விஸ்வா …” மெல்லிய சிணுக்கத்தோடு உயர்ந்த கமலினியின் கண்கள் விஸ்வேஸ்வரனின் முகத்தில் பதிந்தன. கண்களில் ஸ்தம்பித்தன .
” இப்படி அவள் கண்களை பார்த்துக் கொண்டே …” பேசிக் கொண்டிருந்த விஸ்வேஸ்வரனின் பேச்சும் அறுபட்டு நின்றது . உயர் அழுத்த மின்சாரத்தை மிதித்த அதிர்வு அவனுள் .
” முத்தம் கொடுக்க வேண்டுமென நினைத்து நெருங்கி …” இமையசைக்கும் நேரம்தான் .விஸ்வேஸ்வரனின் உதடுகள் கமலினியின் இதழ்களில் படிந்து விட்டன.
சற்று முன்பு அவனுள் அதிர்ந்து கொண்டிருந்த உயர் மின் அலைகள் இப்போது அவளுள்ளும் .உதிரமெங்கும் உயிர்சுவை .உலகமெங்கும் அணு உலை. தீ நாக்கு கொண்ட அசுரன் ஒருவன் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தாள் அவள் .எரிமலைக் குழம்புகள் ஏவிய கங்குகள் நா பொசுக்கி அவளுடல் எரிக்க , வேண்டாம் …வேண்டாம் …மீண்டு விடு …பலமுறை தனக்கு தானே கட்டளையிட்டுக்கொண்டு இறுதியாக ஏதோ ஓர் கிடைத்த சிறு நொடியில் அவனை தள்ளிவிட்டு தன்னை மீட்டாள் .
அரை அடி தள்ளி விலகிய இருவரும் ஒருவரையொருவர் பிரமிப்பாய் பார்த்து நிற்க , ஆத்திரத்தோடு அழுகையும் கமலினியை தாக்க , வாய் திறக்கவும் அஞ்சி ஒற்றை விரலாட்டி அவனுக்கு பத்திரம் காட்டியவள் ,கலங்கிய தன் கண்களை மறைக்க முகம் திருப்பிக் கொண்டு அறை வாசலுக்கு போனாள் .
” கமலி …” அறைக்கதவு திறந்து வெளியே காலெடுத்து வைத்த போது அவன் அழைக்க ” எனக்கு லீவ் வேண்டும் .வீட்டிற்கு போகிறேன் .என் பின்னால் வர வேண்டாம் ” குரலின் அழுகையை வெளிக்காட்டாமல் மறைத்தபடி கடையை விட்டு வெளியேறினாள் .
முகமெல்லாம் வெளிறி கண் சோர்ந்து ரத்தம் உறிஞ்சப்பட்ட செத்த சவம் போல் வந்த மகளை கண்டதும் புவனாவின் மனம் பதறியது .” கமலி என்னம்மா என்ன ஆச்சு ?”
ஓவென தாயை கட்டிக் கொண்டு அழ எண்ணிய கமலினியின் கண்களில் உள் அறையிலிருந்து ஆவலோடு எட்டிப் பார்த்த கனகவல்லி பட , வந்த அழுகையை அடக்கி ” தலைவலி தாங்க முடியலைம்மா .லீவ் சொல்லி விட்டு வந்துட டேன் ” பொய் சொல்லி விட்டு அது தந்த குற்ற உணர்வால் முகத்தை தரைக்கு குனிந்து கொண்டு அவர்கள் அறைக்குள் போய் கட்டிலில் விழுந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள் .
மூடிய கண்களுக்குள் மயக்கு புன்னகையுடன் அவளை நெருங்கி இதழ் கவ்வினான் விஸ்வேஸ்வரன் .சட்டென உடல் தூக்கிப் போட விழி திறந்தவள் முன் மாத்திரையும் , காபியுமாக வந்து நின்றாள் புவனா .
” இந்த மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து தூங்கும்மா “
சுயமாய் தானாக சிந்திக்கும் ஆற்றலை தான் இழந்து விட்டாற் போல் உணர்ந்த கமலினி அன்னைக்கு கீழ்படிந்தாள் .மாத்திரையை விழுங்கி நாக்கு சுடச்சுட காபியையும் குடித்து முடித்தாள் .
” நான் தூங்க போகிறேன் அம்மா .என்னை கூப்பிட வேண்டாம் ” வேண்டிக் கொண்டாள் . மின்சாரம் தாக்கிய உடல் ஓய்வு தேடி கெஞ்ச படுக்கையில் சுருண்டு தூங்கிப் போனாள் .
What’s your Reaction?
+1
29
+1
14
+1
1
+1
2
+1
+1
+1
2
Viswa bulb erintathaa