Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 1

1




” வாடகை வந்து இன்னையோடு இரண்டு மாசமாச்சு , இனி ஒரு நாள் கூட பொறுத்துக்க மாட்டேன் .நாளை காலை எட்டு மணிக்கு வருவேன் .இரண்டு மாச வாடகை ஆறாயிரம் ருபாயை எண்ணி வைக்கனும் .இல்லைன்னா சாமான் செட்டெல்லாம் தூக்கி வெளியில் கடாசிடுவேன் ” சித்தி சௌபாக்கியத்தின் கத்தலோடுதான் அன்றைய காலை சுடரொளிக்கு விடிந்தது.

இரவு வெகு நேரம் உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்து விட்டு , பின்னிரவின் இறுதியில் உறங்கியதால் விழிகள் திறக்க மாட்டேனென அடம் பிடித்து எரிய , வலுக்கட்டாயமாக விழி திறந்து எழுந்து சன்னலை திறந்து கீழே பார்த்தாள் .

அவர்கள் காம்பௌன்டின் தென் ஓரம் இருக்கும் இருபத்தியேழாம் நம்பர் வீட்டுக்காரர்களை விரட்டிக் கொண்டிருந்தாள் சித்தி .பாவம் அவர் ஆட்டோ ஓட்டுபவர் .இந்த லாக்டவுன் நேரத்தில் சரியான வேலை இல்லாமல் , வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் .

அவருக்கு இன்னமும் ஒரு மாதம் டைம் கொடுக்கலாமென்ற எண்ணம்தான் சுடரொளிக்கு .அதனை சித்தியிடம் சொல்ல எண்ணி தலை நிமிர்ந்தவளின் பார்வையில் எதிர்சாரியில் இருக்கும் வீடு பட்டது .அவ்வளவுதான் அவளது மனம் ஆட்டம் கண்டது .சிந்திக்கும் திறனிழந்து தடுமாறியது .

ஒரு மாதிரி பொம்மை போல் படியிறங்கி வந்த அண்ணன் மகளை பார்த்ததுமே , தன் மனைவிக்கு கண் ஜாடை செய்த அன்பரசு , பரிவுடன் அவளை நெருங்கினான் .

” சுடர் என்னடாம்மா ? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் ? “




” ஒ…ஒன்றுமில்லை .சித்தப்பா ” கண்ணீரை விழிகளுக்குள் இழுத்தாள் .

” இப்படி உட்காரம்மா “.சோபாவில் அவளை அமர்த்தினான் .

சௌபாக்கியம் சூடான காபியோடு வந்தாள் .” உனக்கு பிடித்த பில்டர் காபி கண்ணு .சொட்டு சொட்டா குடிக்க குடிக்க எப்பேர்பட்ட பாரமும் காணாமப் போயிடுமேம்மா “

இப்போது சித்தியிடம் அந்த கர்ண கடூர குரல் இல்லை .மிக மென்மையான மயிலிறகு வருடல் குரலில் .இதுதான் சௌபாக்கியம் சித்தி .அவளுக்கென்றால் குரல் குழையும் , இழையும் .வெளியே அப்படிக் கத்தியதும் அவளுக்காக போட்ட வேசமே என்பாள் .

ஒரு வகையில் அதுவும் உண்மைதான் .நம்பியவன் ஏமாற்றியதும் , திக்குத் தெரியாமல் நின்ற சுடரொளிக்கு , மகளின் நிலைமையில் கலங்கி தவித்த அவளது பெற்றோருக்கு முழு பக்க பலமாக இருந்தவர்கள் சித்தியும் , சித்தப்பாவும்தான் .

அந்தக் கொடூர காலத்தை இவர்களின் பலத்தில்தான் கடந்து வந்தார்கள் .இதோ இப்போதும் அவளது லேசான முக மாறுதலை கண்டு கொண்டு , அவளுக்கு பிரியமான காபியை கொண்டு வந்து கொடுத்து , வேறு ஏதேதோ பேசி அவளது கவனத்தை திசை திருப்ப முயலுகின்றனர் .

சுடரொளி விரைவிலேயே சரியாகி விட்டாள் .அல்லது சரியானது போல் காட்டிக் கொண்டாள் .அவளுக்காக தவித்திருக்கும் உறவுகளின் முன்னால் தொடர்ந்து தனது சோகம் காட்டத் தயாரில்லை அவள் .காபி குடித்து முடித்ததும் முகத்தில் புன்னகை தவழவிட்டு தனது மாடி அறைக்குள் நுழைந்து கொண்டாள் .




ஞாபகமாக அந்தப் பக்கத்து சன்னலை மூடியே வைத்துக் கொண்டாள் .கதவை திறப்பானேன் , அந்த வீட்டைப் பார்ப்பானேன் அந்த ஏமாற்றுக்காரனின் நினைவில் கரைவானேன் .கண்களை இறுக மூடி படுக்கையில் சாய்ந்து கொண்டாள் .யாரை மறக்க நினைத்தாளோ அவனே விழிகளுக்குள் ஊற்றிய அமிலமாய் எரிந்தான் .

அன்று …

மதியத்திற்கு மேல் கல்லூரியை  கட் அடித்துவிட்டு , தோழிகளுடன் ஊர் சுற்றி விட்டு மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்த போது , அவன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான் .மெல்ல தலை கோதியபடி அங்குமிங்கும் விழி சுழற்றி வீட்டை அலசியபடி இருந்தான் .

யார் இந்த பனை மரத்திற்கு பிறந்தவன் ? விழியால் அவனை அளந்தபடி மாடியேறினாள் .மேலே போகாமல் பாதி படியில் ஒளிந்து நின்று கீழே நடப்பதை கவனித்தாள் .

அம்மா புவனேஸ்வரி அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள் .சுடரொளிக்கு ஆச்சரியம் .அவர்களை கடந்து வரும் போது காதில் விழுந்த பேச்சுக்களில் அவன் இங்கே அவர்கள் கட்டி  வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு குடியிருக்க வந்திருக்கிறான் என அறிந்தாள் .

அப்படி வாடகைக்கு வருபவர்களை வாசல் திண்ணையில் உட்கார வைத்து ஓரு தம்ளர் தண்ணீர் கொடுத்து வாடகை விபரம் பேசி அனுப்பி விடுவதுதான் அப்பா தமிழரசுவின் பழக்கம் .இப்படி நடு வீடு வரை இவனை மட்டும் அனுமதிப்பதென்றால் …சுடரொளி இன்னும் கொஞ்சம் எக்கி பார்க்க , சோபாவின் அந்தப்புறம் அமர்ந்திருந்த சாமிநாதன் அங்கிள் தென்பட்டார் .

அப்பாவின் சிறு வயது நண்பர் .ஓ…இவருடன் வந்ததால்தான் இந்த ஆளுக்கு இந்த வரவேற்பா ? சிறு உதட்டு சுளிப்புடன் அவள் தன் அறைக்குள் நுழைந்து முகம் கழுவி வந்த போது வாடகை பேசப்பட்டு முன்பணம் அப்பா கைக்கு மாறிக் கொண்டிருந்தது .




” எப்போது வர்றீங்க ? “

தமிழரசுவின் கேள்விக்கு …

” இப்போதே சார் ” என புன்னகைத்தான் அவன் .

” ஓ …அப்போ சாமான்களெல்லாம் …? “

” சீக்கிரமே ரெடி பண்ணிவிடுவேன். வர்றேன் சார் ” சொல்லிவிட்டு அவன் எதிர் வீட்டிற்குள் நுழைந்தான் .

” இதென்ன அண்ணா , ஆடி மாதமும் அதுவுமாக பால் கூட காய்ச்சாமல் வீட்டிற்குள் நுழைகிறான் பையன் .யார் அண்ணா இது ? ” புவனேஸ்வரி கேட்க சாமிநாதன் உதட்டை பிதுக்கினார்

” தெரியலைம்மா .எனக்கு ரொம்ப தெரிந்த நண்பர் ஒருவர்தான் இவனுக்கு தங்க இடம் வேண்டுமென்று கேட்டார் .ரொம்ப நம்பிக்கையான பையன்னு சொன்னதால் இங்கே நம் வீட்டிற்கு கூட்டி வந்தேன் “

” நல்ல பையன்தானேடா சாமி ?.வீட்டில் வயதுப்பெண் இருக்கிறாள் ” தமிழரசு கேட்க , சத்தியம் செய்யாத குறையாக அவன் ஒழுக்கத்திற்கு சான்றிதழ் அளித்தார் சாமிநாதன் .

அப்பாவிற்கு அன்றே மனதில் ஏதோ பட்டிருக்கும் போல …கடைசியில் அவரது சந்தேகம் சரியாகி , இதோ அவனை நம்பி வாழ்வை தொலைத்துவிட்டு நிற்கிறாள் சுடரொளி.

பெருமூச்சுடன் பழைய நினைவுகளை களைந்தவள் , தனது மொபைலை எடுத்து முதல்நாள் வந்த மெயிலை மீண்டும் பார்த்தாள் .உறுதியான முடிவெடுத்தாள்




” என்னம்மா சொல்கிறாய் ? ” சித்தப்பாவின் அதிர்ச்சி வெளிப்படையாக தெரிந்தது .

” ஆமாம் சித்தப்பா .நான் கொஞ்ச நாட்கள் இங்கிருந்து விலகி இருக்கலாமென்று நினைக்கிறேன் . அதனால்தான் இந்த வேலைக்கு போகப் போகிறேன் “

” என்னடாம்மா , இங்கே உனக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கும் போது , அடுத்த இடத்திற்கு வேலைக்கு போக வேண்டுமா ? ” சௌபாக்கியம் வேதனையுடன் கேட்டாள் .

” இந்த சொத்துக்களை போகும் போது கட்டிப் போகவா போகிறேன் ? கிடக்கட்டும் விடுங்க சித்தி .எனக்கு தேவை மனநிம்மதி “

” ஏய் பிள்ளை மனசு நொந்து பேசுவது உனக்கு புரியவில்லையா ? அவள் இஷ்டம் போல் இருக்கட்டும் .விடுடி ” அன்பரசு மனைவியை அதட்ட அவள் அமைதியானாள் .

அடுத்த இரண்டாம் நாள் சுடரொளி கிளம்பத்  தயாரானாள் .அவள் பிறந்து வளர்ந்த ஊர் , இடம் .அம்மா அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணான அவள் மகாராணியாய் இருந்து இந்த சொத்துக்களை ஆள வேண்டிய இடம் .இப்படி மனம் வெறுத்து எல்லாவற்றையும் விட்டு விட்டுக் கிளம்புகிறாள் .

” அப்பாவிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளம்மா ” சௌபாக்கியம் சொல்ல , மனமின்றி தந்தையின் அறைக்குள் சென்றாள் .

அவள் வாழ்வில் நடந்த சோகத்திற்கு பிறகு புவனேஸ்வரி அதிக நாட்கள் உயிரோடு இருக்கவில்லை .மகள் வாழ்வின் சோகம் போதாதென்று மனைவியின் மரணமும் சேர்ந்து உடம்பை பாதிக்க தமிழரசு படுத்த படுக்கையாகி விட்டார் .




சுடரொளி அப்பாவை சந்திப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை .காரணம் அவர் எப்போதும் இவளது திருமணத்தை பற்றியே பேசுவதால் .அவர் செயலாக இருந்த போது சுடரொளிக்கு திருமணம் முடித்தே தீருவேனென்று ஜாதகங்களும் கையுமாகவே அலைந்தார் .

சுடரொளி திருமணத்தை மறுத்து தற்கொலை வரை போக ,மிகவும் மனம் நொந்துவிட்டார் . கூடவே புவனேஸ்வரியும் மறைய , தனக்குள்ளேயே  ஒடுங்கி விட்டார்.

நிலையற்று அங்குமிங்கும் அலையும் விழிகளுடனும் பேச இயலாமல் குழறிய் நாக்குடனும் படுக்கையில் கிடந்த தந்தையை அதிக நேரம் பார்க்க முடியாமல் விரைவிலேயே அவர் அறையை விட்டு வெளியேறினாள் .

” சித்தப்பா அப்பாவை நீங்கள்தான் …”

” போதும் மேலே பேசாதே ! உனக்கு அப்பாவாவதற்கு முன் எனக்கு அண்ணன் அவர் .அவரை நன்கு கவனித்துக் கொள்ள எனக்குத் தெரியும் “

ஐந்து வருடங்களாக அவள் பார்க்க அண்ணனை குழந்தை போல் கவனித்துக் கொண்டிருப்பவர் . அவரிடம் சம்பிரதாயத்திற்கேனும் சொன்னது தவறுதான் .

” சாரி சித்தப்பா ” உடனே மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் .

பழைய ஞாபகங்களை தொலைக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் தன் பயணத்தை ஆரம்பித்தாள் சுடரொளி .




What’s your Reaction?
+1
69
+1
50
+1
5
+1
5
+1
5
+1
7
+1
9
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
trackback
1 year ago

[…] புதுச்சுடர் பொழிந்ததே […]

8
8
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!