mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 3

3

” மன்னிச்சிரும்மா , பட்டுன்னு அப்படி வார்த்தை வந்துடுச்சு ” இருவரின் முகத்தையும் பார்த்து விட்டு உண்மையான வருத்தத்தோடே சொன்னார் வனக்கொடி .

” விடுங்க பெரியம்மா .இல்லாதது எதையும் சொல்லஙில்லையே நீங்கள் …? “

” நான் பார்க்க வளர்ந்த பொண்ணு நீ .தங்கத் தாம்பாளமாய் தகதகன்னு இருப்பாய் .அந்த அழகுக்குத்தான் பெரிய இடத்து சம்மந்தம் தேடி வந்த்துன்னு நினைத்தோம் .ஆனால் இப்படி சாபம் போல் ஆயிடுச்சேம்மா உன் குடும்பம் “

மாதவி இதழ் மடித்து கடித்தாள் .ஆறுதல்தான் …தேறுதலென்று சொன்னதுதான் .ஆனாலும் அடிநெஞ்சை அறுத்தது .அதிலும் சாபமென்ற வார்த்தை …

” பொண்ணு சாபம் …பொண்ணுங்களுக்கு சாபம்னு நினைத்தால் …இது குடும்ப சாபமால்ல இருக்கு …”

மாதவியின் வேதனை அதிகரித்தது .

” கேரளாவில் ஒரு நம்பூதிரி இருக்கிறாராம் .அவரை போய் பார்த்துட்டு வர்றியாம்மா …? “

” எதுக்கு ..? “

” அவர் ரொம்ப வயதானவர்மா .நூற்றியிரண்டு வயதாம் .ஆனாலும் இப்போதும் இளவயது போல் இருப்பாராம் .பலமணி நேரம் நெருப்பு முன்னால் உட்கார்ந்து யாகமெல்லாம் செய்வாராம் …”

” சரி …அவரால் ….? “

” உன் போல் சாபம் வாங்கிய குடும்பத்தின் சாபத்தையெல்லாம் யாகத்திலேயே சரி செய்து விடுவாராம் .நீ உன் பிள்ளைகள் எல்ரோரையும் கூட்டிட்டு போய் அவர் காலில் விழுந்தேன்னு வை …”

” பெரியம்மா …போதும் …தயவுசெய்து மேலே பேசாதீர்கள் …சாபம் பெற்ற குடும்பமில்லை என்னுடையது ….”




வனக்கொடி பேச்சை நிறுத்தி மாதவியை விநோதமாக பார்த்தாள் .

” உன் நல்லதுக்குத்தான்மா சொல்றேன் .நீயும் வாழ வேண்டிய இளம் வயதில் தாலி அறுத்துவிட்டாய் .உன் மூத்த மகளும் உன்னை போலவே தாலியறுத்துட்டு நிற்கிறாள் . சரி பொண்ணுங்கள் தலையில் விழுந்த சாபம்னு நினைத்தால் …உன் மகன் ஊருக்குள் பெரியமனிதன் .என்னென்னவோ தொழில் செய்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான் .ஆனால் அவன் வாழ்க்கையும் உங்களுடையதை போலத்தான் ஆகிவிட்டது ….அவனும் பொண்டாட்டியை பறி கொடுத்துட்டு மொட்டை மரமாகத்தானே ….”

” வாயை மூடுங்க பெரியம்மா …” மாதவி கத்தியபடி எழுந்து நிற்க ,

” நீங்க கிளம்புங்க பாட்டி …” அதிகாரமான குரல் வனக்கொடியின் உடலில் நடுக்கத்தை கொண்டு வந்த்து .
மாதவியின் கத்தலுக்கு அசையாமல் அமர்ந்திருந்தவள் இந்த ஊடுருவும் குரலில் தானாக எழுந்து நின்றாள் .

பரந்த அந்த மிகப்பெரிய ஹாலின் வாசலை அடைத்தபடி உள்ளே வந்து கொண்டிருந்த பார்த்தசாரதி அவளுக்கு சிங்கத்தை நினைவுபடுத்தினான் .அகன்ற எட்டுக்களில் அந்த பெரிய அறையை அரை நிமிடத்தில் கடந்து அவளெதிரில் நின்றவன் ,தன் இடுப்பில் கை வைத்து நிமிர்ந்து நின்றான்

” என்ன ….? என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் …? ம் ….” கத்தலான குரலில்லை .ஆனால் அதிக ஆத்திரத்தை அடக்கி தெரியப்படுத்திக் கொண்டிருந்த உறுமல் குரல்.

” ஒண்ணுமில்லை பார்த்தசாரதி .உங்க குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம் வந்து கொண்டே இருக்கிறதே …அதுதான் அதற்கு பரிகாரமாக …”

” எங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் .நீங்கள் இப்போது கிளம்புங்கள் …”

” இல்லைப்பா நான் சொன்ன நம்பூதிரி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர் ….”

” வீட்டை விட்டு வெளியே போங்கள் என்றேன் ….” அழுத்தம் கூடியிருந்த அவன் குரல் வனக்கொடியை தானாக வாசல்புறம் நடக்க செய்த்து .ஆனால் முகத்திற்கு நேரான இந்த விரட்டலில் அவமானம் தாங்கியிருந்த்து அவளது வயோதிக முகம் .

” உனக்கென்ன தனியாக சொல்லவேண்டுமா …? ” பார்த்தசாரதியின் சீறலில் சந்திரா வாசல்புறம் ஓடியே போனாள் . என்ன செய்வதென தெரியாமல் கால் நடுங்க நின்றிருந்தவள் அவள் .

” வயதில் பெரியவர்கள் பார்த்தா ….இப்படி முகத்திற்கு நேராக பேசலாமா …? ” தயக்கமாய் மகனிடம் கேட்டாள் மாதவி

” எல்லாம் பேசலாம் .அடுத்தவர் மனம் புரியாமல் பேசுகிறார்கள் .நம்மை கலங்கடிப்பவர்களை நாம் கலங்கடிப்பதில் தவறில்லை அம்மா ….” என்றவனின் கண்கள் காட்டிய ஜாடையில் கலங்கிய முகத்துடன் மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்து விட்டிருந்த கங்கா இருந்தாள் .

செய்ய உத்தேசித்திருந்த வேலையை மறந்து அமர்ந்து விட்டிருந்த மகள் மனதை கனக்க வைக்க , ஆதரவாக மகளருகே சென்று தானும் அமர்ந்தாள் மாதவி .

” என்னம்மா ..உட்கார்ந்து விட்டாய் …? எழுந்து வேலையை பாரும்மா ….”

கங்கா உடனடியாக தெளிந்து எழுந்துவிட்டாளோ . இல்லை …தெளிவதாக காட்டிக் கொண்டாளோ …..மடமடவென மாடி ஏறிவிட்டாள் .மகளை பின் தொடர்ந்த பார்வையுடன் திரும்பிய மாதவியின் பார்வையில் மகன் பட்டான் .

அந்த ஹாலின் ஓரமாக சுவரோடு பதித்திருந்த மர அலமாரியிலிருந்து ஏதோ நோட்டுக்களை எடுத்து பார்த்தபடியிருந்தான் .மாதவி அவனையே பார்த்தாள் . இதோ …கங்காவின் சோகத்திற்கு குறைந்த்தில்லை பார்த்தசாரதியுடையது .இருவருமே வாழ்க்கை துணையை இழந்திருக்கிறார்கள் .

பெண்ணென்பதால் கங்கா அதனை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறாள் .ஆனால் பார்த்தசாரதியோ …ஆணென்பதால் தன் சோகத்தை காட்டிக் கொள்ளவில்லையா …அல்லது அவனுக்கு அதுபோல் சோகமே இல்லையா …?

தனது மற்ற பிள்ளைகளை போல் மாதவியால் பார்த்தசாரதியை எப்போதும் கணிக்க முடிந்த்தில்லை .தனது எண்ணங்களை பேச்சில் , முகத்தில் கூட அவன் வெளிப்படுத்தியவனில்லை .

வைத்தியநாதனை வயல்காட்டில் பாம்பு கடித்து விட்டது என பிணமாகத்தான் வீட்டில் கொண்டு வந்து போட்டார்கள். பார்த்தசாரதி அப்போது பத்து வயது சிறுவன் .இன்னமும் பால்குடி மறக்காத பச்சைக்குழந்தையாய் மாதவியின் மடியில் கைக்குழந்தையாய்  காவேரி .

திரண்ட சொத்துக்களோடும் , நிறைந்த பிள்ளை செல்வங்களோடும் , ஆபத்தான அழகோடும் இளம் விதவையாய் திக்கற்று நின்றாள் மாதவி .அபயம் தேடி சுழன்ற அவளது அகன்ற விழிகளில் அப்போது கூட இதோ இப்படித்தான் அலட்சியமாக இடுப்பில் கை தாங்கி நிற்கிறானே , இதே போலத்தான் அப்போதும் அந்த பத்து வயதிலும் நின்றபடி கீழே படுக்க வைக்கப்பட்டிருந்த தந்தையை பார்த்தபடி நின்ற  பார்த்தசாரதி தென்பட்டான் .




தாயின் கலங்கல் பார்வையை பார்த்ததும் வேகமாக அவளருகே வந்தவன் , ஆதரவாக அவள் கையை பற்றிக் கொண்டான் .இப்போதே தன் தோள் உயரம் வந்துவிட்டிருந்த மகனை , இதுபோல் ஆதரவாக அருகே உணரவும் மாதவியின் மனம் தைரியமானது .எதையும் சாதிக்கலாமென்ற எண்ணம் உண்டானது .

பிறகு மாதவி அனைத்து பொறுப்புகளையும் தன் மகனை முன்னே விட்டு பின்னிருந்தே சாதித்தாள் .பார்த்தசாரதியும் சிறுவன்தானே என அலட்சியமாக பார்த்த சொந்தங்களையும் , ஊர்கார்ர்களையும் தனது பார்வையிலும் , பேச்சிலும் பதற வைத்தான் .

தைரியமாக தன் மகனின் கையை பிடித்தபடி நடந்து போய் , வீட்டு தலைவனில்லாத தனது சொத்துக்களை விழுங்க துடித்தவர்களிடமிருந்து மீட்டாள் மாதவி .மடியிலும் , இடுப்பிலும் , கையிலும் பிள்ளைகளை சுமந்தபடி தனது சொத்துக்களை காத்தாள் .

பள்ளி படிப்பை முடித்ததுமே கோட்டையாய் தாயை , தங்கைகளை , சொத்துக்களை காக்க தலை மகனாய் வந்துவிட்டான் பார்த்தசாரதி .இரும்பு கோட்டையாய் இருந்தான் அவன் எல்லா விசயங்களிலும் ,உடலிலும் , மனதிலும் , முகத்திலும் கூட .அவன் கலங்கி நின்று மாதவி ஒருநாளும் பார்த்ததில்லை .

தந்தைக்கு கொள்ளி வைக்கும் போது லேசாக கலங்கிய விழிகள்தான் .அத்தோடு சரி …அவனது மனைவிக்கு கொள்ளி வைக்கும் போது கூட அந்த விழிகள் கலங்கவில்லை .ஒரு மாதிரி மரத்த தன்மையோடு முடுக்கிய பொம்மையாய் சடங்குகளை செய்தான் .கங்காவின் கணவன் இறந்த போதும் அதே பாவங்கள்தான் முகத்தில் .ஆனால் அவன் கை மட்டும் ஆதரவாக தங்கையை அணைத்திருந்த்து .நானிருக்கிறேனென …அன்று அன்னையை தாங்கி நின்றானே …அது போல் தங்கையை தாங்கியிருந்தான் .இப்போதும் தாங்குகிறான் .

தங்களை… குடும்பத்தை தாங்கி நிற்கும் மகனுக்கு தானும் சிறப்பாக செய்ய  வேண்டுமேயென ஆவலாதியில்தான் மாதவி மகனுக்கு பெண் பார்த்தாள் . பார்த்தசாரதி திருமணத்திற்கு மறுத்தான் .முதலில் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடியட்டுமென்றான் .ஆனால் மாதவி இந்த விசயத்தில் முதன் முதலாக மகனை எதிர்த்து பேசினாள் .

அவனது தங்கைகளுக்கு திருமணத்தின் போது தந்தை , தாய் ஸ்தானத்தில் இருந்து கன்னிகாதானம் செய்து கொடுக்க , அவன் மனைவியோடு இருக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தினாள் .பார்த்தசாரதியும் தலையாட்ட , ஆசையோடு தன் மகனுக்கு மனைவியை ,தனக்கு மருமகளை தேடினாள் .

சுனந்தா  அவளது தூரத்து உறவுப்பெண் .ஒரு சொந்தக்கார்ர் மூலம் வந்த வரன் .சென்னையில் எம்.இ படித்து வேலையில் இருந்தாள் .பார்த்தசாரதியின் திரண்ட சொத்துக்கள் அவர்களை கவர விரும்பி வந்து மணம் முடிக்க கேட்டனர் .மிகுந்த அழகோடும் , நிறைய படிப்போடும் இருந்த சுனந்தாவை மாதவிக்கும் பிடித்து போக அவர்கள் திருமணம் எந்த தடங்கலுமின்றி நடந்த்து .

ஆறு மாதங்கள் இருவரும் சந்தோசமாக இருந்தனர் .சுனந்தாவினால் இந்த கிராமத்து வாழ்க்கையோடு ஒன்ற முடியாமல் அடிக்கடி சென்னைக்கு பெற்றோரிடம் போய்விடுவாள் .மாதவிக்கு இது நிரடியபடி இருந்தாலும் , கவலைப்பட வேண்டிய பார்த்தசாரதி பேசாமல் இருக்க அவளும் மௌனமாகவே இருந்துவிட்டாள் .

ஆனால் அப்படி இருந்த்துதான் தப்பென்பது போல் , அடிக்கடி பெற்றோரை பார்க்க போன சுனந்தா அங்கே அப்பா , அம்மா தம்பியோடு ஊர் சுற்ற போன இடத்தில் கார் ஆக்ஸிடென்டில் பலியானாள் .இப்போதும் அதிகம் அதிர்ந்த்து மாதவிதான் . போனில் வந்த செய்தியை அமைதியாக கேட்ட பார்த்தசாரதி ,தன் வீட்டினரிடம் தெளிவாக சொல்லிவிட்டு சென்னை போனான் .

போஸ்ட்மார்ட்டம் பார்சலாக மனைவியின் உடலை தூக்கி வந்து வீட்டு வாசலில் பத்து நிமிடம் வைத்திருந்து விட்டு தூக்கி போய் கொள்ளி வைத்து வந்தான் .துளி கலக்கம் காட்டவில்லை அவன் முகம் …சிவந்திருந்த அந்த கண்கள் மட்டுமே சோகம் சொல்லிக் கொண்டிருந்தன.

பிறகு ஆறுமாத்த்தில் கங்காவிற்கு திருமணம் முடிக்க , அவளோ ஒரே மாதத்தில் கணவனை  பறிகொடுத்து விட்டு பிறந்த  வீட்டிற்கே திரும்பி வந்தாள் .சாகசம் செய்ய ஆசைப்பட்டு நண்பர்களுடன் குற்றால மலை ஏறிய  அவளது கணவன் கால் வழுக்கி அருவியில் விழுந்து உயிரை விட்டு விட்டான் .

ஓர் இரவு முழுவதும் ஆட்களுடன் சேர்ந்து மெயின் அருவியின் பொங்குமாக்கடலில் மூழ்கி அடியில் கிடந்த உடலை தூக்கி வந்தான் .அப்போதும் தங்கையை , தாயை தன் தோள்களில் தாங்கினானே தவிர, தான் சாய ஒரு தோள் தேடவில்லை .




இதோ இப்போது கூடவனக்கொடியின் பேச்சில்  மனக்கஷ்டத்தில் தோள் சாய்ந்தாளே கங்கா , அதே அளவு வேதனைதானே  பார்த்தனுக்கும் . ஆனால் அவன் ஆதரவு தேடவில்லையே ….

மனம் நெகிழ மகனை பார்த்தபடி இருந்த மாதவியின் தாய்மனம் மகனின் தலை கோத விழைந்த்து .தாயுணர்வு தூண்ட , மகனை நோக்கி நடந்தாள் .எப்போதும் போல் தனது பாணியில் இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி நின்றபடி முன்னால் டேபிளில் இருந்த அந்த நோட்டை பார்த்தபடி நின்றிருந்தான் .

திமிறி நிற்கும் ஆண் களிறை நினைவுறுத்திய அவனது தோற்றமே அருகில் நெருங்காதே என சொல்லாமல் சொல்ல மகனருகில் வந்து தயங்கி நின்றவளை நிமிர்ந்து பார்த்தான் .தாயின் கண்களுக்குள் என்ன கண்டானோ …முகத்தில் சிறு மென்மை கொணர்ந்தான் .

” ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா .நீங்க போங்க …”

கலக்கத்தோடு பார்த்த அன்னையின் தோளை பற்றி திருப்பிவிட்டான் . இப்போது ஆறுதல் இடம் மாறிவிட , மன சமாதானத்தோடு திரும்பினாள் மாதவி .

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!