இத்தல பெருமாளை வேண்டினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் வாய்ப்பு ஆகியன கிட்டும் என்பது நம்பிக்கை. விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவர். குடும்ப நலம், திருமண வரம், குழந்தைப் பேறு ஆகியவற்றுக்காகவும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் காவல் தெய்வமாக கருப்பண்ண சுவாமி (பதினெட்டாம் படியான்) விளங்குகிறார். அழகர் கோயில் தோசை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. ராக்காயி அம்மன் கால் சிலம்பில் இருந்து மலைக் குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக சிலம்பாறு (நூபுர கங்கை) பாய்ந்து கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
அழகர் ஆற்றில் இறங்குதல்: திருமால் இவ்வுலகை அளக்க தனது திருவடியைத் தூக்கினார். அப்போது திருமாலின் தூக்கிய திருவடிக்கு பிரம்மதேவர் பூஜைகள் செய்தார். அப்போது திருமாலின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதில் இருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. இது புனித தீர்த்தமாகக் கருதப்படுவதால் இந்த தீர்த்தத்தில் அமர்ந்து சுபதஸ் மகரிஷி திருமாலை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார்.
அச்சமயத்தில் மகரிஷியைக் காண துர்வாச முனிவர் வந்தார். திருமால் நினைப்பில் இருந்த மகரிஷி துர்வாச முனிவரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர், மகரிஷியை தவளையாக (மண்டூகம்) மாறும்படி சபித்தார். தனது நிலையை எடுத்துக் கூறிய மகரிஷி, தனக்கு சாப விமோசனம் அருளும்படி துர்வாசரை வேண்டினார். அதற்கு துர்வாசர், “வேதவதி என்ற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோவிலில் இருந்து பெருமாள் வரும் சமயத்தில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார்.
அழகர் கோவிலில் இருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை அணிந்து கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். சித்திரை பௌர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் கோவிலில் இருந்து மதுரை வந்து மீண்டும் கோயில் திரும்பிச் செல்லும் வரை அழகர் 7 வாகனங்கள் மாறுகிறார்.
இக்கோயிலின் ராஜ கோபுரம் முழுமை அடையவில்லை. ஆரிய மண்டபம், கல்யாண சுந்தரவல்லி தாயார் சந்நிதி, திருக்கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளன.
மீனாட்சி கல்யாணத்துக்கு மதுரை வரும் கள்ளழகர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் புறப்படுகிறார்.
கோயில் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவற்றைக் கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருவிழாக்கள்: சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண பல்லாயிரக்கணக்கானோர் கூடுவர்.
ஆடிப் பெருந்திருவிழா, ஐப்பசி தலை அருவி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில வருடப் பிறப்பின்போது பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.