கண் வறட்சி எல்லாருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனையாகும். நம் கண்களால் போதுமான கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாத போதோ அல்லது ஆரோக்கியமாகவும் முறையாக செயல்படுவதற்கும் தேவைப்படும் ஈரப்பதம் இல்லாத போது கண்களில் இந்தப் பிரச்சனை வருகிறது.
கண்களில் எரிச்சல், அசௌகர்யம் அல்லது மங்கலான பார்வை போன்றவை உலர் கண்களின் அறிகுறிகளாகும். சமீப ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளதல் இந்தப் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதை குணப்படுத்த இணையத்தில் பல வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. உலர் கண்கள் பிரச்சனைக்கான நேரடியான தீர்வை கண்டண்ட் க்ரீயேட்டர் ஆலன் மேண்டெல் தருகிறார். அவர் சொல்வது போல் ஒரு நிமிடம் கண்களை சிமிட்டினால் கண் வறட்சியின் அறிகுறிகளை போக்கலாம்.
ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் ஸ்க்ரீனை அதிக நேரம் பார்ப்பது, குறைவான நேரமே கண் சிமிட்டும் இடங்களில் இருப்பது போன்றவை கண்களில் வறட்சி, எரிச்சல் வருவதற்கு காரணமாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றே கண்களை தொடர்ந்து சிமிட்டும் போது, கண் இமைகளின் மேலிருக்கும் சிறிய எண்ணெய் உற்பத்தி சுரப்பியான மெய்போமியன் சுரப்பியை திறக்க உதவுகிறது. கண்களை ஈரப்பதமாக வைத்திருப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படி எளிய முறையில் கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்களின் மேற்பரப்பில் ஈரப்பதத்தை பரப்பி வறட்சியை தடுக்க உதவுகிறது.
சரி, இதை எப்படி செய்ய வேண்டும்? சில நொடிகளுக்கு உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கண்களை திறந்து பாருங்கள். அடுத்து தொடர்ச்சியாக கண்களை சிமிட்டியபடியே இருங்கள். உங்கள் கண்கள் முழுவ தும் கண்ணீர் நிரம்பும்வரை நிறுத்தாதீர்கள். அவ்வளவுதான்.
கண் வறட்சி அறிகுறிகளை குறைக்க அல்லது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சொட்டு மருந்து: கண் வறட்சிக்கு சொட்டு மருந்து பயன்படுத்துவது பொதுவான சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். உங்கள் கண்களின் நிலையை பொறுத்து குறிப்பிட்ட வகை சொட்டு மருந்தை கண் மருத்துவர் பரிந்துரைப்பார். எல்லா கண் சொட்டு மருந்துகளும் ஒன்றல்ல என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
வெதுவெதுப்பான அழுத்தம்: வெதுவெதுப்பான கண் மாஸ்க்கை பயன்படுத்தி காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இப்படி மூடியபடியே சில நிமிடங்கள் இருந்துவிட்டு, பின்னர் கண்களில் ஈரப்பதத்தை பரவச்செய்ய சில முறை கண்களை சிமிட்டுங்கள்.
தூங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றவும்: நீங்கள் உபயோகப்படுத்தும் காண்டாக்ட் லென்ஸ் இரவு நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை என்றால், இரவு தூங்குவதற்கு முன் அதை அகற்றிவிடுங்கள். வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே காண்டாக்ட் லென்ஸை கழற்றுவதால் கண்கள் சுவாசிக்க போதுமான நேரம் கிடைக்கும்.
நீர்ச்சத்தின் அவசியம்: உடலில் நீரிழப்பு ஏற்பட்டாலும் கூட கண்கள் உலர்ந்து போகும் வாய்ப்புள்ளது. ஒருநாளைக்கு குறைந்தப்பட்சம் எட்டு க்ளாஸ் தண்ணீர் பருகுவதன் மூலம் உங்கள் கண்களுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.
20-20-20 விதியை பின்பற்றுங்கள்: நம்முடைய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் ஸ்க்ரீன் நமது கண்களுக்கு அதிக அழுத்தங்களை கொடுக்கின்றன. கண் வறட்சியை தடுக்க வேண்டுமென்றால், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 நொடிகள் இடைவேளை எடுத்து, 20 அடி தூரமுள்ள பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள். இப்படிச் செய்வது கண்களுக்கு இதமளிக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1