மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் உருவாகும் தொழில் யோசனைகள் எப்போதும் ஹிட் தான். அப்படி குழந்தைகளுக்கு தூய்மையான பருத்தி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து தொழிலதிபர்களாக உயர்ந்துள்ளனர் திருப்பூரை சேர்ந்த கல்லூரி தோழிகள்.
வெறும் 5 ஆயிரம் ரூபாயில் இவர்கள் தொடங்கிய பீ லிட்டில் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 7.5 கோடி ரூபாயாம்.
திருப்பூரை சேர்ந்த சூர்ய பிரபா, சக்திபிரிய தர்ஷினி, காயத்ரி ஆகிய மூவரும் கல்லூரி தோழிகள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தூய்மையான பருத்தியில் ஆன ஆடைகளை தேடியுள்ளனர்.
பெரும்பாலும் செயற்கை இழைகள் கொண்ட குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் ஆடைகளே சந்தையில் கிடைத்தன. அப்போது மூன்று பேரும் இணைந்து தங்கள் குழந்தைகளுக்காக பருத்தி துணிகளை வாங்கி தாங்களாகவே வடிவமைத்து துணிகளை தைத்து பயன்படுத்தியுள்ளனர்.இது தான் அவர்களுக்கு பின்னாளில் அட்டகாசமான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
மூன்று தோழிகளில் காயத்ரி பேஷன் டெக்னாலஜி பயின்றவர். அவரே துணிகளை தைக்கும் பணியை தொடங்கினார். மற்ற இருவரும் பருத்தி துணிகளை தேர்வு செய்வது , வாங்குவது, கட் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
முதலில் தங்கள் குழந்தைகளுக்கு என தொட்டில், ஆடைகள் ஆகியவற்றை தயாரித்தனர். பின்னர் நண்பர்களின் குழந்தைகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என படிப்படியாக இவர்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின.
2015ஆம் ஆண்டு சூர்யாவின் வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையில் தையல் இயந்திரத்தை கொண்டு ரூ.5,000 முதலீட்டில் பருத்தி துணிகளை வாங்கி இவர்கள் தொழிலை தொடங்கினர். தொட்டில், அன்றாடம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஆடைகள் என தைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
பீ லிட்டில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அவர்களின் பொருட்கள் தரமானது என்பது தான். தரமான பொருட்களினால் திருப்தி அடையும் ஒரு வாடிக்கையாளர் மேலும் 5 வாடிக்கையாளரை அழைத்து வருவார் என்ற சொற்றொடரே இவர்களின் தொழில் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
தற்போது பீ லிட்டில் நிறுவனம் வைரா பேபி பொடிக் என்ற நிறுவனத்தின் பார்ட்னர்சிப் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.பீ லிட்டிலுக்கு திருப்பூர், கோவை, சென்னையில் கடைகள் உள்ளன.
தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.7.5 கோடி. பீ லிட்டிலில் குளோபல் ஆர்கானிக் டெக்ஸ்டைல் தரநிலை அளித்த பருத்தி துணிகளை மட்டுமே பயன்படுத்தி ஆடைகளை தயாரிக்கின்றனர். தொட்டில் துணிகள் தொடங்கி, போர்வைகள் உள்ளிட்ட சுமார் 100 பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
மற்ற பிராண்டுகளில் இருந்து பொம்மைகள் மற்றும், டீத்தர்கள், பெட் புரோடெக்டர்ஸ் ஆகியவற்றை இங்கிருந்து வாங்க முடியும். இது தவிர குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு தேவையான மேட்டர்னிட்டி பேண்ட்ஸ், நாப்கின்கள், ஃபீடிங் பில்லோஸ் ஆகியவையும் பீலிட்டிலில் கிடைக்கின்றன.
லாக்டவுனில் கிடைத்த வளர்ச்சி: 2015இல் தொழிலை தொடங்கிய இவர்கள் 2016இல் பீ லிட்டிலுக்கு என பேஸ்புக் பக்கத்தை உருவாக்கினர். அதில் பல வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
பின்னர் 2018இல் ஆளுக்கு ரூ.50,000 முதலீடு செய்து கோவையில் முதல் கடையை திறந்தனர். கொரோனா லாக்டவுன் காலத்தில் பீ லிட்டிலுக்கு என இணையதளத்தை உருவாக்கினர். அது தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது. தற்போது தங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களில் 60% ஆன்லைனில் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
முதலில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். வெறும் 3 தோழிகள் இணைந்து உருவாக்கிய பீலிட்டில் நிறுவனத்தில் தற்போது 35 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்,
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1