14
‘‘பேபி.. சஷ்டி.. சஷ்டிகா..” மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தும் மீளாதிருந்த அவளைப் பற்றி உலுக்க.. ஒரு நெடுமூச்சுடன் மயக்கத்தில் இருந்து விழிப்பவள்போல் மீண்ட சஷ்டிகா, கனகவேலை பார்த்ததும் முகம் கசங்கி கண்கள் கலங்கத் துவங்கினாள்.
“ஸாரி பேபி, நான் முட்டாள்தனமாக எதையோ நினைத்து, எப்படியோ திட்டமிட்டு..” அவசரமாக கனகவேல் சொல்ல, அப்போதுதான் தன் தோள் தொட்டிருந்த அவன் கையைத் திரும்பி பார்த்தவள் அருவருப்புடன் உதறி பின்வாங்கினாள்.
“எவ்வளவு மோசமாக திட்டம் போட்டு இருக்கிறாய் நீ..?” கத்தினாள்.
“சஷ்டிகா நான்..”
“அவன் என்னைப் பார்த்துவிட்டான் தெரியுமா? அப்போது ஏதேதோ சொன்னான்.. ஒன்றுமே புரியவில்லை, இப்போது புரிகிறது. இந்நேரத்திற்கு எல்லோருக்கும் போய் சொல்லியிருப்பான், தப்பு தப்பாக சொல்லியிருப்பான்..”
“யார் சஷ்டிகா? யாரைப் பற்றி பேசுகிறாய்?”
கனகவேலின் கேள்விகள் சஷ்டிகாவின் மண்டைக்குள் ஏறவில்லை. அவள் தன் போக்கில் பேசியபடி இருந்தாள்.
“இவ்வளவு நாட்களாக நான் காப்பாற்றி வந்த என் மானம், மரியாதை எல்லாம் போய்விட்டது. படிப்பிற்கேற்ற வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது தவறா? நல்ல கம்பெனி என்று நம்பி சுமேரியாவிடம் வேலைக்கு சேர்ந்தது தவறா? பெண்னென்று நம்பி அவளுடன் பெங்களூர் வரை வந்தது தவறா? என்ன தவறு செய்தேன் நான்?” கேவினாள்.
“நீ எந்தத் தவறும் செய்யவில்லை பேபி, உன்னைச் சுற்றி நிறைய சூழ்ச்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் உன்னைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்கள். நான் உட்பட!” கசப்புடன் பேசினான் கனகவேல்.
“நான் நினைக்கிறேன், உன்னை இங்கே பார்த்தது மட்டும்தான் நான் செய்த தவறு. நீ என் உச்சந்தலையில் அடித்து உயிரை மட்டும் உருவி விட்டு, பிணமாக நடமாட வைத்து விட்டாய்” குற்றச்சாட்டுடன் தன் பக்கம் நீண்ட அவள் கையைப் பற்ற முயன்றவனை விரைந்து தள்ளினாள்.
“அந்த முரளிதரன் என்னை போட்டோ எடுத்துவிட்டான் தெரியுமா? ஐயோ, அதைக் காட்டி எல்லோரிடமும் தப்பு தப்பாக சொல்லி விடுவானே!”
“எப்போது? சொல் சஷ்டி, அவன் எப்போது உன்னை பார்த்தான்? என்ன சொன்னான்?”
“நாளை நீ கான்ட்ராக்ட் வாங்கி விடுவாய். காரணம், அதற்கு காரணமாக என்னைக் காட்டுவான் அவன். என்னை எல்லோரும் எப்படி பார்ப்பார்கள்? எல்லோரும் எனக்கு என்ன பெயர் வைப்பார்கள்? சொல்லு.. நீயே சொல்லு!” அவன் சட்டையைப் பிடித்தாள்.
“இப்படி ஒரு பெயரை எனக்கு வாங்கிக் கொடுப்பதுதான் உன் லட்சியமா? நான் அப்படிப்பட்ட பெண்ணா? சொல்.. என்ன தவறு செய்தேன் நான்? உன் தந்தை என்னை கோவிலில் பார்த்து உனக்கு திருமணம் முடித்துக் கொடுக்க நினைத்தது என் தவறா? எதற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாய்? உன் வழியில் இடையிட்டேன் என்பதாலா? எல்லோர் முன்பாக உனக்குப் பிடிக்காத பெயர் சொல்லி கூப்பிட்டு விட்டேனே.. அதற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை? இதற்கு பதிலாக கொஞ்சம் விஷத்தை வாங்கிக் கொடுத்து நீ என்னைக் கொன்றிருக்கலாமே!”
கண்களில் தேங்கி நின்ற கண்ணீரோடு மரத்த குரலில் பேசியபடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள் திடுமென உடைந்து அழுதாள். அவளது உலுக்கலுக்கு தன்னைக் கொடுத்து நின்ற கனகவேலின் கண்களிலும் கண்ணாடித் தாளின் பளபளப்பு.
“இப்போதும் நேரம் கடந்து விடவில்லை, எனக்கு இதோ இவ்ளோண்டு சிறிய பாட்டிலில் விஷம் வாங்கிக் கொண்டு வந்து கொடு. நான் குடித்துவிட்டு நிம்மதியாக போய்விடுகிறேன். அல்லது, தூக்கு மாட்டிக் கொள்ளட்டுமா? இதோ இந்த சேலையில்..? ஆனால், சேலையை கழட்டினால் எனக்குப் போடுவதற்கு வேறு டிரெஸ் வேண்டுமே! எங்கே டிரெஸ் கிடைக்கும்? இது யாருடைய அறை? சுமேரியாவுடையதா? அவளிடம் சேலை கிடையாதே! சேலையில்தானே தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டும்.. ஐயோ, என்ன செய்வேன்?”
விக்கி விக்கி அழுதபடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவளை கண்கலங்க பார்த்திருந்த கனகவேல், அவளை அப்படியே இழுத்து அவள் முகத்தை தன் மார்பில் புதைத்துக் கொண்டான். உடன் ஓவென்று பெரும் குரலெடுத்து அழத் துவங்கினாள் சஷ்டிகா.
“என் அம்மா அப்பா முகத்தில் இனி எப்படி விழிப்பேன்?” அவனை அண்ணாந்து பார்த்தவள், “பேசாமல் திருச்செந்தூர் போய் கடலில் குதித்து விடவா?” என்றாள்.
கனகவேலின் கண்கள் கலங்கி கண்ணீர் வடியத் துவங்கியது. போனை எடுத்து ரிசப்சனுக்கு பேசியவன், தன் போக்கில் பேசியபடி இருந்தவளை இடக்கையால் அணைத்தபடி கெட்டிலில் பாலை சுட வைத்தான். ஹோட்டல் பணியாள் கொண்டுவந்து கொடுத்த ஒரு தூக்க மாத்திரையை பாலில் கலந்தான்.
“இதைக் குடி பேபி”
“விஷமா? இதை குடித்தால் செத்துப் போய் விடுவேனா?”
தொண்டையில் அடைத்ததை விழுங்கி கொண்டு, “இதை குடித்தால் எல்லாம் சரியாகிவிடும். குடி..” என்றான்.
வேகமாக வாங்கிக் குடித்தாள். அவள் தோள் பற்றி படுக்கையில் கிடத்தியவன், போர்வையை மூடிவிட்டான். “நிம்மதியாக தூங்கு பேபி, நாளை காலை எல்லா பிரச்னைகளையும் நான் சரி செய்து விடுவேன்!”
“நான் செத்தால்தான் எல்லாம் சரியாகும்” பும்பியபடியே மெல்ல கண்ணயர்ந்தாள்.
அவள் அருகிலேயே அமர்ந்து வெகு நேரம் அவளை பார்த்தபடியே இருந்த கனகவேல், பிறகு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக யோசனையுடன் நடந்தான். தன் போனை எடுத்து நவீனனை அழைத்தான். அவனுக்கு சில வேலைகளை உத்தரவிட்டான். பிறகு வரிசையாக சிலரிடம் போனில் பேசினான்.
பிறகு ஒருவித தயக்கத்துடன் அங்கும் இங்கும் நடந்தபடியே இருந்தவன், தலையை உதறிக்கொண்டு தன் போனில் டயலை அழுத்தினான். எதிர்முனை எடுக்கப்பட்டவுடன் ஒருவித அவஸ்தையுடன் நெற்றியை நீவிக் கொண்டான்.
தயக்கமான குரலில் “அப்பா..” என்றான்.”எ..எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அப்பா” கரகரத்தான்.
What’s your Reaction?
+1
32
+1
18
+1
1
+1
2
+1
+1
+1
2