எல். ஆர். ஈஸ்வரியின் குரலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர் அறிமுகமான காலத்தில் திணறியுள்ளார். இதனால் ஒரு இசையமைப்பாளர் திட்டித் தீர்த்த சம்பவம் எஸ்பிபி-க்கு வேதனையை கொடுத்துள்ளது.
பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் அறிந்தும் அறியாமலும் என்ற நிகழ்ச்சியின் மூலம், தமிழ் சினிமாவின் பல சுவாரசியமான தகவல்களை சித்ரா லட்சுமணன் கூறுகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது-
எஸ். பி. பாலசுப்பிரமணியன் பல போராட்டங்களை சந்தித்துதான் சினிமா துறையில் சாதித்தார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். கோல்டன் ஸ்டுடியோவில் நடந்த பாடல் பதிவு ஒன்றில், எல்.ஆர் ஈஸ்வரியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிக்கொண்டிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்தியம் என்பவர் தான் இசையமைப்பாளர்.
அன்றைக்கு எல்.ஆர். ஈஸ்வரிக்கு ஈடு கொடுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தால் பாட முடியவில்லை. ஏனென்றால் அது அவருடைய ஆரம்ப காலம். எஸ்.பி.பாலசுப்ரமணியன் சரியாக பாடாததால் இசையமைப்பாளர் சத்யம் கண்டபடி அவரை திட்டி விட்டார். அதை தாங்கிக் கொள்ள முடியாத எஸ்.பி.பி வெளியே வந்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கண்கலங்க ஆரம்பித்து விட்டார்.
இந்த காட்சியை படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் பார்த்து விட்டனர். அவர்கள் இசையமைப்பாளர் சத்தியத்திடம், ‘பையன் புது பையன். அவனை போய் இப்படி சங்கடப்படுத்தி விட்டாயே. அவரிடம் கொஞ்சம் மென்மையாக நடந்து கொள்’ என்று கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த சத்தியம் ‘நீங்கள் எல்லாம் பாடத் தெரியாத நபர்களை அழைத்து வந்து பாடச் சொல்வீர்கள். அவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஒரு வழியாக எஸ்.பி.பி. தனது பாடலை பாடி முடித்தார். இப்படி இருந்த எஸ்.பி.பி தான் பின்னாளில் இசையமைப்பாளர் சத்தியத்தால், ‘எஸ்பிபி என் மகன். அவனை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்’ என்று கூறும் அளவுக்கு சாதித்து காட்டினார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1