5
” முதலில் அடுப்பில் பால் வைத்து பொங்க விடவா அத்தை …? ” கேட்ட அவளது பற்கள் வெண் முத்துக்களாய் பிரகாசித்தன .
பிரமிப்பு போய் …அதிர்ச்சி போய் …இப்போது மாதவிக்குள் கோபம் வந்துவிட்டிருந்த்து .அந்த கோபத்தை அவள் மகனின் மீது காட்டமுடியாது .அது அவளுக்கு பழக்கமில்லாத்து .எனவே …கண்களை உருட்டி வந்தவளை முறைத்தாள் .
” ஏன் அத்தை முறைக்கிறீங்க …? ” சிணுங்கி வந்த குரலில் குயிலின் ஜாடை லேசாக தெரிந்தது .
” முதலில் பூஜையறையில் விளக்கேற்றனும் இல்லையா அத்தை ….? ” கண்டுபிடிப்பொன்றின் குதூகல குழந்தை பாவம் குரலில் .
” காவேரி பூஜை ரூம் எங்கே இருக்கு …? ” அண்ணன் மனைவியின் லேசான அதிகாரத்தை சுமந்து இப்போது உதிர்ந்த்து குரல் .
படக்கென வந்துவிட்ட அந்த அதிகாரத்தில் லேசாக வாய் திறந்த காவேரி மௌனமாக விரலை மட்டும் நீட்டி காட்டினாள் .
” யமுனா …எனக்கு கொஞ்சம் பூ வேணுமே .பூஜைக்கு .நம்ம தோட்டத்தில் இருந்து பறிச்சுட்டு வாயேன் .வரும்போது செம்பருத்தி செடி பார்த்தேனே…அதையே பறிச்சுட்டு வாயேன் ….” பட்டாம்பூச்சி இறக்கையாய் மூடி …திறந்த அந்த விழிகளை பார்த்தபடி நின்ற யமுனா இந்த அதிகார வேண்டுதலில் கொஞ்சம் கோபம் கொண்டாள் .
அண்ணனின் அதிகாரத்தையே பொறுக்க முடியாதவள் யமுனா .இந்த புதிதாய் வந்தவளை பொறுப்பாளா ….?
” ஏய் …என்ன …உன் பாட்டுக்கு பேசிட்டு போற ….? முதலில் யார் நீ …? அதை சொல்லு ….? ” கேள்வி கேட்கும் தைரியம் அந்த வீட்டில் முதலில் யமுனாவிற்குத்தான் வந்த்து .
” என் மனைவி யமுனா .உன் அண்ணி ….” அழுத்தமான பதில் வாசல்புறமிருந்து வந்த்து .
ஆரத்திக்கு ஏற்பாடு பண்ணும்படி பார்த்தசாரதி அம்மாவிடம் சொல்ல , அவள் மறுப்பை காட்டியபடி நின்றாள் .
” என்னம்மா ….? ” பார்த்தசாரதியின் புருவங்கள் நெரிந்தன .
” அ…அது வந்து நாங்க எப்படிண்ணா ….? ” கங்கா தங்கள் நிலைமையை சொல்லி தாயை காக்க முயன்றாள் .
” நான் யமுனாவையும் , காவேரியையும் சொன்னேன் ….”
” அவர்கள் கல்யாணம் முடியாத சின்ன பிள்ளைங்க . அவுங்களுக்கு ஆரத்தி எடுக்க என்ன தெரியும் ….? ” மாதவிக்கு இந்த திடீர் திருமணத்திற்கு ஆரத்தி எடுக்கும் எண்ணமில்லை .
” ஓ …சரி அப்போ ஆரத்தி கரைத்து கொண்டு வாங்க ….ஆரத்தி கரைக்க தெரிஞ்சவங்க இருக்கீங்க இல்லையா ….? ” குத்தலாக வந்த்து அவன் குரல் .
வேறு வழியின்றி ஆரத்தி கரைத்து வந்த கங்கா அதை கைகளில் வைத்துக் கொண்டு விழித்தபடி நிற்க , முன்னால் வந்து ஆரத்தி தட்டை கையில் வாங்கிக் கொண்டான் பார்த்தசாரதி .
” வீட்டுக்கு புதிதாக வந்தவர்களுக்குத்தானே வரவேறபு கொடுக்கனும் ….? ” கேட்டபடி தானே அவளுக்கு ஆரத்தி சுற்றினான் .
” மூன்று சுற்றுதானேம்மா ….” தலை திருப்பி தாயிடம் சந்தேகம் உறுதி செய்தவன் , ஆரத்தி குங்கும நீரை எடுத்து அந்த பெண்ணின் நெற்றியில் வைத்து விட்டு , ” இதை கொண்டு போம்மா …” காவேரியிடம் தட்டை கொடுத்துவிட்டு …” வலது காலை வைத்து உள்ளே வாம்மா …” என வரவேற்றான் .
முகம் நிரம்பிய பரவசத்துடன் அவள் வலது காலை எடுத்து வைத்தபோது , உயரமான படியில் கால் நுனி தட்டி தடுமாற ” பார்த்தும்மா ….” பதறி கை கொடுத்து அவளை உள்ளே வரவேற்றான் .
” அம்மா இவள் பெயர் மணிமேகலை .எங்கள் திருமணம் முடிந்த கதையை பிறகு மெல்ல சொல்கிறேன் .இப்போது அதோ அவர்களிடம் விளக்கம் சொல்லிவிட்டு வருகிறேன் .நீங்கள் இவளை உள்ளே கூட்டி போய் பேசிக் கொண்டிருங்கள் ….”
வழக்கமாக பார்த்தசாரதியை பார்க்கவென காலையில் வீட்டின் முன் கூடி நிற்கும் ஊர் ஜனங்கள் இங்கே நடந்து கொண்டிருந்த அத்தனை நிகழ்வுகளையும் வாசலில் நின்றபடி எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர் .அவர்களை நோக்கி நடந்த பார்த்தசாரதி கம்பீரமாக கைகளை குவித்தான் .
” என் மனைவி .ஒரு அவசர பிரச்சனை .அதனால் திடீரென எங்கள் திருமணம் முடிந்துவிட்டது …வேறு என்ன விசயம் .சொல்லுங்கள் …? ” என்றபடி ஊர் விசயங்களை பேச தொடங்கினான் .
ஆவல் வழிந்த கண்களுடன் கணவனை பார்த்தபடி இருந்த மணிமேகலை இப்போது திரும்பி முதலில் பால் பொங்க விடவா அத்தை என்றாள் .
” அதெப்படி அண்ணா , எங்கள் யாருக்கும் சொல்லாமல் நீங்களாக யாரையோ திருமணம் முடித்து வருவீர்கள் ….? அதனை எப்படி நாங்கள் ஒத்துக் கொள்ள முடியும் …? ” யமுனா தைரியமாக கேட்டாள் .
” ம் …முடிந்து விட்டது .அதற்கென்ன செய்யலாமென்கிறாய் …? ” எரிச்சலாக கேட்டான் .
” போனில் கூட ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டாயா பார்த்தா ….? ” மாதவி ஆதங்கத்தோடு கேட்டாள.
அன்னையின் பக்கம் பார்த்தசாரதி திரும்பிய போது இருவருக்குமிடையே வந்து நின்றாள் மணிமேகலை .கைகளை கூப்பினாள் .
” மன்னித்து விடுங்கள் அத்தை .அவர் மேல் தவறில்லை. இந்த அவசர திருமணத்திற்கு நான்தான் முழு காரணம். இப்படி உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டிய நிலைமை எனக்கு ….”
” நான் என் மகனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்….” எரிக்கும் மாதவியின் பார்வையை சந்தித்த பின்புதான் அம்மாவிற்கும் , மகனுக்குமிடையே தான் நிறபதை உணர்ந்தவள் ” சாரி …” என வேண்டி ஒதுங்கினாள் .
What’s your Reaction?
+1
5
+1
+1
+1
+1
+1
+1
3