தற்போது மாம்பழ சீசன் என்பதால், நிச்சயம் அனைவரது வீட்டிலும் மாம்பழம் இருக்கும். இந்த மாம்பழத்தை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, சற்று வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அப்படியானால் இன்று மாலை மாம்பழம் மற்றும் தேங்காயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் போளி செய்யுங்கள். இந்த மாம்பழ போளி மாலை வேளையில் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு மாம்பழ போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – 5-6
* ஏலக்காய் – 2
* தேங்காய் – 1/2 மூடி
* நன்கு கனிந்த மாம்பழம் – 1 (தோல் நீக்கியது)
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
மாவிற்கு…
* கோதுமை மாவு – 1 1/2 கப்
* உப்பு – சிறிது
* தண்ணீர் – தேவையான அளவு
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம் :
* முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, அதையும் நன்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போக நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை பொடியை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, சிறிது உப்பு சேர்த்து கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி பதத்தை விட சற்று தளர்வாக பிசைந்து, எண்ணெய் தடவி ஒரு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு தயாரித்து வைத்துள்ள மாம்பழ கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவையும் மாம்பழ உருண்டைகளுக்கு இணையாக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாழை இலை அல்லது பால் கவரை எடுத்து, அதில் நெய் தடவி, பின் ஒரு கோதுமை மாவு உருண்டையை எடுத்து நடுவில் வைத்து சற்று தட்டையாக தட்டி, அதன் நடுவே மாம்பழ உருண்டையை வைத்து, முனைப்பகுதிகளை அப்படியே மூடி விட வேண்டும்.
* பின் அதை அப்படியே தட்டையாக போளி போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள போளியை சேர்த்து, எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மாம்பழ போளி தயார்.
வீட்டுக் குறிப்பு:
-
இட்லிக்கு அடிக்கடி மாவு அரைப்பவர்கள் உளுந்து பயன்படுத்துவதற்கு பதிலாக சோயா மொச்சையை ஊற வைத்து மாவு அரைத்து பாருங்கள், சத்தான இட்லி, தோசை கிடைக்கும்.
-
கூந்தல் பராமரிப்புக்கு இரண்டு விஷயத்தை செய்யலாம்! ஒன்று முட்டையின் வெள்ளைக்கருவை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தலை முடி முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து சாதாரணமாக ஷாம்பு போட்டு குளித்தால் கண்ணாடி போல உங்கள் கூந்தல் ஜொலிக்கும். இரண்டாவது விஷயம் செம்பருத்தி இலைகளை மைய அரைத்து தலை முழுவதும் தடவி 10 நிமிடம் ஊறவிட்டு அலசினால் கருகருவென கேசம் மிருதுவாக அலைபாயும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1