கோவைக்காய் கொடிவகையை சார்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இதை தொண்டைக்கொடி எனவும் அழைக்கின்றனர். தோட்டங்கள், வேலிகள், காடுகள் என அனைத்து இடங்களிலும் இந்த கோவை கொடி படர்ந்து காணப்படுகிறது. பல விவசாயிகளும் கோவை கொடி வளர்ப்பு செய்து நல்ல லாபம் பெறுகின்றனர். இந்த கோவை கொடி பழங்களின் சுவை இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய மூன்றும் கலந்த கலவையாக இருக்கும்.
‘கோவை’ எனும் மற்றோரு பெயரும் இந்த கோவைக்கு இருக்கிறது. இலக்கியங்களில் அதிகளவில் கொவ்வை எனும் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ‘கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்…’ என்கிற வரிகளே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கொவ்வை என்பதே மருவி, கோவை எனும் பெயர் பெற்றது. கோவை என்றால் ‘தொகுப்பு’ என்று அர்த்தம்.
கோவை பழத்தின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு அதை பலவகையாகப் பிரிக்கின்றனர். மேலும் இதன் இலை, காய், தண்டு என அனைத்தும் மருத்துவப் பயன்கள் உடையவை. கோவை கொடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி, வீட்டுத் தோட்டத்தில் கோவைக்காய் கொடி வளர்ப்பது எப்படி மற்றும் கோவைக்காய் சாகுபடி மற்றும் கோவை கொடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
வளர்ச்சிக்கேற்ற மண்கலவை
நல்ல வடிகால் வசதியை உடைய செம்மண், மணல்சாரி போன்ற மண்வகைகள் கோவை கொடி வளர்ப்பு செய்ய ஏற்றவை. செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் அல்லது செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு மண்கலவை தயார் செய்தால் கோவை கொடி வளர்ப்பு சிறக்கும்.
விதை விதைத்தல்
சித்திரை மாதத்தைத் தவிர்த்து மீதி அனைத்து மாதங்களிலும் கோவை கொடி விதை விதைப்பு செய்யலாம். இருப்பினும், ஆடிப்பட்டத்தில் விதை விதைத்தால் கோவை செடிகளின் வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும். ஒரு முறை கோவை கொடி வளர்ப்பு செய்தோமேயானால் 2 ஆண்டுகள் வரை பலன்களை கொடுக்க வல்லது. சேகரித்து வைத்துள்ள விதைகளை, தயார் நிலையில் உள்ள மண்கலவையில் விதைப்பு செய்து, அதன் மீது பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்
விதை விதைத்த 10 நாட்களுக்கு பிறகு கோவை கொடி முளைப்பு விட்டு வளர தொங்கிருப்பதை காணமுடியும். கொடி பற்றி ஏற ஏதுவாக பந்தல் அமைப்பது அவசியமாகும். 50 நாட்களுக்கு பிறகு வெள்ளை நிற பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். சுமார் 60 நாளில் காய்கள் காய்க்க தொடங்கிவிடும்.
கோவைக்காய் சாகுபடி
காய் காய்க்க தொடங்கிய பிறகு ஒரு வாரத்திலேயே கோவைக்காயை நாம் அறுவடை செய்யலாம். ஒரு நல்ல வளர்ந்த கொடியில் வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம், இதே போல தொடர்ந்து 5 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். 5 மாதங்களுக்கு பிறகு முதிர்ந்த இலைகளை நீக்கி கவாத்து செய்து பராமரித்தால், 1 மாதத்தில் அடுத்த அறுவடையை தொடங்கலாம்.
கோவைப்பழம் வகைகள்
மூவிரல் கோவை, கருங்கோவை, படப்பை, ஐவிரல் கோவை மற்றும் நமக்கோவை உள்ளிட்ட பல வகைகள் கோவைக்காயில் உள்ளது.
கோவை கொடியின் பயன்கள்
-
இரத்ததில் இருக்கின்ற சர்க்கரையின் அளவுதனை கோவைக்காய் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவிபுரிகிறது, நீரிழிவு நோயால் அவதிப்படுகிறவர்கள் இந்த கோவைப்பழத்தை தினசரி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
-
கோடை காலம் வந்த உடனே முதலில் ஏற்படும் பாதிப்பு வியர்க்குரு. கோவை கொடியின் இலையை எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தோமேயானால் வியர்குரு வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
-
வயிற்றில் இருக்கும் கிருமிகளை நீக்கும் ஆற்றல் இந்த கோவை பழத்திற்கு உண்டு. கோவை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்குள்ளே இருக்கும் தீங்கை விளைவிக்கும் கிருமிகளை நீக்குகிறது.
-
கோவை இலைச்சாறுடன் கருஞ்சீரக பொடி சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து படை மீது பூசி, ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும், இவ்வாறாக தொடர்ந்து செய்து வர படை பிரச்சனை தீரும்.
-
வாய் புண்ணால் சிரமம் படுபவர்கள், கோவைக்காயை பச்சையாக வாயில் போட்டு மென்று துப்பிவிட்டாலே போதுமானது. இப்படி செய்யும் பொழுது வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1