கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாகக் கவனிக்காததால், அவளை பரதவர் குலப் பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். இக்குற்றத்திற்காக சிவன் முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு “உருத்திரசன்மர்” என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் “குமாரசாமி” ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது.
ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது.
சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து, நோய் நீங்கப் பெற்றான். எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு.
அறிவில் சிறந்த முருகனுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் முடியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளைக் கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே சிவன்,”அனைவரும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள்” எனக் கூறிமறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது.
மூலவர் திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. திருநீலகண்டநாயனார் அவதரித்த தலம்.
தேவாரப்பதிகம்:
மறையான் நெடுமால் காண் பரியான் மழுவேந்தி நிறைய மதிசூடி நிகழ்முத் தின்றொத்தே இறையான் எருக்கத்தம் புலியூர் இடங்கொண்ட கறையார் மிடற்றானைக் கருதக்கெடும் வினையே.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1