3
ஐஸ் அருவி ஒன்று தன்மீது ஆக்ரோசமாய் விழுந்து அதன் காரணமாக தான் உறைந்து போய்விட்டாற் போல் உணர்ந்தாள் நிலானி .முயன்றும் அவளால் கை கால்களை ஏன் கண் இமைகளை கூட அசைக்க முடியவில்லை நான் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டேன்தானே ? அல்லது கனவு காண்கின்றேனா ? குழப்பம் போக்க தன்னைத் தானே கிள்ள நினைத்தாள் .ஆனால் அவளது சுண்டு விரல் நகம் கூட அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அவள் முன் இரண்டு கைகளையும் சேர்த்து பட் பட் என தட்டினான் அவன் .சற்று முன்பு அவனை செய்ததுதான் .” உயிரோடுதான் இருக்கிறாயா ? செத்து கித்து போய்விட்டாயா ? அதிர்ச்சியில் அப்படி பட்டென்று போய்விடாதே. எனக்கு உன்னிடம் நிறைய வேலைகள் இருக்கிறது ” குரூரம் தாண்டவம் ஆடியது அவன் குரலில்.
” நா…நான்…நீ…நீ…” நிலானியின் பற்கள் தந்தி அடித்தன.
” நான் ..நான்தான் ..நீ ..நீதான் .அதே திமிர் பிடித்த அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவள் .உனது திமிரை இறக்கத்தான் இங்கே வந்திருக்கிறேன் “உயர்ந்த குரலில் அறிவித்தான் .
” எதற்கு வந்தாய் ? என்ன செய்யப் போகிறாய் ? ” உதடுகளை அசைப்பதற்குள் நிலானியின் தலை சுழன்றது.
” உனக்காகத்தான் வந்தேன். அன்று தியேட்டரில் செய்ய முடியாததை இப்போது செய்யப்போகிறேன் ” அவன் கண்கள் பாதரச மினுங்கலாய் மின்னியது.
” தியேட்டரில் செய்யாததா ? எ…என்… என்ன செய்யப் போகிறாய் ? ” நிலானியின் மனது நடப்பதை நம்பாதே என்றது.
” அன்று தியேட்டரில் இப்படி உன் அருகே வரவில்லை. கன்னங்களை கிள்ளவில்லை .உதடுகளை வருட வில்லை .கழுத்தை தொடவில்லை…பிறகு …” சொன்னபடியே சொன்னதையே செய்தும் கொண்டிருந்தவன் , அவனது அடுத்த அசைவை எதிர்கொள்ளும் முன் இரு கைகளால் தன் தோள்களை மூடிக்கொண்டு தரையில் குறுகி அமர்ந்து ” நோ ” என்ற கத்தலுடன் நிலானி மெலிதாய் விசும்புவதை சலனமின்றி இடுப்பில் கைவைத்தபடி பார்த்து நின்றான்.
” வேண்டாம் .என்னை விட்டுவிடு ”
” பெண்களை அப்படி விடும் பழக்கம் எனக்கு கிடையாதும்மா. நான் ஒரு உமனைசர் .பயங்கரமானவன் … ” உதட்டுக்கு மேலே அடர்ந்து கற்றையாய் இருந்த மீசையை முறுக்கிக் கொண்டான் அவன்
திடுமென ஒரு வேகத்துடன் எழுந்த நிலானி கூபேயின் கதவை நோக்கி பாய்ந்தாள். இதனை முன்பே எதிர்பார்த்தவன் போல் அவன் அவளுக்கு முன்பே பாய்ந்து கூபேயின் கதவை அடைத்து ஸ்கிரீனையும் இழுத்துவிட்டு நிமிர்ந்து நின்றான் .வேகமாக ஓடிப்போன நிலானி மறித்து நின்ற அவன் மீது மோதிதான் நின்றாள் .
தான் வெளியேற முடியாததைக்காட்டிலும் அவன் மீது மோதி நின்றது அவளுக்கு அதிகமான குன்றலைக் கொடுத்தது .சட்டென பின்வாங்கி நின்று அவன் உடலுடன் மோதிய தன் உடலை தட்டி விட்டுக் கொண்டாள் வலுக்கட்டாயமாக ஒட்டிய சகதியை போல…
” அரிக்கிறதோ …? ” எகத்தாளமாக கேட்டான் .
” இல்லை .அருவெறுப்பாக இருக்கிறது.” அவன் முகம் இறுகியது .
” பட்டாலே அருவெறுப்பா…? தொட்டால் …கட்டிக்கொண்டால் …” பேசியபடி அவன் அவளை நெருங்கி வர , நிலானி மிரண்ட விழிகளுடன் பின்னடைந்தாள் .இனி பொறுக்க வேண்டாம் , கத்தி விட வேண்டியதுதான்….” ஆ” வென திறந்த அவளது வாய் சத்தம் வெளி வரும் முன் அவனது அகன்ற கரத்தால் அடைக்கப்பட்ட்டது .
மிக அழுத்தி தன் சுதந்திரம் பறித்த அவனது உள்ளங்கையை நறுக்கெனக் கடித்தன அவளது பற்கள். சட்டென கையை உதறியவன் பட் பட்டென அவள் வாயினில் அடித்தான். விரல்களால் உதடுகளை கொத்தாக பற்றி நசுக்கினான்.
” ஏய் இங்கே கவனி. இப்போது நீ கத்துவதாலோ வெளியே ஓடுவதாலோ எந்த பயனும் கிடையாது. நீ என்னோடு தான் வரும் சில நாட்களை கழிக்க போகிறாய். எனது இஷ்டப்படி நடந்து கொள்ளப் போகிறாய். இது உனக்கு விதிக்கப்பட்டது. இதனை உன்னால் மாற்ற முடியாது. அதனால் வீணாக அடம் பிடிப்பதை விட்டு விட்டு எனக்கு ஒத்துழைத்தால் இருவருக்குமே நல்லது ” அவனது பேச்சு அந்த ஏசி அறைக்குள்ளும் நிலானியின் தேகத்தை தொப்பல் தொப்பலாக நனைய வைத்தது .
” நீ நான் யார் என்று தெரியாமல் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய் . ஜாக்கிரதை .உடனடியாக என்னை விடுவித்து விடு .இல்லை என்றால் போலீஸ்காரர்கள் என்கவுண்டர் நடத்தி உன்னை சுட்டு தூக்குவார்கள் ” எச்சரித்தாள்.
” ஓ அவ்வளவு பெரிய ஆளா நீ ? எங்கே சொல்லு ? யார் நீ ? ” கால் மேல் கால் போட்டுக் கொண்டு கதை கேட்பான் போல் வசதியாக உட்கார்ந்து கொண்டான்.
அவனது நக்கலைக் கவனிக்காமல் தனது பெருமிதம் பேசினாள் ” என் அப்பா திருக்குமரன் இந்த தமிழ்நாட்டின் முக்கிய இரண்டு கட்சிகளில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் .இப்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும் இதோ வரப்போகிற எலக்க்ஷனில் கண்டிப்பாக அவர்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார். சென்ட்ரலிலும் அவருக்கு செல்வாக்கு இருப்பதால் மத்திய அமைச்சராகவும் இருக்கிறார். அவரது மகளை தான் நீ இப்படி மிரட்டிக் கொண்டிருக்கிறாய் .ஜாக்கிரதை இத்தோடு ஒதுங்கி உயிர் பிழைத்துப் போ ” கர்வமாக பேசி முடித்தாள்.
வெகு கவனமாக அவளது பேச்சும் முழுவதையும் இடையிடாமல் கேட்டவன் ஒற்றை விரலால் நெற்றியில் தட்டிக்கொண்டான். ” உன் தந்தையின் பெயர் என்ன சொன்னாய் ? ”
” திருக்குமரன். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ”
” இந்தப் பெயரில்தான் ஒருவர் போன வாரம் எங்கள் வீடு தேடி வந்து தேர்தல் செலவிற்கு பணம் வேண்டும் என்று கேட்டு என் அப்பாவிடம் ஒரு சூட்கேசை வாங்கிக்கொண்டு போனதாக ஞாபகம் ”
” இல்லை. பொய் நீ சொல்வதை நம்ப மாட்டேன் .என் அப்பா உன்னிடமெல்லாம் வந்து நிற்கிற ஆள் இல்லை. அவர் தனி செல்வாக்கானவர் ” கிறீச்சிட்டாள்
அலட்சியமாக தோள்களைக் குலுக்கிக் கொண்டான் அவன். ” சொல்வதை நான் சொல்லிவிட்டேன். தெளிவாக வேண்டியது நீ ”
” நீ ..நீ ரொம்ப உத்தமனோ ? உன் பேச்சை நான் கேட்க வேண்டுமோ ? ” அவன் தோள்களில் குத்தினாள்
அவன் முகம் இறுக்கமாக மாறியது .” நிச்சயமாக இன்னும் சிறிது நாட்களுக்கு நீ என் பேச்சைக் கேட்கத் தான் போகிறாய். என் ஆசைப் படிதான் நடக்க போகிறாய் ” பேச்சின் முடிவில் கண்களைச் சிமிட்டினான்.
நிலானியின் வயிற்றில் புளியைக் கரைத்தது .இவன் ஏன் என்னவோ போல் பேசுகிறான் ? இன்னும் எத்தனை நேரத்திற்கு… இதோ இன்னும் சற்று நேரத்தில் கேரளா வந்துவிடும் .அங்கே இறங்கியதும் அவளுக்கான பாதுகாப்பு வந்துவிடும் தைரியம் சொல்லி தன்னை நிமிர்த்திக் கொண்டாள்.
“ட்ரெயின் நிற்கும் வரை தான் உன் கொட்டம் எல்லாம் .அதன் பிறகு எல்லாம் அடங்கி விடும் “
“ஓ அப்படியா ? ” கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான் அவன் . “உனது கறுப்புப் பூனைகள் இங்கேயும் வந்து விடுவார்களோ ? ” இப்போது அவனது கை அன்று அவர்களிடம் அறை வாங்கிய கன்னத்தை தடவியது.
” நீ அன்று தப்பு செய்தாய் .அதற்கு நான் தண்டனை கொடுத்தேன். அதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது என்னை பழி வாங்க நினைத்தால் அது நடக்காது .எனக்கு இன்னும் சற்று நேரத்தில் உதவிக்கு ஆள் வந்து விடுவார்கள் .” பேசியபடியே அவள் அவன் அருகாமையை விட்டு சட்டென ஒதுங்கி வந்து ஓரமாக வைத்திருந்த தனது செல்போனை எடுத்தாள்.
அவன் உடனே ஓடி வந்து அதனை தடுப்பான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ கைகளைத் தட்டிக்கொண்டு அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். ” கோ அஹெட் ” என்றான்.
நிலானி வேகமாக தனது அப்பாவின் நம்பரை அழுத்தினாள் .கிட்டத்தட்ட முழு ரிங்டோன் ஒழித்து அவளை பட படக்க வைத்து கடைசி ரிங்கில் போன் எடுக்கப்பட்டு திருக்குமரன் ” ஹலோ ” சொன்னார்.
” அப்பா இங்கே யாரோ ஒருவன் என்னிடம் என்னென்னவோ சொல்கிறான்…. அப்பா அவன் என்னை இங்கே பிடித்து வைத்துக்கொண்டு ….எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது அப்பா …எனக்கு செக்யூரிட்டி க்கு ஆள் அனுப்புங்கள் ” பேசியபடியே விம்மினாள்.
” நிலா குட்டி ஏன்டா பயப்படுகிறாய் ? நீ தைரியமான பெண் . எனக்குத் தெரியும் நீ எந்த பிரச்சினையானாலும் அதை சமாளித்து வெளியே வருவாய். உன் பலம் உனக்கே தெரியாது .இதெல்லாம் ஒரு பிரச்சனையா ? படித்த பக்குவமான தெளிவான பெண் நீ . எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவள்.இதனை அழகாக சமாளிப்பாயென்று எனக்குத் தெரியும் . தைரியமாக இரம்மா. எனக்கு எலெக்சன் வேலைகள் நிறைய இருக்கிறது. உன்னுடன் பேசுவதற்கு நேரம் கிடையாது. புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் .சீக்கிரமே திரும்பி வா ” அவ்வளவுதான் போன் கட் ஆகிவிட்டது.
நிலானிக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை காதில் இருந்த போனை விலக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். கரு விழிகள் மட்டும் சற்று நகர்ந்து அவனை பார்க்க கிண்டலாய் புருவங்களை உச்சிக்கு உயர்த்தினான் அவன்.
” ஸ்டில் ஆர் யு கோயிங் ட்டூ மேக் எனி அதர் கால்ஸ் ? ” அவன் கேட்ட தொனிக்கு கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் அற்றுப் போக , ஆனாலும் முயலாமல் விட மனதின்றி அன்னையின் நம்பரை அழுத்தினாள். முழுதாக இரண்டு முறை ரிங் போய் கட்டானது அது .அடுத்து அப்பாவின் பிஏ ராஜேஷின் நம்பருக்கு .அதுவும் எடுக்கப்படவில்லை.
” சரி வா நாம் இறங்கலாம் ” அவன் தனது பேக்கோடு அவளுடைய டிராலியையும் இழுத்துக் கொண்டான் .நிலானி அப்போதுதான் ரயில் நின்றிருப்பதை உணர்ந்தாள் .
இதோ கேரளா வந்துவிட்டது .இங்கே தங்கிக் கொள்ளவென திருக்குமரன் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த கெஸ்ட்ஹவுஸ் கேரள டிஐஜியுனுடையது
. ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி அவளை அழைத்துக் கொள்வதாக ஏற்பாடு .நிலானியின் உற்சாகம் மீண்டுவிட்டது .
அப்பா இவனிடம் ஏதோ விசயத்தில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும் .இவன்தான் ரொம்பவே கெட்டவனாக இருக்கிறானே …மகளை காப்பாற்ற இது போன்ற ஏற்பாடுகளை செய்துவிட்டு மகள் தானே தன்னை பாதுகாத்துக் கொள்வாளென அங்கே தவித்தபடி இருக்கிறார் …பாவம் .அப்பாவிடம் உருகியது அவள் மனம் .
இதோ போலீசார் புடை சூழ மறைமுகமாக எத்தனை பாதுகாப்புகள் அவளுக்கு . ரயிலிலிருந்து ப்ளாட்பாரத்தில் குதித்த அவளது உற்சாக துள்ளலுக்கு கண்களில் அபரிமித ஆச்சரியம் காட்டினான் அவன் .
” குட் …அதற்குள் தேறிக் கொண்டாயா ? இப்படியே என்னுடன் ஒத்துழைத்தாயென்றால் நமது பொழுதுகள் மிகவும் இன்பமாகவே கழியும் ”
” என்ன உளறுகிறாய் ? ”
” நாம் போகப் போகும் இடம் தேனிலவு தம்பதிகளுக்கு ஏற்ற இடம் . நாம் தடையின்றி உல்லாசமாக இருக்க தகுந்த இடம் ” இப்போது கண்களை சிமிட்டி அத்தோடு உதடுகளையும் சேர்த்து குவித்தான் .நிலானியின் உடலில் அருவருப்பு பூரானாய் ஊர்ந்தது.
” இன்னமும் ஐந்தே நிமிடம். உன்னைத் தூக்கிக் கொண்டு போய் கேரளா போலீஸ் ஸ்டேஷனில் தள்ளுகிறேன் பார் ” விரல்களை சொடுக்கினாள்.
” கேரளாவா ? அதற்கு இங்கிருந்து முந்நூறு கிலோமீட்டருக்கு மேல் போக வேண்டுமே ? ” தாடையை வருடியபடி அவன் யோசிக்க நிலானி திடுக்கிட்டாள் .
இது எந்த இடம்.. தட தடத்த நெஞ்சுடன் சுற்றும் முற்றும் பார்க்கலானாள்.
What’s your Reaction?
+1
5
+1
5
+1
+1
5
+1
+1
+1