15
” இன்று உனக்கு டயமெனட் செக்சனில் டியூட்டி .மேலே வா” காலை உள்ளே வரும் போதே விஸ்வேஸ்வரன் சொல்லி விட்டு லிப்டில் ஏறிப் போக , கையில் எடுத்திருந்த வேலையை வேறு விற்பனை பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு மாடிப்படி ஏறினாள் கமலினி .
அவளுக்கும் அன்று காலையிலிருந்தே விஸ்வேஸ்வரனை உடனே சந்திக்க வேண்டுமே …எப்படி …என்ன செய்வது என்ற யோசனைதான் .நான்காவது மாடியிலிருந்து ஏழாவது மாடிக்கு மூச்சு வாங்க வந்து நின்றவளை முறைத்தான் அவன் .
” லிப்டில் வருவதற்கென்ன ? எதற்கு இந்த கஷ்டம் ? “
கஸ்டமர்களுடன் போகும் போதோ…கையில் பாரங்களுடன் ஏறும் போதோ மட்டுமே கடைப் பணியாளர்கள் லிப்ட் உபயோகிக்க வேண்டுமென்பது அங்கே விதி .இவன் விதித்ததுதானே …தெரியாதா என்ன ,? மனம் சுணங்கினாலும் முகம் மாறவில்லை கமலினிக்கு.அவள் விழிகள் விஸ்வேஸ்வரனிடமே பதிந்திருந்தன .அவனிடம் ஏதோ சேதி கேட்கவோ …சொல்லவோ விழைந்தன .
” இந்த செட்டை சுழட்டி விடு .இன்று உனக்கு டைமன்ட் செட் .உள்ளே வா தருகிறேன் …” விஸ்வேஸ்வரன் அவனது அறைக்குள் நுழைந்தான் .தனது கழுத்தில் இருந்த தங்க நெக்லசின் கொக்கியை சுழட்டியபடி அவன் அறைக்குள் போனாள் .
கொக்கியை சுழட்டி நெக்லசை அவன் நீட்டிய கருநீல வெல்வெட் டிரேயில் பத்திரப்படுத்தினாள் . தன் பின்னிருந்த நம்பர் லாக் லாக்கரில் நம்பரை பொருத்தி திறந்து ஒரு நகை பெட்டியை திறந்து அவளுக்கு நீட்டினான் .
” நியூ மாடல் .போட்டுக் கொள் …”
பெட்டியை திறந்த கமலினியின் விழிகளும் விரிந்தன .” வாவ் …அழகாக இருக்கிறது சார் …” நகையை வருடினாள் .
அந்த நெக்லசின் ஒரு பாதியில் தங்கத்தில் பூக்களும் கொடிகளும் நிறைந்திருக்க …மற்றொரு பாதியில் அதே வடிவங்கள் வைரக்கற்களில் பதிக்கப்பட்டிருந்தன . ஒரு புறம் தங்கமும் , மறுபுறம் வைரமுமாக அந்த அணிகலன் மிக அழகாக இருந்த்து .
மெல்லிய தலையசைப்புடன் அவளது பாராட்டை ஏற்றுக் கொண்டான் ” எனது ஐடியாதான் . பிடித்திருக்கிறதுதானே ? போட்டுக் கொள் .”
” உங்க ஐடியா சூப்பர் சார் .எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இது ” ஆவலோடு கொக்கியை சுழட்டி கழுத்தில் மாட்டிக் கொண்டவளுக்கு பின்னால் இருந்த முழு உயர கண்ணாடியைக் காட்டினான் .கமலினி ஆர்வத்துடன் கண்ணாடி முன் போய் நின்று பார்த்தாள் . தானும் எழுந்து வந்து அவளருகே நின்று கண்ணாடியில் அவளை பார்த்து திருப்திபட்டுக் கொண்டான் .
” குட் .நான் நினைத்ததை விட இந்த நகை உனக்கு ரொம்ப நன்றாகவே பொருந்தியிருக்கிறது கமலினி …” விஸ்வேஸ்வரனின் கண்கள் கமலினியின் கழுத்தை முகத்தை வருடி மெச்சின .
என்னை நினைத்து நகையை வடிவமைத்தானா …கமலினியினுள் ஏதோ ஓர் சுருக் உணர்வு ஏற்பட ,ஆடசேபம் மின்னும் கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் இரு கைகளையும் உயர்த்தி சரண் காட்டினான் .
” நகையை அமைத்து முடித்ததும் ஒரு மாடலாக உன் கழுத்தில் மனதிற்குள் அணிவித்து பார்த்தேன் கமலினி .கற்பனையை விட நிஜத்தில் நகையின் அழகு உன் கழுத்தில் அப்பட்டமாக தெரிகிறது .அவ்வளவுதான் . வேறு ஏதாவது நினைத்துக் கொண்டு சண்டை எதுவும் போட்டு விடாதே .இப்போது உன்னோடு சண்டை போட நான் தயாரில்லை . எனக்கு நீ வேண்டும் “
அவன் பேச்சு முடிந்த்தும் அவள் இடுப்பில் இரு கை வைத்து நேரடியாக அவன் விழிகளை பார்த்து முறைக்க , விஸ்வேஸ்வரன் நாக்கு நுனியை பற்களுக்கிடையே வைத்து கடித்தான் . மன்னிப்பு போல் காது நுனியை விரலால் பற்றிக் கொண்டான. .
” ஹேய் சாரிப்பா .தப்பு தப்பாக பேசுகிறேனில்லையா …கொஞ்சம் டென்சன் .அதுதான் …இந்த வார்த்தை பிசகல் . எனக்கு நீ வேண்டுமென்றதன் அர்த்தம் உன் ஆலோசனை வேண்டும் .அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை .இதற்கென கோபித்துக் கொண்டு வேலையை விட்ட்டுமா என்று மிரட்டாதே “
” ஓ …அப்போது நான் இப்படி அடிக்கடி உங்களை மிரட்டுகிறேன. அப்படித்தானே ? “
” போச்சுடா …டேய் விஸ்வா உனக்கு இன்று நேரம் சரியில்லைடா .வாயை வைத்துக் கொண்டு சும்மா இருடா …”தலையில் தட்டி தன்னை தானே நொந்து கொள்பவனை இதழ் பிதுங்கும் சிரிப்புடன் ரசிப்பாய் பார்த்தாள் .
சட்டென அவளது ரகசிய சிரிப்பை கவனித்து விட்டவன்”ஹேய் கமலி நீ சிரித்தாயா என்ன ? அப்போது உனக்கு கோபம் இல்லையா ..? அதற்கு சான்ஸ் இல்லையே …ரொம்ப ஓவராக உளறிக் கொட்டியிருக்கிறேனே …” தாடை தடவி யோசித்தவனை இதழ் விரிந்த சிரிப்புடன் ஏறிட்டவள் தலையசைத்தாள் .
” கோபம் இல்லை சார் .சொல்லுங்கள் . என்ன வேண்டும் ? “
” முதலில் உன்னை சொல் .உனக்கு என்னிடம் என்ன வேண்டும் …? சாதாரணமாக இவ்வளவு பொறுமைசாலி இல்லையே நீ . அதுவும் என்னிடம் …? “
அவன் கணிப்பில் உதடு கடித்தவளின் முகத்தில் சங்கடம் படர்ந்த்து .உண்மைதான் இப்போது விஸ்வேஸ்வரன் உபயோகித்த வார்த்தைகளுக்கு போடா …நீயும் உன் வேலையும் என்று தூக்கிப் போட்டு விட்டு போயிருக்க கூடியவள்தான்.ஆனால் …
” வ …வந்து உ…உங்களிடம் சாரி கேட்கவேண்டும் “
விஸ்வேஸ்வரனின் விழிகள் விரிந்தன. ” இன்ட்ரெஸ்டிங் .சாரி …நீ …என்னிடம் …வாவ் …சொல்லு …சொல்லு ..எதற்கு …ம் .அந்த விசயம் இருக்கட்டும் .முதலில் அந்த சாரியை கேட்டு விடேன் .விசயம் சொன்ன பிறகு கேட்கும் சந்தர்ப்பம் வருமோ என்னவோ …? ” தன் இரு கைகளையும் சுடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டு அவள் மன்னிப்பு கேட்க வசதியாக தன் ரோலிங் சேரில் கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்தான் .
” எவ்வளவு திமிர் ?இதற்கு மேலும் உங்களிடம் வேலை பார்ப்பேனென்றா நினைக்கிறீர்கள் ? ” மெல்லிய கத்தலுடன் டேபிள் மேல் இருந்த நோட் பேடை எடுத்து ராஜினாமா எழுத தயாராகும் கமலினியை எதிர்பார்த்து அவன் இருக்க , அவள் இன்னமும் விலகாத சங்கடத்துடன் அவனை பார்த்தபடி இருந்தாள் .
அவளது அமைதியில் புருவம் உயர்த்தியவன் தன் குறும்பை விடுத்தான். ” கமலினி என்ன விசயம் ? சாரி கேட்குமளவு தப்பு செய்பவளில்லையே நீ …? என்னம்மா ? “
” நா …நான் …நீ …நீங்கள் …உ…உங்களை தவறாக நினைத்துவிட்டேன் “
” புரியவில்லை .என்ன தவறாக நினைத்தாய் ? “
” வந்து …பா …பாரிஜாதம் மேடம் ….வ்வந்து …அவர்கள் …உங்கள் …”
கமலினியின் திணறலில் விஸ்வேஸ்வரனுக்கு பொறுமையில்லை .” உன் பாரிஜாத மேடத்திற்கு என்ன ? “
குறிப்பிடுகிறான் பார் ….உன் பாரிஜாத மேடமாம் ்இப்படி பொதுப்படையாக சொல்லி …சொல்லித்தான் …ஓடிய அவள் நினைவை இடையிட்டான் ….
” கமலினி எனக்கு உன்னளவு நேரம் இல்லை . சீக்கிரம் சொல்லு .இன்று பொலிடிசியன் ஒருவரது வீட்டிலிருந்து வைரம் வாங்க வருகிறார்கள் . கழுத்தில் போட்டிருக்கும் இந்த புதிய நகையோடு அவர்களை நீ அட்டென்ட் பண்ண வேண்டும் . நேரமாகிறது …”
” அ…அது …நா …நான் நீங்களும் பாரிஜாதம் மேடமும் ஹஸ்பென்ட் அன்ட் ஒய்ப் என்று தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன் ” உடைத்து விட்டாள. .
” வாட் …? ” அதிர்ச்சியில் விஸ்வேஸ்வரனின் முகம் கறுத்தது .
” அவர்கள் என் அண்ணி கமலினி .அவர்களை …நீ …எப்படி …? ” லேசான நடுக்கம் அவன் குரலில் .கமலினி அவனை இறைஞ்சுதலாக பார்த்தாள் .
” மன்னித்து விடுங்கள் .என் தவறுதான் .எம்.டி மேடம் , எம்.டி சார் என்று இங்கே நம் கடையில் எல்லோருமே உங்கள் இருவரைப் பற்றி பேசினார்கள் . அன்று கல்யாண வீட்டில் உங்கள் அம்மா மகன் , மருமகளென பேசினார்கள் .இதையெல்லாம் வைத்து …”
” இந்த சாதாரண விசயங்களை வைத்து எங்களை இணை கூட்டுவாயா நீ ? வேலை பார்க்கும் இடத்தின் குடும்ப விபரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளமாட்டாயா ? “
” தவறுதான் . அதென்னவோ தெரியவில்லை நான் இங்கே அப்பாயின்ட் ஆன முதல் நாளிலிருந்தே கடையின் பணியாளர்கள் எல்லோருமே சதாசிவம் சார் உட்பட என்னை கொஞ்சம் மரியாதையாக தள்ளியே நிறுத்தியிருந்தனர் .என்னிடம் உங்கள் குடும்ப விசயம் எதுவும் பேசுவதில்லை .எனக்கே தெரிந்திருக்கும் என நினைத்திருப்பார்களாயிருக்கும் . அத்தோடு ….” தயங்கி நிறுத்தினாள் .
” அத்தோடு …சொல்லிவிடு …மனதில் சேர்த்து வைத்திருக்கும் எல்லா குப்பைகளையும் மொத்தமாக இப்போதே கொட்டிவிடு ” லேசான உறுமலோடு வெளி வந்த்து விஸ்வேஸ்வரனின் குரல் .
” நீ …நீங்கள் எப்போதும் நேரடியாகவோ…மறைமுகமாகவோ பாரிஜாதம் மேடத்தை விரட்டிக் கொண்டும் வேலை ஏவிக் கொண்டும் …சில நேரம் மிரட்டிக் கொண்டும் கூட இருந்தீர்கள். இதையெல்லாம் வைத்து ….”
” உன் கற்பனையில் கண்டதையும் கொடி கட்டி பறக்க விட்டாயாக்கும் ? ” கோபக்கனல் அவன் குரலில் .உன் அநியாயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லையே …எனும்படியான வெறுமை பார்வை பார்த்தான் .
” அண்ணிக்கு தொழிலில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் கிடையாது . அப்படியே அவர்களை விட முடியாது .அவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்க , தொழிலிற்குள் அவர்களை இழுக்க என சில நேரங்களில் அவர்களிடம் கறாராக நடந்து கொள்ள வேண்டியதிருந்த்து . “
” ம் …சரிதான் சார் ..” மிக ஒப்புதலாக தலையசைத்தவளை இன்னமும் வெறித்தபடிதான் இருந்தான் .
” சோ …திருமணம் முடிந்து மனைவி , குழந்தையோடு இருப்பவன் உன்னிடம் அடுத்த காதலுக்கு ஐடியா கேட்கிறான் …எவ்வளவு உயர்ந்து எண்ணம் உனக்கு என் மேல் ? “
கமலினி தன் காது நுனியை விரலால் பற்றினாள் …சற்று முன் அவன் போன்றே .” சாரி சார் .மன்னிச்சிடுங்க ப்ளீஸ் “
இளக்கமற்ற இறுகல் பார்வையுடன் எழுந்து அவளருகே வந்தான் .அவனது கண்களின் கனல் இன்னமும் குறையவில்லை .
What’s your Reaction?
+1
20
+1
16
+1
3
+1
6
+1
2
+1
+1
3