108 வைணவ திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் கோயில், 37-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருநாங்கூரில் இருந்து கிழக்கே 4 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
தல வரலாறு
தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், தந்தையிடம் முறையிட்டனர். இதில் கோபம் கொண்ட தக்கன், சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என்று சாபமிட்டார்.
தக்கனின் சாபம் காரணமாக, முழு சந்திரன் தேயத் தொடங்கினார், சாபம் விமோசனம் பெறுவதற்காக ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு சென்றுவிட்டு, நிறைவாக திருமணிக்கூடத்துக்கு வந்தார் சந்திரன். திருமணிக்கூடத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சந்திரன் வழிபடும்போது, திருமணிக்கூட நாயகன், சந்திரனுக்கு வரதராஜராகக் காட்சி அளித்தார். சந்திரன் சாப விமோசனம் கிடைத்து, அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட்டார்.
கோயில் அமைப்பும், சிறப்பும்
கோயிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கருடாழ்வார் சந்நிதி, மகாமண்டபம், அர்த்த மண்டபங்களைக் காணலாம். கனக விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி திருவிழா, தை மாத கருட சேவை நாட்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க, பெண் குழந்தைகளை காப்பாற்ற, மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு எளிதில் திருமணம் நடைபெற, திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய, இத்தல பெருமாளும் தாயாரும் அருள்புரிவர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1