6
” அடுத்து அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சி எல்லோருக்கும் கொடு ….” அடுத்த உத்தரவை வேகமாக முன் வந்து தானே சொன்னாள் மாதவி .
” யமுனா நீ கூட இருந்து உதவி பண்ணு ….” மகளையும் உடன் அனுப்பினாள் . சாப்பிடுவதற்கு மட்டுமே அடுப்படி பக்கம் வரும் மகன் மனைவிக்காக அடுப்பு பற்ற வைக்கவும் போய்விடக் கூடாதே என்ற பதட்டம் அவளுக்கு .
பார்த்தசாரதியின் முகம் திருப்தியை காட்ட , சோபாவில் அமர்ந்து கொண்டான் .யமுனா விரோதியை போல் முறைத்தபடி மணிமேகலையுடன் அடுப்படிக்குள் போனாள் .
” நைஸ் கிச்சன் ….” பாராட்டியபடி ப்ரிட்ஜை திறந்து தேடினாள் மணிமேகலை ” பால் எங்கே யமுனா …? “
” எங்க வீட்ல பால் ப்ரிட்ஜ்ல இருக்காது . “
” ஹையோ …ஏன்பா …பிறகெப்படி …? ” கடலாய் விரிந்தன அவள் விழிகள் .
” வீட்ல மாடு வச்சிருக்கிறவங்க பாலை பாக்கெட்ல அடைக்க மாட்டோம் .பால் இதோ இங்கிருக்கு …”
இன்னமும் கறந்த நுரை மாறாமல் பொங்கி நின்ற பால் பாத்திரத்திற்கு மீண்டும் விழி விரித்தாள் மணிமேகலை .
” வாவ் , நான் இப்படி பால் பார்த்ததில்லையே …” பாத்திரத்தை கையில் எடுத்து முகத்தருகே கொண டு போய் மூச்சிழுத்து பச்சை பாலின் வாசனையை ஆழ்ந்து நுகர்ந்தாள் .
” இதெல்லாம் என்ன பண்ண போகுதோ …? ” யமுனா முணுமணுத்தாள் .
அடுப்பை பற்ற வைத்து பாலை பொங்க வைத்து , யமுனாவின் உதவியோடு சீனி போட்டு ஆற்றி அழகாய் டிரேயில் அடுக்கி வந்து எல்லோருக்கும் கொடுத்த மணிமேகலை , தனது தம்ளரை எடுத்துக் கொண்டு கணவன் அருகில் சோபாவில் சுவாதீனமாக அமர்ந்து கொண்டாள் .அந்த உரிமையில் மாதவியின் முகம் கறுத்தது .
” இன்னைக்குத்தான் ப்ரெஷ்ஷான பாலை நான் பார்த்தேன் சாரதி .பார்க்கவே ரொம்ப நல்லாயிருந்த்து . சீனியே தேவையில்லைப்பா …வெறும் பாலே ரொம்ப சுவீட்டாக இருக்குது தெரியுமா ….? ” என்றவளின் குழந்தை தனத்தை பார்த்தசாரதி ரசித்தபடி இருந்தான் .
இவள் இப்போது என்ன சொன்னாள் ….சாரதி என்றா ….அவள் மகனை பெயர் சொல்லி அழைத்தாளா …புருசனை பெயர் சொல்லி அழைப்பார்களா …???மாதவியின் விழிகள் கோபத்தில் சிவந்தன .
” வா உனக்கு வீட்டை சுற்றி காட்டுகிறேன் …” எழுந்த மகனை தடுத்தாள் மாதவி.
” அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்பா .நீ போய் உன் வேலையை பார் …”
பார்த்தசாரதி தயக்கத்துடன் மனைவியை பார்த்தபடி நிற்க , மணிமேகலை கண்களை மூடித்திறந்தாள் .தன் நெஞ்சில் லேசாக கை வைத்து காட்டி தான் பார்த்துக் கொள்வதாக சைகை சொன்னாள் .
பார்த்தசாரதி லேசான தலையசைவுடன் வாசல்புறம் நடக்க ,துள்ளல் நடை ஒன்றுடன் அவனை பின்தொடர்ந்தாள் மணிமேகலை . மாதவிக்கோ , அவள் பிள்ளைகளுக்கோ …இங்கு நடப்பது எதுவுமே பிடித்தமானதாக இல்லை . இத்தனை பேரும் கூடி நிற்கும் ஒரு பொது இடத்தில் இவர்கள் இருவருமாக ஒருவருக்கொருவர் ஜாடை போட்டுக் கொள்வதென்ன …? அவன் வெளியே போவதற்குள் பின்னேயே இவளும் போவதென்ன …?
மாதவியின் பற்கள் நெறிபடும் சத்தம் அமைதியாய் இருந்த அந்த சூழ்நிலையால் அந்த ஹால் முழுவதும் கேட்டது .ஆனால் அந்த நெறிபடும் பற்களின் ஓசைக்கு காரணமானவர்கள்தான் அங்கு இல்லை .
வெளியே இருவருமாக கார் டிக்கியை திறந்தபடி இருந்தனர் .பார்த்தசாரதி கூப்பிட வேகமாக வந்த தோட்ட வேலையாட்கள் இருவர் காரிலிருந்த சாமான்களை வீட்டினுள் கொணர்ந்து வைத்தனர் .தன் கையிலிருந்த புல்லட் சாவியை மணிமேகலை கையில் கொடுத்த பார்த்தசாரதி தானும் ஒரு பெட்டியை கையில் தூக்கிக்கொண்டு உள்ளே எடுத்து வந்தான் .
அவை அனைத்தும் மணிமேகலையின் சாமான்கள. காரின் பின்சீட்டிலும் , டிக்கியிலுமாக நிறைந்திருந்தன . இப்போது வீட்டின் நடு ஹாலில் ஒரு குட்டி மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
” இவை எல்லாவற்றையும் மாடியில் வைக்க ஏற்பாடு செய்யுங்கள் அம்மா .நான் மதியம் சாப்பிட வருகிறேன் .” ஒரு வழியாக பார்த்தசாரதி வெளியேறினான் .
” ஐய்யோ …சாவி ….” தன் கையிலிருந்த அவன் புல்லட்டின் சாவியை அவன் வாசல் தாண்டும் போது உணர்ந்து அவன் பின்னால் ஓடினாள் மணிமேகலை .சும்மா அல்ல …” சாரதி ….சாவி ….” என்ற அழைப்போடு .
அவள் கையிலிருந்து சாவியை வாங்கி புல்லட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்பவன் அவளிடம் ஸ்பெசலாக தலையாட்டி விடைபெற்றான் .
நளின நடையுடன் மீண்டும் வீட்டினுள் நுழைந்த மணிமேகலையை நான்கு பெண்களும் கோப விழிகளுடன் வரவேற்றனர் .
தயக்கமோ , பயமோ சிறிதுமற்ற தனது பளிங்கு விழிகளால் அவர்களை எதிர்கொண்டாள் மணிமேகலை .
” யார் நீ ….? “
” நான் …அவர்தான் சொன்னாரே அத்தை .நான் மணிமேகலை .”
” உன் பெயரை கேட்கவில்லை .உன் குடும்பம் பற்றி சொல்லு ….”
” என் அப்பா சுந்தர். அம்மா மஞ்சரி . இரண்டு பேரும் துபாயில் இருக்கிறார்கள் .நான் பிறந்த்தும் அங்கேதான் .என் அப்பாவின் அண்ணன் …என் பெரியப்பா வரதராஜன் சென்னையில் இருக்கிறார் .நான் சென்னையில் படிக்க ஆசைப்பட்டதால் என்னை அங்கிருந்து இங்கே அனுப்பி வைத்தனர் .நான் காலேஜில் படித்துக்கொண்டிருக்கிறேன் ….”
” இங்கிருந்து எல்லோரும் வெளிநாடு படிக்க போவார்கள் .நீ அங்கிருந்து இங்கே வந்தாயாக்கும் …? “
” நான் பிறந்த்திலிருந்தே துபாயில்தான் இருந்தேன் அத்தை . என்னோட டிகிரியை அங்கேதான் முடித்தேன் . .அப்பாவும் , அம்மாவும் ஒர்க்கிங் பர்சன்ஸ் .எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள் .என்னோட மாஸ்டர் டிகிரியை ஒரு சேன்சுக்காக நம் தாய்நாட்டில் படிக்கலாமென தோன்றியது .பெரியப்பா இங்கே இருந்த்தால் இங்கே வந்துவிட்டேன் ….”
” என்ன படிக்கிறாய் …? “
” சைக்காலஜி …”
” இந்தக் கல்யாணம் உங்க அம்மா , அப்பாவிற்கு தெரியாதா …? “
” இனிமேல்தான் சொல்லவேண்டும் ….”
” பெரியவர்கள் யாரும் இல்லாமல் இப்படி திருமணம் முடித்திருக்கிறீர்களே …இது சரியா …? “
மணிமேகலைக்கு இப்போது சரியாக அலுப்பு வந்து சேர்ந்திருந்த்து .
” நைட் புல்லா கார் ஜர்னி அத்தை .ஒரே அலுப்பு .நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் .இந்த சாமான்களையெல்லாம் மாடிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துவிடுங்கள. ….” கையை முறுக்கி தன் சோம்பலை தெரிவித்தபடி மாடியேறினாள் .
அப்போது மட்டுமல்ல , அந்த நாள் முழுவதும் , மாதவிக்கோ மற்ற யாருக்குமோ எந்த பயமுமில்லாமல் தனது உரிமையை ஆழ்ந்து அந்த வீட்டில் நிலை நிறுத்தியபடி வளைய வந்தாள் மணிமேகலை .
அதே போன்றதோர் அதிகாரம் கலந்த தெளிவோடும் , செவ்விதழ் சிரிப்போடும் வெள்ளி தம்ளரில் பாலுடன் இரவில் மாடியேறியவளை எதிர்கவோ , தடுக்கவோ அந்த வீட்டில் யாருக்கும் தைரியம் இல்லை .