gowri panchangam Sprituality

காக்க காக்க கனகவேல் காக்க-1

தமிழ்க் கடவுள் என்றழைக்கப்படும் முருகப் பெருமானைப் பற்றி நாள் தோறும் பேசப்போகும் புதிய தொடர் இது. முருகனை சிவபெருமான் – பார்வதி தேவியின் இரண்டாவது மைந்தன் என்கிறது புராணம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து நெருப்பு வெளிப்பட, அதைத் தாங்கிய வாயு பகவான், சரவணப் பொய்கையில் விட்டார்.

அந்த நெருப்பு ஆறு குழந்தைகளாக மாறி, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். பார்வதி தேவி, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்போது, ஆறுமுகனாக முருகப் பெருமான் காட்சியளித்தார்.




கணங்களின் அதிபதியான கணபதியின் இளைய சகோதரரான முருகப் பெருமான், குறிஞ்சி நிலக் கடவுளாக வணங்கப்படுகிறார். சேயோன் வழிபாட்டை பிற்காலத்தில் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் ‘கௌமாரம்’ என்ற பெயரில் முருகன் வழிபாடு இருந்து வந்தது.முருகன் என்றாலே தனிச்சிறப்பும் அழகும் நிறைந்த கடவுள் என்பது பொருள்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் முதல்திணையான குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். தமிழர்கள் மலைப்பகுதியை அதாவது இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தனர். இயற்கை என்றால் மரம், செடி, கொடி, அதில் உள்ள விலங்குகளையும் வணங்கி வாழ்ந்து வந்தனர்.அப்படி உலகத்தில் தோன்றிய மக்கள் முதலில் மலையில் ஒரு வகை வழிபாட்டை தொடங்கினார்கள். முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். மக்கள் அழகை உபசித்த ஒருவகை வழிபாடு முருக வழிபாடு. எனவேதான் முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.




திருப்புகழில் அருணகிரினாதர், “முழுதும் அழகிய குமரன்” என எதையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அழகுடன் இருப்பவர் முருகன் என பாடியுள்ளார். அழகெல்லாம் ஒன்றாக சேர்ந்தால் அதற்கு பெயர் தான் முருகு. திருமுருகாற்றுப்படை தனித்த ஒரு சிறப்புடைய இலக்கியம்.தமிழில் கிடைத்திருக்கும் மிக பழைய நூல்கள் என்றால் அது சங்க இலக்கியங்கள் ஆகும். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு என மூன்று பகுதிகளாக உள்ளன. அதில் பத்துப்பாடு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதிலும் முதலாவதாக திருமுருகாற்றுப்படை உள்ளது.

திருமுருகாற்றுப்படை எழுந்ததற்கான காரணம்: தமிழில் அருமையான புலவர்களில் ஒருவர் நக்கீரர். அவர் திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரை அமர்ந்து சிவ வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அந்த வழிபாட்டு நேரத்தில் மரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுகிறது. அந்த இலையின் பாதி நீரிலும், மற்றொரு பாதி நிலத்திலும் விழுகிறது. நீரில் விழுந்த பகுதி மீனானது. நிலத்தில் விழுந்த மற்றொரு பாதி தவளை ஆனது. மீன் நீரிலும், தவளை நிலத்திற்கும் அதன் மீதி பகுதியை இழுக்கத் தொடங்கியது.

சிவ பூஜையிலிருந்து கவனம் தவறிய நக்கீரர் இதைப்பார்த்து அதில் கவனம் செலுத்தினார். அங்கு தோன்றிய பூதம் நக்கீரரை பிடித்து ஒரு குகையில் அடைத்தது. பூஜையில் கவனம் சிதறியவர்களை பிடித்து குகையில் அடைத்து 1000 பேர் ஆனதும் அவர்களை உண்பது தான் அந்த பூதத்தின் திட்டம். அங்கு ஏற்கனவே பலரை அடைத்து வைத்திருந்தது அந்த பூதம்.குகையில் அடைப்பட்ட நக்கீரர் தன்னை விடுவிக்குமாறு முருகனை நோக்கி பாடினார். அது தான் திருமுருகாற்றுப்படை. அப்படி வேண்டிய மாத்திரத்தில், முருகனின் வேல் புறப்பட்டு வந்து குகையை கிழித்து அங்கிருந்தவர்களை காப்பாற்றியது என்ற குறிப்பு உண்டு. இப்படியாக தமிழ் இலக்கியங்களும் முருகனைப் பற்றி பாடுவதாக அமைந்திருப்பதால் முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.




திருவிழாக்கள்

கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூச தினங்கள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாக கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமாகவும், கந்தசஷ்டி சூரபத்மனை வீழ்த்திய தினமாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

இனி வரும் பதிவுகளில் முருகப் பெருமானின் கோவில்கள் , அவதாரம், சிறப்புகள்   பற்றி தெரிந்து கொள்ளுவோம் இணைந்தே இருங்கள் “ஓம் சரவண பவ “




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!