பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, பிருத்விராஜன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா (Blue Star Audio Launch) சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், இயக்குநர் ஜெயக்குமார், கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன், தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழாவில் அசோக் செல்வன் :
இசை வெளியீட்டு விழாவில் பேசிய அசோக் செல்வன், இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம், அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட விஷயமும் கூட, ஏன் என்று கேட்டால் இந்த கதையா? இல்லை இந்த கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா? அவர்களில் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா? என்று சொல்லத் தெரியவில்லை. வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் ஆறுதல் சொல்லவும், நம்பிக்கை கொடுக்கவும் யாரும் இல்லையா? என்று ஏக்கமாக இருக்கும். அப்படி ஏங்கி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ப்ளூ ஸ்டார் நம்பிக்கையை கொடுத்தது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். ப்ளூ ஸ்டார் படம் எனக்கு எல்லாத்தையும் கொடுத்தது. நான் வாழ்ந்த வாழ்க்கையைத் திரையில் நடிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறது. மனைவியைக் கொடுத்திருக்கிறது. சிலர் சொல்வதற்கும் அவர்கள் செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ரஞ்சித் பேசுவதை போலவே நடப்பவர். அவருக்கு ஸ்பெஷல் நன்றி இப்படிப்பட்ட மனிதர்களை நான் பார்த்ததே இல்லை.