Cinema Entertainment

இசையமைப்பாளர் சிற்பியை ஞாபகம் இருக்கிறதா?

முதன்முதலாக இவரது பெயர் மனதில் பதிந்து போனது “அன்னை வயல்” படத்தில் “மல்லிகை பூவழகில்” பாடலை கேட்டுத்தான். அந்தப் பாடல் கேட்ட உடன் மனதில் பதிந்து போனது. ஆனால் அவ்வளவு எளிதாக ரேடியோவில் கேட்க முடியாது. ஆனாலும் அவ்வப்போது அந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளைப் பாடி, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னாளில் யூட்யூப் எல்லாம் வந்த பிறகு ஆசை தீர கேட்டு மகிழ்ந்தது சுகமான நினைவுகள் தான் . (அப்படி நினைவில் வைத்திருந்த கேட்ட இன்னொரு பாடல் தாட் பூட் தஞ்சாவூர் படத்தில் இடம்பெற்ற “செம்பருத்தி செம்பருத்தி நேசப்பூவே” எனும் பாடல். இசை: சோமன் ராஜ்).




இயக்குனர் மனோபாலாவால் அறிமுகபடுத்தப்பட்டவர் சிற்பி. இசை மட்டும் தான் எல்லாம் என்று சென்னைக்கு வந்தவர் இசையமைப்பாளர் ஆனது ஒரு சாகசக்கதை தான். சாய் வித் சித்ராவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பேட்டியில் சிற்பி அவர்களுடையதும் ஒன்று. முதல் படமான செண்பகத் தோட்டம், இரண்டாவது படமான “அன்னை வயல்” படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனதால், சிற்பிக்கும் பெரிய வரவேற்பு இல்லை.




திரை உலகில் ஒரு நடிகரோ, ஒரு இசை அமைப்பாளரோ, பெரிய அளவில் வரவேற்பைப் பெற வேண்டுமானால், ஒரு சிறந்த இயக்குனரோடு கை கோர்த்தால் மட்டுமே முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு அவரை தேடி வந்தது. இயக்குனர் விக்ரமனின் “கோகுலம்” படம் சிற்பிக்கு ஒரு புதிய வாசலை திறந்து விட்டது. கூடவே ஆர்.பி சௌத்ரி எனும் காட்பாதரின் அறிமுகமும் கிடைத்தது. படம் சூப்பர் ஹிட்.

அன்றைக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களின் வேடந்தாங்கலாக சூப்பர் குட் பிலிம்ஸ் இருந்தது. “செவ்வந்தி பூவெடுத்தேன்” பாடல் ஒலிக்காத இடமே இல்லை. புது ரோஜா பூத்திருக்கு, அந்த வானம் எந்தன் கையில், தெற்கே அடிக்குது காத்து என ஆல்பமே அதிரிபுரி ஹிட்.  அவ்வளவு அழகான ட்யூன், ஆனாலும் சீக்கிரமே முடிந்து விடும். அந்தப் பாடலை இன்னும் கொஞ்சம் சீவி சிங்காரித்து அழகு படுத்தியிருக்கலாம்.

இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. “ஏலேலங்கிளியே” பாடல் யேசுதாஸ் குரலில் ஒன்று, மனோ, பி சுசீலா இணையில் ஒன்று. “பூங்குயில் ராகமே” சோகப்பாடல் வெர்ஷன் அந்நாளில் காதலில் தோற்றவர்களின் தேசிய கீதங்களுள் ஒன்று. “செந்தமிழில் புது சொல்லெடுத்து”, பாடல் மனோவுக்கு. சிற்பி அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த ஆல்பம் என்றால் மிகையே இல்லை. அதன் பிறகு கேப்டன், சின்ன மேடம் என தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தது. ஒவ்வொரு படத்திலும் சில பாடல்களில் சிற்பியின் பெயரைச் சொல்லும்.




சிற்பி இசையமைப்பாளர் #சிற்பி video Mano MohaN - ShareChat - Funny, Romantic, Videos, Shayari, Quotes

” கன்னத்துல வை” பாடல் அதிரிபுதிரி ஹிட். “சின்ன மேடம் படத்தில் ” முத்து முத்து பெண்ணொருத்தி” பாடல் தான் தமிழில் பஞ்சாபி ஸ்டைலில் வந்த முதல் பாடல் என்று சொல்லலாம். அதன் பிறகு தான் ஜெய்ஹிந்த் படத்தில் வித்யாசாகர் அந்த ஸ்டைலை பயன்படுத்தினார் என நினைக்கிறேன். அந்தப் படத்தின் பாடல்கள் சைலண்ட் ஹிட் என்று சொல்லலாம். “சின்ன சின்ன இடங்களை தொட்டு வைக்கிறாய்” “ஒரு பொண்ணு நினைச்சா” பாடல்கள் கேட்க கேட்க பிடித்துப் போகும்.

“மணி ரத்னம்” என்ற படத்தில் வந்த “காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா” அட்டகாசமான அக்மார்க் டவுன்பஸ் பாடல். இது எந்தப் படத்தில் வந்த பாடல் என்றே தெரியாமல் அனைவரும் ரசித்த பாடல். அட்டகாசமான மெலடி வகை. தேவாவைப் போலவே சிற்பியின் இசையில் வெளிவந்த பல பாடல்கள் டவுன்பஸ்களில் கேட்கலாம்.




அதன் பிறகு மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் “நாட்டாமை”. ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் பட்டி தொட்டி அவர் பாடல் ஒலித்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்பது சோகமான உண்மை. பொதுவாகவே ஹிட் படக் கூட்டணியில் இருப்பவர்களுக்குத் தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் சிற்பி அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

விக்ரமனுக்குப் பிறகு சிற்பிக்கு கிடைத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சுந்தர் சி. இருவரும் இணைந்த படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை. இத்தனைக்கும் ” உள்ளத்தை அள்ளித்தா” பட வாய்ப்பும் கடைசி நேரத்தில் தான் சிற்பிக்கு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றி தான் அவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது என்று சொல்லலாம். “அழகிய லைலா” பாடல் பம்பர் ஹிட்டானது. பிறகு சூப்பர் குட் பிலிம்ஸில் “சுந்தர புருஷன்” பட வாய்ப்பு. “சமஞ்சேன் உனக்குத்தான்” மற்றுமொரு டவுன்பஸ் ஹிட் பாடல்.

பிறகு உள்ளத்தை அள்ளித்தா காம்போ அப்படியே இணைந்து கொடுத்த இன்னொரு படம் “மேட்டுக்குடி”. ஒரு ஆல்பமாகவே அந்தப் படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட் வகையறா. மனோ+சிற்பி கூட்டணி தான் அனைத்துப் பாடல்களும். அந்தப் படத்தில் ” சரவணபவ எனும் திருமந்திரம்” பாடல் அட்டகாசமான முருகன் பக்திப் பாடல். “அன்புள்ள மன்னவனே” பாடல் சுவர்ணலதாவின் ட்ரேட்மார்க் பாடல்களில் ஒன்று.




மிக எளிமையான, கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் மெட்டு தான் சிற்பியின் பாடல்களின் சிறப்பம்சம். பாமரனாலும் முணுமுணுக்க முடியும். அவ்வளவு எளிமையாக இருக்கும். அதனால் தான் காலம் கடந்தும் அவரது பாடல்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்தாலும், பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தன. அதனால் பிரம்மாண்டமான ஆர்கஸ்ட்ரேஷன், பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க வில்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபிக்க தவறவில்லை. தேவா அவர்களுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததைப் போல சிற்பி அவர்களுக்கும் ஒரு பூஸ்ட் கிடைத்திருந்தால், அவரும் தன் மேதைமையை நிரூபித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ச்சியாக படங்கள் செய்து கொண்டே தான் இருந்தார். “கங்கா கௌரி” படத்தில் “காதல் சொல்ல வந்தேன்” நல்ல பாடல். “பூச்சூடவா” படத்தில் வந்த “காதல் காதல் காதல்” பாடல் என்னைப் போல பலருக்கும் பேவரைட் பாடலாக இருக்கும். அட்டகாசமான பாடல் அது. மற்றபடி அந்தப் படம் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. மூவேந்தர் படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றது. “குமுதம் போல் வந்த குமரியே”, ” நான் வானவில்லையே பார்த்தேன்” இரண்டும் சிற்பி+ ஹரிஹரன் காம்போவில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள். அதே போல் இவர்கள் காம்போவில் வந்த இன்னொரு ஹிட் பாடல் கண்ணன் வருவான் படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே வெண்ணிலவே” “காற்றுக்கு பூக்கள் சொந்தம்” இரண்டும் அட்டகாசமாக இருக்கும். சுந்தர் சி + சிற்பி காம்போவில் அந்த ஆல்பமே ஹிட் பாடல்கள் தான். சுயம்வரம் படத்தில் ஹரிஹரன் பாடிய “செக்கச் சிவந்தவளே” பாடல், குங்குமப் பொட்டுக் கவுண்டர் படத்தில் “முதன்முதலா உன்னைப் பார்த்தேன்” பாட்ல்களை எல்லாம் கண்டிப்பாக நீங்கள் டவுன்பஸ்ஸில் கேட்கலாம்.




அங்கொன்றும் இங்கொன்றுமாக படத்திற்கு ஒன்று என ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த போது தான், மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் “வருசமெல்லாம் வசந்தம்” ஆல்பம் வந்தது. அந்தப் படத்திற்கு விசிட்டிங் கார்டே சிற்பியின் இசையில் வந்த பாடல்கள் தான். “அடி அனார்கலி”, எங்கே அந்த வெண்ணிலா”, ” முதல் முதலாக” பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தன. மிக மிக எளிமையான மெட்டமைப்பில் வெளிவந்த இந்த பாடல்கள் சிற்பிக்கு ஒரு கம்பேக் கொடுத்தது. பிறகு மீண்டும் விக்ரமன் கூட்டணியில் இணைந்த “உன்னை நினைத்து” படத்தின் பாடல்கள் அவருக்கு ஸ்டேட் அவார்டை பெற்றுத் தந்தது. கோடம்பாக்கம் படத்தில் வந்த “ரகசியமானது காதல்” பாடல் சாட்டிலைட் சானல் காலத்தில் மிகப்பெரிய ஹிட் பாடல்.

அவர் இசையமைத்த காலத்தில் அவருக்கு இருந்த போட்டியைப் பார்த்தாலே மலைப்பாக இருக்கும். இளையராஜா, தேவா, ரஹ்மான், வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார் என அனைவரும் சரிக்கு சமமாய் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த காலம். கடும் போட்டிக்கு மத்தியிலும் இத்தனை ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். முன்பே சொன்னது போல மற்ற இசை அமைப்பாளர்களுக்கு அமைந்தது போல நல்ல இயக்குனர் காம்போ அமைந்திருந்தால் இன்னும் நல்ல பாடல்களை கொடுத்திருப்பார்.

 உங்கள் பாடல்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!