விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் டெக்னிக்குகளில் புதுமை காட்டி ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிறுவனம் போத்தீஸ். ஜவுளி வியாபாரத்தில் ஜாம்பவான்களாகத் தடம் பதித்தவர்கள் தற்போது தங்க நகை வியாபாரத்தில் களம் இறங்கியுள்ளனர். 1926-ம் ஆண்டு போத்தி மூப்பனார் எடுத்த முயற்சியே இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் போத்தி. ஊர் முழுவதும் தறி நெய்வது பிரதான தொழிலாக இருந்தபோது, தன் ஊரில் நெய்த துணிகளை, கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலை சிறிய அளவு முதலீட்டில் போத்தி மூப்பனார் தொடங்கியுள்ளார்.
அந்த வியாபாரம் சிறப்பாக நடக்க, பத்தாம் வகுப்பு வரை படித்த போத்தியின் மகன் சடையாண்டி, துணிக்கடை ஒன்று திறக்கும் எண்ணத்தை முன்வைத்துள்ளார். அந்த நேரம் வில்லிபுத்தூரில் பேருந்து நிலையம் உதயமானது. பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் வியாபாரம் சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு 1977-ம் ஆண்டு போத்தீஸ் என்ற துணிக்கடை திறக்கப்படுகிறது.
“அடுத்தடுத்த தலைமுறையினர் பிசினஸுக்குள் வந்தாலும், எல்லாரும் கூடிப்பேசிதான் எல்லா முடிவுகளும் எடுப்போம். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான்காம் தலைமுறை யில் 8 பேருக்கு மேல் இப்போது பிசினஸ் பணிகளில் இறங்கி யுள்ளோம். ஆளுக்கொரு பிரிவில் கவனம் செலுத்துகிறோம். அதனால் எங்களுடைய பிசினஸில் தலைமுறை இடைவெளியோ, தலைமுறைக்கான கருத்து வேறுபாடுகளோ வருவது இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், இணையதளப் பக்கத்தில் மற்ற பிராண்டுகள் காலடி எடுத்து வைக்கும் முன்னே நாங்கள் அதில் வெற்றியைத் தொட்டோம்.
மற்றோர் உதாரணம், கொரோனா ஊரடங்கை சமாளித்தது. கொரோனா நேரத்தில் ஊரடங்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எங்களுடைய நிறுவனத்தில் ஒன்பதாயிரம் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். எந்தப் பணி நீக்கமும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதால் புதுப்புது ஐடியாக்களை நான்காம் தலைமுறையினர் முன்வைத்தோம். அப்படி உருவானதுதான் வாட்ஸ்அப் மூலம் ஆடைகள் விற்பனை செய்வது. வாடிக்கையாளர்கள் எங்களின் விற்பனைப் பிரிவில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டால் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஆடைகளைக் காண்பித்து, அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யலாம் என்ற வியாபார யுக்தியைக் கையாண்டோம்.
போத்தீஸ் கார்டு, தள்ளுபடி, கிஃப்ட் வகைகள், தீபாவளி ஸ்வீட் என எங்களின் வியாபார நுணுக்கங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தாலும், வாடிக்கை யாளர்களைத் தக்கவைப்பது மட்டுமே எப்போதும் எங்களுடைய இலக்காக இருக்கிறது” என்ற வருணிடம் நகைக் கடை தொடக்கம் பற்றிக் கேட்டோம்.
“அது எங்கள் நிறுவனத்தின் மற்றொரு புது முயற்சி. ஜவுளி வியாபாரத்தில் தரமானது என்ற பெயரை மக்களிடம் பெற்ற எங்களால், தங்க நகை வியாபாரத்திலும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தை திருநெல்வேலியில் நடைமுறைப்படுத்தினோம். சினிமா செலிபிரிட்டிகள் விளம்பரம் செய்வதைவிட, இத்தனை ஆண்டுக் காலம் தரத்தை மட்டுமே மக்களுக்குக் கொடுத்த அப்பா அந்த விளம்பரத்தில் நடித்தால் மக்கள் மனதில் கூடுதல் நம்பிக்கை வரும் என்று தோன்றியது. விளம்பரத்தில் அப்பா நடிப்பதற்கு முன்பு நாங்கள் எல்லோரும் சேர்ந்து பல்வேறு ஆலோசனைகள் செய்தோம். அதன் பின்பே அப்பா நடித்தார். நிறைய பாசிட்டிவ் கமென்ட்கள் வந்தன. அதே நேரம் சில கேலி கிண்டல்களும் வரவே செய்தன. ஆனால், நாங்கள் அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுடைய இலக்கை நோக்கி நாங்கள் சுழன்றுகொண்டே இருக்கிறோம். அடுத்தடுத்து புது முயற்சிகளுடன் போத்தீஸ் ஆலமரமாக நிச்சயம் விரியும்” என்று முடித்தார்.
புது முயற்சிகள் தொடரட்டும். மாற்றம் ஒன்றே மாறாதது!