மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு கிடைத்த பரவச அனுபவம்… இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் கிடைத்ததா..? இல்லையா..? என்பதனை தொடர்ந்து காண்போம்.
வானில் தோன்றும் தூமகேது, சோழ குல வேந்தர்களில் யாருக்குப் பாதகமாய் இருக்கப்போகிறது என்ற கேள்வியில் தொடங்கி, அது பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் கொல்ல நினைக்கும் பொன்னியின் செல்வனான அருண்மொழி வர்மனாக இருக்கலாம் என்ற யூகத்தோடு முடிந்தது பொன்னியின் செல்வனின் முதல் பாகம்.
முதல் பாகத்தில் இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த அருள்மொழிவர்மனை சிறை பிடித்து வருமாறு பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் ஆலோசனையை கேட்டு உத்தரவிடுகிறார். இலங்கைக்குச் சென்ற சோழ கப்பற்படை வீரர்கள், அங்கு நடைபெற்ற இயற்கை பேரிடரில் அருள்மொழிவர்மன் மற்றும் வந்திய தேவன் இருவரும் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மந்தாகினி எனும் முதிய ஊமை பெண் அருள்மொழிவர்மனை காப்பாற்றி உயிர் பிழைப்பதற்காக புத்தப்பிக்குகளிடம் ஒப்படைக்கிறார். புத்த பிக்குகள் அருள்மொழி வர்மனுக்கு பிரத்யேக சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி அவரை தஞ்சைக்கு அனுப்புகிறார்கள்.
இந்நிலையில் சோழ தேசத்தின் கடற் பகுதியான கோடியக்கரை எனும் பகுதிக்கு இலங்கையிலிருந்து வருகை தரும் பல்லவ மன்னனும், ஆதித்ய கடிகாலனின் நண்பனுமான பார்த்திபேந்திர பல்லவன், அருள்மொழிவர்மன் கடலில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கிறார். இதைத்தொடர்ந்து பழுவூர் அரசி நந்தினியை சந்திக்கும் பல்லவ மன்னன், அவளின் விருப்பத்தை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கிறார். ஆதித்ய கரிகாலனை சந்தித்து கடம்பூர் அரண்மனைக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுக்கிறார. கடம்பூர் அரண்மனைக்கு வருகை தரும் ஆதித்ய கரிகாலன், தன் மனம் கவர்ந்த பெண்ணான நந்தினி மூலம் மரணத்தை தழுவுகிறான். இதன் பிறகு சோழப்பேரரசை ஆட்சி செய்வது அருள் வழிவர்மனா? அல்லது அந்த பட்டத்திற்காக ராஜதந்திரமாக காய் நகர்த்தும் மதுராந்தக சோழனா? என்பதுதான் படத்தின் கதை.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த விறுவிறுப்பு.. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் ஓரளவு இருக்கிறதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும் அருள்மொழிவர்மனை வதம் செய்வதற்காக பாண்டிய மன்னனின் ஆட்கள் செய்யும் தந்திர யுத்தத்தையும் அதனை அருள்மொழிவர்மன்- வந்தியத்தேவன்- ஆழ்வார்கடியான் எதிர்கொள்ளும் அழகும் சிறப்பு.
சீயான் விக்ரமின் நடிப்பு முதலிடம் பெறுகிறது. தான் நேசித்த பெண் கேட்ட விசயத்தை செய்ய இயலாத தவிப்பையும்.. அதற்கான தண்டனையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் எனும் பேசும் இடம் அற்புதம். இதனையடுத்து மந்தாகினி மற்றும் நந்தினி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நந்தினியின் நடிப்பு பிரமாதம். சுந்தர சோழர்- மந்தாகினி இடையேயான உறவு விவரித்திருப்பதும்… சுந்தர சோழரை மந்தாகினி காப்பாற்றுவதும் சுவையான திருப்பங்கள். வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பும்.. கார்த்தி -திரிஷா இடையிலான காதலும் நவரசம்.
ஐஸ்வர்யா ராய் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் மனதை கொள்ளையடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையே வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. நந்தினியாகவும், ஊமைராணியாகவும் முழு படத்தையும் தன்னுடைய நடிப்பில் தாங்கி நிற்கிறார். அதற்காக ஐஸ்வர்யாராய்க்கு தனி பாராட்டுக்கள்.
உச்சகட்ட காட்சியாக பல்லவ மன்னன் ராஸ்ட்ரகூடர்கள் ஆகியோரின் கூட்டணியை எதிர்த்து, சோழ மன்னர்களின் போர்… பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு குறைவான நேரத்தில் மட்டுமே வருவதால், யானை பசிக்கு சோளப் பொரியாகிறது.
குறிப்பாக நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்குமான காட்சிகளின் தொகுப்பு அருமையாக இருந்தது. முக்கியமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது இசையால் மிரட்டிவிட்டார். ஒன்றா, இரண்டா படத்தில் வரும் பல காட்சிகளுக்கு மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவு இயக்குநருக்கு பக்கபலமாக கை கொடுத்திருக்கிறது. தோட்டா தரணியின் கலை இயக்கத்தை எத்தனை முறை பாராட்டினாலும் மிகையாகாது. ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு படத்திற்கு பலம்.
தமிழகத்தின் கடற்கரை நகரமான நாகப்பட்டினத்தில் பத்தாம் நூற்றாண்டில் புத்த விகார் இருந்தது என மணிரத்னம் குறிப்பிடுவது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும். இதுபோல் இன்னும் சில விசயங்கள் இருப்பதால் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகும் என அவதானிக்கலாம். கடல் வணிகத்திலும், கடலை படகு மூலமாக வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கன்.. அரச ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பதாக கூறுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இருப்பினும் பொன்னியின் செல்வன் வரலாற்றை ஒட்டிய புனைவு கதை என்பதால் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
மொத்தத்தில் மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன் 2
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1