6
“இத்தனை வருடங்களாக உனது பணத்திலும் நகையிலுமா தாரணி வளர்ந்து நிற்கிறாள்?” கனகலிங்கம் மித மிஞ்சிய கோபத்துடன் கேட்க, தசரதன் கைகளைக் கட்டிக் கொண்டு தலை குனிந்து கொண்டார்.
“இல்லைதான் என்னை விட
நீங்கள்தான் அவள் விஷயத்தில் பொறுப்பாக இருந்திருக்கிறீர்கள்”
“பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டய்யா இப்படி வந்து நிற்கிறாய்?”
தன் பொறுப்பை தட்டிக் கழித்து போன தந்தைதான். ஆனாலும் இப்படி அவர் தலை குனிந்து நிற்பதை காண தாரணிக்கு சகிக்கவில்லை. காலேஜ் பேக்கை எடுத்துக்கொண்டு “பஸ்ஸிற்கு நேரமாயிற்று. நான் வருகிறேன் பெரியப்பா”தசரதன் பக்கம் திரும்பாமலேயே கிளம்பி விட்டாள்.
“ஒரு வகையில் பார்த்தால் நீ லக்கி” திவ்யா சொல்ல விழித்தாள்.பெற்ற தகப்போனோடு வாழும் இயல் வாழ்வு கூட கிடைக்கவில்லை. எந்த அதிர்ஷ்டத்தை பெற்று விட்டேன்?
” பெரிய வகையில் எதிர்பார்ப்பு எதுவும் வைத்துக் கொள்ளவில்லைதானே? அதனால் அப்பாவும் அம்மாவும் எதிர்பார்ப்பது போல் எதற்கும் தலையாட்ட உன்னால் முடிகிறது.கூடவே உன் அப்பாவிற்கும் தலையாட்டுகிறாய். ஆனால் என்னால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. எப்படி இதிலிருந்து மீண்டு வரப் போகிறேன் என்று தெரியவில்லை” பேசியபடியே திவ்யா அன்று தாரணி அருகே பஸ்ஸில் அமர்ந்து கொண்டாள்.
அவளது ஸ்டாப்பில் ஏறிய புவனா அருகருகே அமர்ந்திருந்தவர்களை ஆச்சரியமாய் பார்த்துவிட்டு தள்ளிப் போய் அமர்ந்து கொண்டாள். பஸ் கல்லூரியை நெருங்கும்போது தானாகவே பெண்களின் கவனம் அந்த ஹோட்டல் மேல் விழுந்தது.
மற்ற பெண்கள் சுவாரசியமாக நோட்டமிட ,புவனா இறுக்கத்துடன் பார்க்க, திவ்யாவும் தாரணியும் பார்வையிலும் அவனை தவிர்த்தனர்.
அவனோ இது எதைப் பற்றியும் அறியாமல் காரியமே கண்ணாக டீ ஆற்றிக் கொண்டிருந்தான்.
“இந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வரும் தெரியுமா?” திவ்யா கேட்க தாரணி விழித்தாள். “தெரியவில்லையே!”
“அன்றாட செலவுகள் போக ஒரு நாளைக்கு பத்தாயிரத்திற்கு மேலே கையில் கொண்டு போகிறானாம். அப்பா சொன்னார்.” திவ்யாவே பதிலும் சொன்னாள்.
உனக்கே தெரிந்துவிட்ட பதிலுக்கு என்னிடம் ஏன் கேள்வி கேட்டாய்? தலையாட்டி வைத்தாள் தாரணி.
“இது நல்ல வருமானம் தானே திவ்யா?”
“ஆமாம்”
” ஆனாலும் அவனைப் பார், கரிச்சட்டி போல்…! இது உனக்கு உறுத்தவில்லையா தாரணி?”
“தோற்றத்தை பார்த்து யாரையும் கீழாக நினைக்க கூடாது திவ்யா. அவருடைய குணத்தைப் பற்றி பெரியப்பா விசாரித்திருப்பார்தானே?”
“ஆமாம் ரொம்ப நல்லவனாம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாதாம். அப்பா போன பிறகு குடும்பத்தை தாங்கி நிமிர்த்தி அக்காவிற்கு திருமணம் கூட இவன்தான் செய்து வைத்திருக்கிறான். இப்போது அம்மாவும் இவனும் மட்டும்தான்”
மிகவும் நல்ல வரன் என்றே தாரணிக்கும் தோன்றியது. “உன் அப்பா செய்வது எல்லாமே சரியானதாகதான் இருக்கும் திவ்யா. இதனை உணர்ந்து நீ நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும்”
திவ்யா திடுமென சீறினாள்”என் வாழ்க்கை முடிவை நான்தான் எடுப்பேன்.நீ இடையில் வராதே” இறங்கி போய்விட்டாள்
அன்று மாலை புவனா இவளிடம் வந்து “தாரு ப்ளீஸ் ஒரே ஒரு தடவை அவரை போய் பார்த்து பேசி விட்டு வருவோமா?” என்க அதிர்ந்தாள்
“என்ன பேச போகிறாய்?”
” உண்மையிலேயே அவருக்கு திருமணம் நிச்சயமாக இருக்கிறதா… என்று நேரிலேயே கேட்டு விடலாமென்று நினைக்கிறேன்”
“உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறதா? பக்கத்து காலேஜில் படிக்கும் ஒரு பெண் திடீரென்று வந்து உனக்கு திருமணமா என்று கேட்டால் அந்த ஆள் என்ன நினைப்பார்? நமது பிரின்சியிடம் கூட கம்ப்ளைன்ட் பண்ண வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் யோசிக்க மாட்டாயா?”
புவனா கலங்கிய கண்களுடன் நகர்ந்து விட்டாள். தாரணி நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள். எனக்குத் தெரிந்து இவள் ஒருத்தி, இன்னும் எத்தனை லூசுங்க இது மாதிரி இந்த காலேஜுக்குள் சுத்துதுகளோ? திவ்யா உனக்குத்தான் அந்த சந்தனப்பொட்டு அருமை தெரியல, இங்கே ஒரு எலெக்சன் மட்டும் வச்சு பாரு,கண்டிப்பா கல்லூரி முதல்வர் அவன்தான் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
அவள் திவ்யா திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாள் என்றுதான் நினைத்திருந்தாள்.ஆனால் மறுநாள் அவள் கண்ட காட்சி…
சனிக்கிழமை எல்லோருக்கும் கல்லூரி விடுமுறை விடப்பட்டிருக்க தாரணி டிபார்ட்மென்ட் பெண்களை மட்டும் லெக்சரர் ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக கல்லூரிக்கு இரண்டு மணி நேரங்கள் மட்டும் வரச் சொல்லியிருந்தார். வெற்றிகரமாக ப்ராஜெக்ட் முடித்த மகிழ்வில் ஆசிரியை தானே அவர்களுக்கு டிபனும் காபியும் வாங்கித் தருவதாக வெளியே அழைத்துப் போனார்.
அங்கே அவரவர்க்கு பிடித்த சிற்றுண்டியை ஆர்டர் செய்துவிட்டு எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டு அமர்ந்திருந்த
போதுதான் தாரணி திவ்யாவை பார்த்தாள்.
தனியாக அல்ல… ஒரு இளைஞனிடம் பேசிக்கொண்டு மற்றொரு உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள் திவ்யா. உச்சந்தலையில் மின்னல் சொடுக்கினாற் போல் ஓர் உணர்வைப் பெற்றவள் மெல்ல நழுவி அவர்கள் டேபிள் அருகாமையில் முகத்தை திருப்பியபடி கடக்க “நிச்சயம் நம் திருமணம் நடந்தே தீரும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
ஆக, திவ்யாவை நம்பியது தவறு. அவள் கடைசியாக பெற்றோருக்கு துரோகம் செய்ய துணிந்தே விட்டாள். தாரணிக்கு மனம் கசந்தது. என்ன பெண் இவள் எப்படி பாடுபட்டு பார்த்து வளர்த்த பெற்றவர்களை பகைத்துக் கொண்டு எவனோ ஒருவன் பின்னால் போக எப்படி மனது வருகிறது? இதனை அப்போதே அவளிடம் கேட்டு விட முடிவெடுத்தவள் சாப்பிட்டு முடித்ததும் எல்லோரையும் அனுப்பிவிட்டு ஹோட்டலின் ஓரமாக திவ்யாவிற்காக காத்திருக்க துவங்கினாள்.
What’s your Reaction?
+1
39
+1
27
+1
2
+1
+1
2
+1
+1
1