மகாபாரதக் கதைகள்/நாயினும் கடையேன் நான் (சிறுகதை 1)

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் — வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான்.

ஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ஏதாவது சோறு கிடைக்காதா என்று காத்துக்கொண்டு இருந்தேன்.

என்னைப் பார்த்ததும், “அம்மா, நிலாக் கதை ஆணாம். நாய்க் கதை தொல்லு… அப்பத்தான் நான் தாப்பிவேன்..” என்று மழலையில் அடம் பிடித்தது குழந்தை.





“எந்த நாயைப் பத்தி அம்மா சொல்லறது?” என்று யோசித்தாள் அம்மா.

“இந்த நாயைப் பத்தி…” என்று என்னைப் பார்த்துக் கையைக் காட்டியது குழந்தை.

“இதப் பத்தியா? இந்த சொறி நாயைப் பத்தியா? இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா? இது தினோம் தெருப்பொறுக்கித் தின்னும். அவ்வளவுதான்.” உதட்டைப் பிதுக்கினாள் அம்மா.

“போம்மா… உனக்கு நாயைப் பத்தி ஒண்ணுமே தெல்லே! நாயே, நாயே! நீயே உன்னப் பத்தி கதை தொல்லு!” என்று என்னைப் பார்த்துக் கேட்டது மழலையில் மிழற்றியது அம்மகவு.

என்னையும் மதித்து இந்தக் குழந்தை கேட்கிறேதே!

“சொல்றேன் கண்ணு! சொர்க்கத்துக்குப் போன நாயின் கதையைச் சொல்றேன்!” என்று உற்சாகமாக் குரல் எழுப்பினேன் நான்.

“சனியனே! தினம் உனக்குச் சோறு போட்டா, குழந்தையைப் பார்த்தா குலைக்கறே!” என்று என்னை விரட்டினாள் அம்மா. எனது சொற்கள் அவளுக்குக் குரைப்பாகத்தானே கேட்கும்! என் மொழியை அறிவாளா அவள்?

மேலும் விரட்டவே, இன்று பட்டினிதான் என்று நினைத்தபடி தள்ளிச் சென்று குப்பை மேட்டில் படுத்துக்கொண்டேன் நான்.

நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல விரும்பிய கதை, என்னைப் போன்ற ஒரு நாயின் கதை, சுவர்க்கத்திற்கே சென்ற என் முன்னோர் நாயின் கதை என் மனதில் விரிந்தது. அதை நீங்களாவது கேளுங்களேன்!…

…”அண்ணா! கண்ணன் நம்மை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான், அண்ணா!” என்று தன் எதிரே நின்ற அர்ஜுனனை ஏற இறங்கப் பார்த்தார் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர். அவர் மனதிலும், முகத்திலும் இருள் சூழ்ந்தது. அது தூரத்தில் நின்றுகொண்டிருந்த என் முன்னோரான ஒரு நாயின் காதிலும் விழுந்தது.

“என்ன, கண்ணன் போய்விட்டானா?” என்று அப்படியே பதறிப்போய் ஓடிவந்தான் பீமன். அவன் காதில் சுற்றிக்கிடந்த முப்புரி நூலைக்கூட அவன் அவிழ்க்கவில்லை.

பாஞ்சாலி, நகுலன், சகாதேவன் இவர்களும் அந்த அவலச் செய்தியைக் கேட்டு அப்படியே அவரை அணுகினார்கள்.

அனைவரையும் மாறி மாறி நோக்கினார் தர்மபுத்திரர்.

“கலியுகம் வந்துவிட்டது! அதைக் கண்ணன் மறைந்த செய்தி மட்டுமல்ல, நீங்கள் வந்து நிற்கும் கோலமுமே தெரிவிக்கிறது!” என்று தர்மபுத்திரர் வருத்தத்துடன் சொன்னது என் முன்னோர் நாயின் காதிலும் விழுந்தது. காதுகளை உயர்த்திக்கொண்டு மேலே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டது.

“நாங்கள் வந்த விதமா?” அனைவரிடமிருந்தும் கேள்வி எழுந்தது.

“ஆமாம். நிச்சயமாக…” என்ற தர்மபுத்திரர் தொடர்ந்தார். “பீமா, நீ பல் துலக்குவதைப் பாதியில் நிறுத்திவிட்டு, காதில் சுற்றிய முப்புரி நூலுடன் வந்திருக்கிறாய்! சகாதேவனோ, தனது சூரிய நமஸ்காரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டான். பாஞ்சாலியோ, மாதவிடாய் என்பதையே மறந்துவிட்டு ஓடி வந்திருக்கிறாள். இதற்கு மேலும் என்ன சொல்ல? நாம் இப் பூவுலகை விட்டு நீங்கும் தருணம் வந்து விட்டது!”

தர்மவான்களான இவர்கள் பூவலகை விட்டு நீங்கப் போகிறார்களா! அப்படிப் பட்ட பூவுகில் தனக்கு என்ன வேலை என்று நினைத்துக்கொண்டது என் முன்னோர் நாய்.

“என்ன சொல்கிறீர்கள் அண்ணா?” என்று கேட்டான் பீமன்.

“பீமா! நமது தர்மங்களும், நெறிகளும் கலி யுகத்திற்குப் பொருந்தா. அதர்மமே தர்மம் என்று ஆகிவிடும், மண், பெண், பொன் என்ற இந்த மூன்றுக்குமே முதலிடம் கொடுக்கப்படும். எனவே, இக்கலி யுகத்தில். நம்முடைய தர்மங்கள் தவறு என்று தூற்றப்படும். கலிபுருஷன் அப்படி எல்லோரின் மதியையும் மயக்கிவிடுவான். நாம் இங்கு இனிமேலும் இருந்தால் நமது மதியும் மயங்கி மங்கிப்போகும். நமது நாட்டை அர்ஜுனனின் பேரன் பரீக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்புவதே சாலச் சிறந்தது.” என்று தர்மபுத்திரர் அறிவுரை வழங்கியது என் முன்னோர் நாயின் காதிலும் விழுந்தது.

உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தது என் முன்னோர் நாய்.

“ஏதேது, வம்பாக இருக்கிறது. நானும் இங்கு இருக்கக் கூடாது. இவர்களுடன் கிளம்பிவிட வேண்டியதுதான். இல்லாவிட்டால் நமது இயல்பான தர்மமான நன்றி உணர்வை இக்கலி புருஷன் பறித்துக்கொண்டு விடுவான். நமது இனமும் நன்றியுள்ள நாய் இனம் என்ற பெயரை இழந்துவிடும்.” என்று முடிவு செய்து கொண்டது.

“எங்கே அண்ணா செல்வது? இந்த மனித உடலை விட்டால்தானே இப்புவியை விட்டு நீங்க இயலும்?” என்று கேட்டான் பீமன்.

“சகாதேவா, நீதான் சாஸ்திரம் அறிந்தவன் ஆயிற்றே! உன் அண்ணன் கேள்விக்குப் பதில் சொல்லு.” என்று பணித்தார் தர்மபுத்திரர்.

“அண்ணா, தாங்கள் இருக்கும்போது…” என்று இழுத்த சகாதேவனைப் பார்த்து மேலே சொல்லு என்பதுபோல தலையை அசைத்தார்.






என் முன்னோர் நாயும் காதுகளை நிமிர்த்தி, சகாதேவன் சொல்வதைக் கேட்கத் தயார் ஆகியது.

“அண்ணா, இமய மலையைத் தாண்டி வடக்கில் மகாமேரு மலை இருக்கிறது. அதன் உச்சியை அடைந்தால், இப்பூத உடலுடனேயே விண்ணுலகை அடையலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.” என்று தனக்கே உரிய பணிவுடன் பகிர்ந்தான் சகாதேவன்.

“மகாமேரு மலையில் ஏறுவதா? அது முடியுமா?” என்று வியப்புடனும், ஐயத்துடனும் கேட்டனர் அனைவரும்.

என் முன்னோர் நாய்க்கும் அந்த அச்சம் இருந்தது. ஆயினும், தர்மபுத்திரர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தது.

“திடமனதும், தான் என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டால் அது அடையக்கூடிய ஒன்றுதான்!” என்று அமைதியாக தர்மபுத்திரர் சொன்ன பதில் என் முன்னோர் நாய்க்கு நிறைவைத் தந்தது.

“இயலாத ஒன்றை தர்மபுத்திரர் என்றும் சொல்லமாட்டார். எனவே, நான் இவர்களைப் பின்தொடர்வேன். நானும் தர்மாத்மாக்களான இவர்களுடன் முதல் நாயாக விண்ணுலகை அடைவேன்.” என்று உறுதி (திட சங்கல்பம்) எடுத்துக்கொண்டது.

அரசை பரீக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டு, தென்மேற்குத் திசையை நோக்கி நடக்கத் துவங்கினார் தர்மபுத்திரர்.

“அண்ணா! இமயம் வடக்கில் அல்லவா…” என்ற பீமனிடம், “துவாரகை சென்று, கண்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுச் செல்வோம்!” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.






இதுவரை நான் துவாரகையைப் பார்த்தே இல்லையே, கண்ணனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு, துவாரகையையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் போகிறதே என்று தர்மபுத்திரருக்கு மனதில் நன்றி செலுத்தியது என் முன்னோர் நாய்.

ஆனால் துவாரகையைக் காணச் சென்ற எழுவருக்கும் — என் முன்னோர் நாயையும் சேர்த்துதான் சொல்கிறேன் – ஏமாற்றமே காத்திருந்தது. கண்ணனில்லாமல், அவனது இடைக்குலமே அழிந்துபோனபின் நான் ஏன் இருக்கவேண்டும் என்று ஏங்கித் தவித்த துவாரகையை அள்ளி விழுங்கி விட்டான் வருணன். துவாரகை இருந்த இடம் கடலாக மாறி இருந்தது.

ஏமாற்றத்தை மென்று விழுங்கிவிட்டு, கண்ணனுக்கும், அவனது இடைக்குலத்திற்கும் இறுதிச் சடங்குகளைத் துவாரகையை விழுங்கிகிய கடல் நீரை எடுத்தே செய்துவிட்டு, மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினர் எழுவரும்.

தங்களுடன் தொடர்ந்து வரும் என் முன்னோர் நாய் பஞ்சபாண்டவர், மற்றும் பாஞ்சாலியின் கண்ணில் படாமல் இல்லை. அவ்வப்பொழுது தாங்கள் உண்ணும் உணவில் ஒரு சிறு பகுதியை என் முன்னோர் நாய்க்கும் அளித்து வந்தனர். இமயமலையில் ஏற ஆரம்பித்தனர். திட உறுதிபூண்ட என் முன்னோர் நாயும் அவர்களைப் பின் தொடர்ந்தது.

என் முன்னோர் நாய் அவர்களைத் தொடர்வது பீமன் முதல் பாஞ்சாலி வரை, ஐவரின் மனதையும் உறுத்தத்தான் செய்தது. ஏன் இந்த நாய் இப்படி விடாப்பிடியாகத் தங்களைத் தொடர்கிறது என்று மனதில் கேட்டுக் கொண்டாலும், வெளிப்படையாக ஒன்றும் பேசவில்லை. தர்மபுத்திரரே அதைப்பற்றி பேசாதபோது தாங்கள் பேசுவது முறையாகாது என்றே நினைத்தார்கள்.

இமய மலையைத் தாண்டியதும் சமவெளியான பெரிய பாலைவனப் பகுதி தென்பட்டது. நடக்க இயலாது கால்கள் சோர்ந்தன. சில சமயம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. தனக்கே இல்லாதபோது நாய்க்குக் கொடுக்க முடியுமா? முடியும் என்பதுபோல தர்மபுத்திரர் தன் பங்கு உணவிலும் தண்ணீரிலும் சிறிது என் முன்னோர் நாய்க்குக் கொடுத்தார். அதை உண்டுவிட்டு, வாலை ஆட்டித் தன் நன்றியைத் தெரிவித்தது என் முன்னோர் நாய்.

தர்ம புத்திரர் செய்கிறாரே என்று மற்றவர்களும் அவ்வப்போது தங்கள் பங்கு உணவிலும், தண்ணீரிலும் சிறிது கொடுத்தார்கள். பீமன் மட்டும் அதைச் செய்யவில்லை. ஆயினும், அவ்வப்போது என் முன்னோர் நாய் களைத்துப் பின்வாங்கும்போது சிறிது நேரம் அதைத் தூக்கிச் செல்வான்.

கடைசியில் வடக்குக் கோடியில் மகாமேரு மலை தென்பட்டது. விடிவு பிறந்தது என்ற மகிழ்ச்சியுடன் முன்னேறினர்.

“இனிமேல் நமக்குத் தேவையில்லாத சுமை வேண்டாம், நமது அரச அணிகலன்களைத் அவிழ்த்துத் தூர எறிவோம்!” என்று அறிவித்தார் தர்மபுத்திரர்.

அனைவரும் அப்படியே செய்தனர். தனது ஈட்டியைத் தரையில் வைத்தார்.

“சகாதேவா, உனது ஓலைச் சுவடிகளைத் தூக்கி எறி! நகுலா, உனது ஒப்பனைப் பொருள்கள் உனக்கு உதவாது; அர்ஜுனா, காண்டீபம் எதற்கு? பீமா, உன் கதையும் உன்னைவிட்டுப் பிரியவேண்டும்.”

தர்மபுத்திரர் சொற்படி அனைவரும் செய்தனர். என் முன்னோர் நாயும் பின்னங்காலால் தனது கழுத்துப்பட்டையைக் கழட்டிக் கடாசியது.

“பாஞ்சாலி…” என்று அவளை நோக்கினார் தர்மபுத்திரர்.

வேண்டா வெறுப்பாக, ஒவ்வோன்றாகத் தனது நகைகளைக் கழட்டினாள் அவள்.

மேருமலையில் ஏறும்போது அனைவருக்கும் மூச்சு முட்டியது. மிகச் செங்குத்தான பகுதியில் ஏறுவது மிக, மிகக் கடினமாக இருந்தது. இடுப்பளவு உயரமான கல்லில் ஏறும்போது பீமன் ஒவ்வொருவரையும் தூக்கிவிட்டான்.

அவ்வளவு உயரமான கல்லில் என் முன்னோர் நாயால் தாவி ஏற முடியவில்லை.

“பீமா! அந்த நாயையும் தூக்கிவிடு!” என்று தர்மபுத்திரர் சொன்னதும் பாஞ்சாலிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“என்ன இது? ஒரு நாய்க்கு இத்தனை பரிவா? என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா? இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும்? விட்டுவிட்டு வாருங்கள்!” என்று கத்தினாள். உடனே அவளது உயிர் பிரிந்து கீழே விழுந்தாள்.

அனைவரும் திகைத்துப்போய் நின்றனர்.

ஒன்றும் பேசாமல் தர்மபுத்திரரே என் முன்னோர் நாயைத் தூக்கிவிட்டுவிட்டு, மேலே செல்ல ஆரம்பித்தார். மற்றவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது செய்கைக்கு விளக்கம் தேடினர்.

சிறிது நேரம் சென்ற பின்னர், அவரே அமைதியைக் கலைத்தார். “உயிர் உள்ளவரைதான் அவளுக்கு நமது பாதுகாப்பு தேவையை இருந்தது. அங்கு கிடப்பது பாஞ்சாலியின் கூடுதான். அவளது ஆன்மா நமக்கு முன்னரே விண்ணுலகம் சென்று விட்டது. நமது சங்கல்பமோ இப்பூத உடலுடன் விண்ணுலகம் அடைவது. எனவே, பாஞ்சாலியைப் பற்றி கவலைப்படாமல் வாருங்கள்.”

பாஞ்சாலி இறந்ததற்கு காரணம் என் முன்னோர் நாய் தான் என்று நினைத்தனர். தர்மபுத்திரர் கொடுத்த விளக்கம் என் முன்னோர் நாய்க்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், பீமன் முதல் சகாதேவன் வரை மற்ற நால்வருக்கும் என் முன்னோர் நாய் மீது ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது.

மகாமேரு மலைமேல் ஏற ஏற, நாள்கள் செல்லச் செல்ல, உணவுவம் தண்ணீரும் கிடைப்பதும் குறைய ஆரம்பித்தது. எனவே என் முன்னோர் நாய்க்கு உணவு பங்கு கொடுக்க தர்மபுத்திரரைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை.

(தொடரும்..)



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

5 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

5 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

5 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

5 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

9 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

9 hours ago